நடுவானில் பாலுக்காகக் கதறிய குழந்தை!’ – தாய்ப்பால் கொடுத்து பசியாற்றிய பணிபெண்ணுக்குக் குவியும் பாராட்டுகள்
12 Nov,2018
பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண் ஒரு பயணியின் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விமானப் பணிப்பெண் ஒருவர் பயணியின் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாட்ரிசியா ஆர்கனோ (Patricia Organo) பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸில் விமானப்பணிப் பெண்ணாக உள்ளார். நவம்பர் 6 -ம் தேதி இவர் பணியில் இருந்தபோது அதிகாலையில் செல்லவிருந்த விமானத்தில் ஒரு தாய் பிறந்து சில மாதங்களே ஆன குழந்தையுடன் வந்துள்ளார்.
விமானம் புறப்படும் வரும் அமைதியாக இருந்த குழந்தை விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அழத் தொடங்கியுள்ளது. குழந்தையின் அழுகையை நிறுத்த அவரது தாய் முயற்சி செய்திக்கொண்டிருந்தார். ஆனால் எந்தப்பயனும் இல்லை. குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளது.
விமானப்பணிப்பென்இதனைக்கண்ட பாட்ரிசியா அந்தப் பெண்மணியிடம் ஏதேனும் உதவி வேண்டுமா எனக் கேட்டுள்ளார். குழந்தை பசியால் அழுகிறது என்றிருக்கிறார் அந்த தாய். தாய்ப்பால் ஊட்டுவதற்கு ஏற்பாடு செய்யட்டுமா என்று கேட்டுள்ளார்.
அதற்கு அந்தப்பெண்ணோ, இரவில் இருந்து விமானநிலையத்தில் இருக்கிறோம். விமானத்தில் ஏறுவதற்கு முன்பு தான் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்தேன். இப்போது பசியால் குழந்தை அழுகிறது.பால் பவுடர் எதுவும் கையில் இல்லை.என்னால் எதுவும் செய்ய முடியவில்லை எனக் கூறி அந்தப்பெண்ணும் அழத்தொடங்கியுள்ளார்.
விமானத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கப் பால் பவுடர்கள் இல்லாததால் என்ன செய்வதென்று தெரியாமல் பாட்ரிசியாவும் யோசித்துள்ளார். குழந்தைக்குத் தானே தாய்ப்பால் கொடுப்பது என்று முடிவு செய்தவர் இதுகுறித்து அந்தப்பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.
அந்தப்பெண் எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் திகைத்துள்ளார். பாட்ரிசியா குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்ததும் குழந்தை அமைதியாக இருந்துள்ளது.
இதுகுறித்து பாட்ரிசியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ விமானம் கிளம்பும் வரை எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. விமானம் புறப்பட்டது குழந்தை அழும் சத்தம் கேட்டது. குழந்தை பசியால் அழுவதையும் தன்னால் தாய்ப்பால் கொடுக்க முடியாததையும் தெரிவித்தார்.
இதனையடுத்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது என முடிவு செய்தேன். குழந்தை மிகவும் பசியாக இருந்தது. தாய்ப்பால் கொடுத்ததும் அழுகையை நிறுத்திவிட்டது.
அப்போது தான் அந்தத் தாயின் கண்களின் நிம்மதியைக் காண முடிந்தது. அந்தப்பெண் எனக்கு நன்றி தெரிவித்தார். இந்த உதவியைச் செய்வதற்கு நான் தகுதியானவளாக இருந்தேன். கடவுளுக்கு நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.