முஸ்லிம்கள் மீது தாக்குதல் : லண்டனில் ஒருவர் பலி
23 Jun,2017
லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனில், மசூதியில் தொழுகையை முடித்து திரும்பியவர்கள் மீது, வேனில் வந்த மர்ம நபர் வெறித்தனமாக மோதியதில், ஒருவர் உயிரிழந்தார்; 10 பேர் காயமடைந்தனர். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரிட்டனில், சமீப காலமாக, பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த மூன்று மாதங்களில், இரண்டு பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ள நிலையில், லண்டன் நகரின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு மசூதியில், ரம்ஜான் மாதத்தையொட்டி, முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அசுர வேகத்தில் வேனை ஓட்டி வந்த நபர், மசூதி யில் இருந்து வெளியேறியவர்கள் மீது, வேனை மோதச் செய்தான். இதில் ஒருவர் படுகாயமடைந்து அதே இடத்தில் உயிரிழந்தார். காயமடைந்த, 10 பேர் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து, உள்துறை அமைச்சர், ஆம்பர் ரூட் கூறியதாவது:
மசூதியில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தவர்கள் மீது, ஒருவன் வேனை மோதச் செய்து தாக்குதல் நடத்தியுள்ளான்.
இது, பயங்கரவாத தாக்குதல் சம்பவமாக கருதப்படுகிறது. வேனில் வந்து தாக்குதல் நடத்திய, 48 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளான். அவனிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
வேனை ஓட்டி வந்த நபர், 'முஸ்லிம்கள் அனைவரையும் கொல்லுங்கள்' எனக் கூறியதாக, சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்
என, தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, பிரிட்டன் பிரதமர், தெரசா மே கூறுகையில், ''லண்டன் மசூதி அருகே நடந்த
சம்பவம், பயங்கரவாதமாக கருதப்படுகிறது. சம்பவத்தில்
உயிரிழந்தவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்,''
என்றார்.