மாயமான விமானம் விரைவில் தெரியவரும்: ஆஸ்திரேலிய பிரதமர் நம்பிக்கை
11 Apr,2014
239 பேருடன் நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் முயற்சி உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ‘எம்எச் 370’ பீஜிங் சென்றபோது கடந்த மார்ச் மாதம் 8-ந்தேதி அதிகாலை 2.40 மணிக்கு மாயமானது. அந்த விமானம் என்ன ஆனது என்பது குறித்து திட்டவட்டமான தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், அந்த விமானம் இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
விமானம் மாயமானபோது விமானி அறையில் நடந்து என்ன, என்ன பேசப்பட்டது என்பதை அறிவதற்காக, அவற்றை பதிவு செய்து வைத்துள்ள கறுப்பு பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கறுப்பு பெட்டியில் இருந்து வருகிற ஒலியைக்கேட்டு, அது இருக்கிற இடத்தைத் தேடிக்கண்டு பிடிக்கும் பணியில் ஓஸன் ஷீல்டு என்னும் ஆஸ்திரேலிய போர்க்கப்பலும், ‘எச்.எம்.எஸ். எக்கோ’ என்னும் இங்கிலாந்தின் நீர்நிலைப்பரப்பு ஆய்வு கப்பலும் ஈடுபட்டுவருகின்றன. அப்போது மாயமான விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வெளியானது என கருதப்படுகிற ‘பிங்’ சமிக்ஞைகள் கடந்த 5-ந்தேதி 2 முறை கிடைத்தது.
இந்த சமிக்ஞைகள் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமையும் இரு முறை கிடைத்துள்ளது. இந்த 4 சமிக்ஞைகளுமே மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு வடமேற்கில் 2,280 கி.மீ. பகுதியை மையப்பகுதியாகக் கொண்டு, 57 ஆயிரத்து 923 சதுர கி.மீ. பரப்பளவில் தேடுதல் வேட்டை நடைபெறுவதகவும் டோனி அபோட் தெரிவித்துள்ளார். இந்த குறுகிய பிரதேசத்தில் மாயமான விமானத்தை தேடும் பணியில் 10 ராணுவ விமானங்கள், 4 பயணிகள் விமானங்கள், 13 கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. எனவே ஒரு சில தினங்களில் இந்த தேடுதல் வேட்டை முடிவுக்கு வரும், விமானத்தின் கதி உலகுக்கு தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.