தமிழகத்தை நேற்றும் சென்றடைந்த நான்கு ஈழ அகதிகள்
02 Jul,2014
இலங்கையில் இருந்து தனுஸ்கோடி அரிச்சல்முனைக்கு படகு மூலம் சென்ற நான்கு அகதிகளிடம் தனுஸ்கோடி கடலோர காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டம் தனுஸ்கோடி அரிச்சல் முனை கடற்பகுதியில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு இலங்கை அகதிகள் படகில் வந்து கொண்டிருப்பதாக அந்த பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு சென்ற தனுஸ்கோடி காவல்துறையினர் நான்கு பேரையும் கைதுசெய்து பொலிஸ் நிலையம் கொண்டுசென்றனர்.
இந்த நிலையில் காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் விஜயகுமார் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டார்.
மன்னார் மற்றும் வவுனியா பகுதிகளைச் சேர்ந்த 4 பேர் அகதிகளாக தமிழகம் தனுஷ்கோடியை இன்று அதிகாலை சென்றடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாங்குளத்தைச் சேர்ந்த சதீஷ்,வவுனியா குளத்துமோட்டையைச் சேர்ந்த ரவீந்திரன், வவுனியா தோணிக்கல்லைச் சேர்ந்தவர்களான சாந்தி மற்றும் மலர் ஆகிய நால்வருமே நேற்று மாலை மன்னாரில் இருந்து படகு ஒன்றில் தமிழகத்தைச் சென்றடைந்துள்ளனர்.
நள்ளிரவு தனுஷ்கோடி பகுதியில் உள்ள மணல் திட்டு அருகே மார்பளவு தண்ணீரில் தங்களை இறக்கிவிட்ட படகோட்டிகள் இலங்கைக்கு திரும்பி சென்றனர் என்றும் இரவு முழுதும் நடந்து வந்த தாம் இன்று காலை தனுஷ்கோடி காவல் நிலையத்தை அடைந்தனர் என்றும் அந்த நால்வரும் தெரிவித்தனர் என்று தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.