கூட்டமைப்பு மீது சிறிலங்கா அரசு கடும் அதிருப்தி – கறைபடிந்த வரலாற்றைக் கொண்டவர்களாம்
கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு, சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து கருத்து வெளியிட்டுள்ள, சிறிலங்கா அமைச்சர், தினேஸ் குணவர்தன,
கொமன்வெல்த் மாநாடு, நெருங்கும் நேரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு தவறானது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பகுதியினர், அன்று தொடக்கம் தாய்நாடுக்கும் மக்களுக்கும் எதிராக செயற்பட்டு வருகின்றனர்.
53 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ள, கொமன்வெல்த் மாநாட்டை சிறிலங்காவில் கோலாகலமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இதனை எதிர்ப்பதாக அறிவித்திருப்பதில் ஆச்சரியப்பமில்லை.
யார் எந்தத் தீர்மானத்தை எடுத்தாலும், இது குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
கொமன்வெல்த் மாநாட்டுக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இதனை திட்டமிட்டு புறக்கணிப்பது, தாய்நாட்டிற்கும் அவர்களை நம்பி வாக்களித்த மக்களுக்கும் இழைக்கும் மிகப்பெரிய துரோகமாகும்.
தற்போது சிறிலங்காவுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைத்து வரும் பொருளாதார ரீதியான உதவிகளை நிறுத்தும் நோக்கிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்பட்டு வருகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு சிலர் தமிழ் தலைவர்களையே கொலை செய்த தீவிரவாதிகளுக்கு சாதகமாக செயற்பட்டவர்கள். இவர்களது வரலாறு கறைபடிந்த அத்தியாயமாகும்.
புலம்பெயர் தமிழர்கள் போடும் தாளத்துக்கு ஆடிப் பழகிய இவர்களால் சுயமாக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியவில்லை. ” என்று அவர் தெரிவித்துள்ளார்.
என்னை நீக்கக் கோரும் உரிமை விக்னேஸ்வரனுக்கு இல்லை” – ஆளுனர் சந்திரசிறி பதிலடி
தன்னை ஆளுனர் பதவியில் இருந்து நீக்கக் கோரும் அதிகாரம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு இல்லை என்று பதிலடி கொடுத்துள்ளார் வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி.
இராணுவப் பின்னணி கொண்டவர் ஆளுனராக வடக்கிற்குத் தேவையில்லை என்றும், அவரை நீக்கி விட்டு, சிவில் ஆளுனர் ஒருவரை சிறிலங்கா அதிபர் நியமிக்க வேண்டும் என்றும், வடக்கு மாகாணசபையின் முதல்நாள் அமர்வில் உரையாற்றிய, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி,
“மாகாணத்தின் ஆளுனர், சிறிலங்கா அதிபரின் பிரதிநிதி. எனினும் சிலர் ஆளுனரை நீக்க வேண்டும் என்று கோருகின்றனர்.
ஆனால் அது நடக்கப் போவதில்லை.
வடக்கு மாகாணத்தில் சிறிலங்கா அதிபரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காகவே அங்கே இருக்கிறேன்.
என்னை நீக்கக் கோரும் உரிமை விக்னேஸ்வரனுக்குக் கிடையாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.