தசரா என்றால், பத்தாவது ராத்திரி என்று பொருள். `தசரா’ கொண்டாட்டம் என்றாலே, மைசூரில் நடைபெறும் தசரா விழாதான் நம் நினைவுக்கு வரும். ஆனால், அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல், தமிழகத்திலும் தசரா பண்டிகை கொண்டாடப்படும் திருத் தலம் குலசேகரப்பட்டினம்.
மைசூரில் நடைபெறும் விழா, தர்பார் விழா என்றால், நம் குலசேகரப் பட்டினத்தில் நடைபெறும் தசரா விழாவானது தவக்கோலம் கொண்டு, விரதம் அனுஷ்டித்துக் கொண்டாடப் படும் பக்திப் பெருவிழா!
பாண்டியரின் தலைநகராக திருநெல்வேலி இருந்த காலத்தில், மன்னர் குலசேகர பாண்டியனின் கனவில் குலசை முத்தாரம்மன் காட்சி அளித்ததாகவும், அதன் காரணமாக இந்த ஊர் ‘குலசேகரன் பட்டினம்’ என்று அழைக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
ஒருமுறை குலசேகரபாண்டியன் இந்த ஊரில் தங்க நேர்ந்தபோது, ஊரின் தென்பாகத்தில் ஒரு விநாயகர் கோயிலைக் கட்டினார். அந்த விநாயகரின் பெயர் ‘மும்முடி காத்த விநாயகர்’. சேர, சோழ மன்னர்களும் வெவ்வேறு காலங்களில் இந்த ஊரை தங்கள் வசப்படுத்தியதாகத் தெரியவருகிறது. அதனால்தான் இவருக்கு ‘மும்முடி காத்த விநாயகர்’ என்று பெயர் ஏற்பட்டது என்றும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது!
முன்னொரு யுகத்தில் இந்தப் பகுதியில் வரமுனி என்பவர் வசித்தார். ஒருமுறை அகத்தியர் இந்த வழியாக வந்தபோது, வரமுனிவர் அவரைக் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தியதால், சாபம் பெற்றார். அதன் விளைவாக மகிஷாசுரனாக மாறி, மற்ற முனிவர்களையும் மக்களையும் துன்புறுத்தி வந்தார். அன்னை சக்தி தோன்றி மகிஷனை சம்ஹாரம் செய்தாள்.
அசுரனாக இருந்தாலும் பூர்வாசிரமத்தில் முனிவராக இருந்ததால், மகிஷனை சம்ஹாரம் செய்த அம்பிகையை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. தோஷம் நீங்க வேண்டி அம்பாள் சிவபெருமானைத் தியானித்து தவம் இருந்தாள். அம்பிகையின் தவத்துக்கு இரங்கி சிவபெருமான் ஞானமூர்த்தீஸ்வரராக தரிசனம் தந்த தலம்தான், குலசை திருத்தலம்.
ஆங்கிலேயர்கள் கன்னியாகுமரிக்கு புறவழிச் சாலை அமைக்க குலசேகரப்பட்டினத்தில் தேர்வு செய்திருந்த இடத்தில் கோயிலின் புற்றும் மரமும் தடையாக இருந்தன. ஆகவே, மரத்தை வெட்ட முடிவெடுத்தனர். அப்படி மரத்தை வெட்டிய போது, எந்தக் கிளையை வெட்டினாலும் அதிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்தது.
சுற்றியிருந்தவர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றபோது, அங்கிருந்தவர்களில் ஒருவர் மரத்தின் அடிப்பகுதியை மற்றவர்களுக்குச் சுட்டிக் காட்டினார். அங்கே இறைவனின் முகமும், இறைவியின் முகமும் காணப்பட்டன. எனவே, மக்கள் அந்தப் புற்றையே இறைவியாக பாவித்து வழிபடத் தொடங்கிவிட்டனர்.
கோயிலில் அம்மன் விக்கிரகம் பிரதிஷ்டை செய்ய விரும்பிய அர்ச்சகரின் கனவில் தோன்றிய அம்மன், ‘என் திருவுருவை குமரிக்கு அருகிலுள்ள மயிலாடியில் காண்க’ என்று சொல்லி மறைந்தாள். அதன்படி, மயிலாடிக்குச் சென்ற அர்ச்சகர், அங்கு தயாராக இருந்த சிலையை வாங்கி வந்து இத்தலத்தில் பிரதிஷ்டை செய்தார்.
ஞானமூர்த்தீஸ்வரர், முத்தாரம்மனோடு ஒரே பீடத்தில் எழுந்தருளியிருக்கிறார். அதற்குக் கீழ் சுயம்பு உருவில் இருவரும் காட்சியளிக்கின்றனர். இந்தத் தலத்தில் சக்தியின் மூன்று அம்சங்களான இச்சா, கிரியா, ஞானம் ஆகியவற்றின் மொத்த உருவமாய் அன்னை விளங்குகிறாள்.
முத்தாரம்மன் ஞானமுடி சூடி, நான்கு கரங்களுடன், வலக் காலை மடித்து இடக் காலை தொங்கவிட்ட நிலையில் சுகாசனக் கோலத்தில் காட்சி தருகிறாள். சுவாமி இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறார். சுவாமியின் வலக் கரத்தில் செங்கோல் ஏந்தியுள்ளார்.
பாண்டிய மன்னர்கள் முத்துகளைக் குவித்து தேவியாக வழிபட்டனர். அவர்கள் வழிபட்ட முத்துகளிலிருந்து தேவி தோன்றியதால், அம்மனுக்கு முத்தாரம்மன் என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மேலும், முத்து முத்தாகத் தோன்றும் அம்மை நோயை ஆற்றுவதால், ‘முத்து+ஆற்று+அம்மன்’ முத்தாரம்மன் என்ற பெயர் ஏற்பட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.
ஞானமூர்த்தீஸ்வரர் ஞானத்தையே திருமேனியாகக் கொண்டவர். ஞானம் மற்றும் ஈகையின் வடிவமாக இருப்பதால், சுவாமிக்கு ஞானமூர்த்தீஸ்வரர் என்ற பெயர் வழங்கலாயிற்று.
இந்தத் தலத்தில் சுவாமியின் ஆற்றலை அம்மன் வாங்கி சிவ மயமாகவும், அம்பாளின் ஆற்றலை சுவாமி வாங்கி சக்திமயமாகவும் காட்சி தருகின்றனர். இந்த நிலை, ‘பரிவர்த்தன யோகநிலை’ எனப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வழிபாட்டு முறைகளே இங்கேயும் கடைப்பிடிக்கப்படுகின்றன.
தினமும் நான்கு கால பூஜை நடைபெறுகின்றன. அர்த்தஜாம பூஜை விசேஷமானது. இந்தப் பூஜையை தரிசித்தால், மரணபயம் நீங்கும் என்பது நம்பிக்கை. வெள்ளிக்கிழமை இரவு வரும் ராகுகால வேளையான 10.30 முதல் 12 வரை நடைபெறும் பூஜையில் பெண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.
ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய்க் கிழமையன்று சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அம்மன் திருத்தேர் பவனி நடைபெறும். பௌர்ணமிதோறும் தவறாமல் திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது.
ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் அம்மனுக்கு வருஷாபிஷேகம் நடை பெறுகிறது. அன்று இரவு திருத்தேர் பவனியும் நடைபெறும்.
அம்மனுக்கு இரவு புற்றுமண், மஞ்சள்பொடி, எண்ணெய் கலந்து சாத்தப்படும். மறுநாள், ‘திருமஞ்சனைப் பிரசாதம்’ என்ற பெயரில் பக்தர்களுக்கு வழங்கப்படும். இந்தப் பிரசாதத்தை சிறிது உட்கொண்டு, நெற்றியில் பூசிக் கொண்டால், தீராத நோய்களும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சமுத்திரமே இந்தக் கோயிலின் தீர்த்தமாகத் திகழ்கிறது. இது வேறெந்த சக்தி தலங்களிலும் இல்லாத சிறப்பு. கடலில் நீராடி முத்தாரம்மனையும், ஞானமூர்த்தீஸ்வரரையும் தரிசித்தால், கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.
சுமார் 50 வருஷத்துக்கு முன்பு இந்த ஊரில் இருந்த சேதுப் பிள்ளை என்பவரும், அவருடைய செட்டியார் நண்பர் ஒருவரும் சேர்ந்துதான் குலசேகரப்பட்டினத்தில் தசரா விழாவைத் தொடங்கிவைத்தனர். ஆரம்பத்தில் சில நூறுபேருடன் தொடங்கிய தசரா விழா, இன்றைக்குப் பல லட்சம் பக்தர்கள் கூடும் விழாவாகக் கோலாகலமாக நடைபெறுகிறது.
குலசையின் பிரசித்திபெற்ற தசரா திருவிழாவின்போது, நவராத்திரி முதல் மூன்று நாள்கள் அம்மன் துர்கை, விஸ்வகர்மேஸ்வரர், பார்வதி ஆகிய திருக்கோலங்களில் வீதியுலா வருவாள். இந்த நாள்களில் அம்மனைத் தரிசிப்பதன் மூலம் ராகு தோஷம் நீங்கி, திருமணம் கூடி வரும் என்பது ஐதீகம்.
அடுத்த மூன்று நாள்களில் அம்மன் பாலசுப்பிரமணியர், நவநீத கிருஷ்ணன், மகிஷாசுரமர்த்தினி ஆகிய வடிவங்களில் வீதியுலா வருகிறாள். இந்த மூன்று நாள்களில் அம்மனைத் தரிசிப்பதன் மூலம், குழந்தை பாக்கியம், காரியங்களில் வெற்றி, நீடித்த ஆயுள் கிடைக்கும்.
இறுதி மூன்று நாள்களில் ஆனந்த நடராஜர், மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய திருவடிவங்களில் அம்மன் வீதியுலா வருவாள். இந்த நாள்களில் அம்மனைத் தரிசிப்பதன் மூலம், கல்வி, செல்வ வளம், வீடுபேறு ஆகிய பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ‘சூரசம்ஹாரம்’ பத்தாவது நாளான தசமி திதியில் நடைபெறுகிறது. அன்று மாலை அம்மன் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் கடற்கரையில் உள்ள சிதம்பரேஸ்வரர் கோயிலுக்குப் புறப்படுகிறாள். அம்மனுடன் காளி வேடம் மற்றும் பல வேடங்கள் தரித்த பக்தர்களும் சென்று, சம்ஹாரம் நடைபெறும் திடலில் கூடுகின்றனர்.
கடற்கரை திடலுக்கு வந்து சேரும் அம்மன், மகிஷனை சம்ஹாரம் செய்து வெற்றி வாகை சூடியதும், சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு எழுந்தருளுவாள். அங்கு அம்பிகைக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். மறுநாள் காலையில் அம்மன் பூஞ்சப்பரத்தில் வீதியுலா வருவாள். மாலை கோயிலை அடைந்ததும் கொடி இறக்கப் பட்டு, சுவாமி, அம்மன், பரிவார மூர்த்திகளின் காப்பு களையப்படும். காப்பு கட்டிக்கொண்டு விரதமிருந்த பக்தர்களும் காப்பு களைந்துவிடுவார்கள்.
விழாவின் 12-வது நாள் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்த அம்மனின் உக்கிரத்தைத் தணிவிப்பதற்காக பாலபிஷேகம் நடைபெறும். அன்றுடன் தசரா விழா நிறைவுபெறும்.
விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் 48 நாள்கள் விரதம் இருப்பார்கள். அத்துடன், தசரா விழா நடைபெறும் நாள்களில், பல்வேறு வேடங்கள் புனைந்து வீடு வீடாகச் சென்று தர்மம் பெற்று, கோயிலில் சேர்ப்பிக்கின்றனர். முத்தாரம்மனே பல வேடங்களில் சென்று தர்மம் பெறுவதாக ஐதீகம்.
உடல் நலம் பாதிப்பு முதலாக தங்களின் பல்வேறு பிரச்னைகள் தீரவேண்டும் என்று அம்மனை வேண்டிக்கொண்டு, வேடம் கட்டுவார்கள் பக்தர்கள். பிரார்த்தனை நிறைவேறியதும், நன்றிக் கடனாக வேடம் கட்டுவதும் உண்டு. இப்படி, வேண்டுதலின் பொருட்டு வேடம் புனைபவர்கள் மூன்று வருடங்கள் வேடம் புனைந்து கோயிலுக்கு வருவார்கள்.
மூன்று வருடங்களுக்குப் பிறகும் வேடம் புனைந்து வர விரும்பும் பக்தர்கள், அம்மனிடம் பூ போட்டு உத்தரவு பெறவேண்டும்.
குலசையில் சூரசம்ஹாரம், முற்காலத்தில் காவலர் குடியிருப்பு பகுதியில் மிகவும் குறுகலான இடத்தில் நடைபெற்று வந்தது. பக்தர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு 1989-ம் வருடம் முதல் சிதம்பரேஸ்வரர் கோயில் வளாகத்துக்கு மாற்றப்பட்டது. பின்னர் 1998-ம் வருடம் முதல் கடற்கரைப் பகுதியில் நடைபெற்று வருகிறது.
தன் ஆலயத்தில் மணியோசை கேட்கவேண்டும் என்று திருவுள்ளம் கொண்ட முத்தாரம்மன், மங்கலக்குறிச்சியைச் சேர்ந்த சுப்பையா பிள்ளை என்பவரின் கனவில் தோன்றி, ‘நாளை உன் கடைக்கு வரும் உளுந்து மூட்டையில் பணப் பை ஒன்று இருக்கும். அந்தப் பணத்தைக் கொண்டு ஆலய மணி ஒன்றைச் செய்து என் கோயிலில் கட்டு’ என்று உத்தரவிட்டாளாம். அதன்படி 58 கிலோ எடையுள்ள பிரமாண்டமான மணி ஒன்றைச் செய்து, 1977-ம் வருடம் அக்டோபர் மாதம் 11-ம் தேதி ஆலயத்தில் கட்டினார் அந்தப் பக்தர். இன்றும் அந்த மணி ஒலித்துக்கொண்டிருக்கிறது.
1983-ம் வருடம் கோயிலில் கொடிமர மண்டபம் கட்டும் பணியைத் தொடங்க திட்டமிட்டனர். ஆனால், போதுமான தண்ணீர் வசதி இல்லை. ஆகவே, பூமிக்கடியில் தொட்டி கட்டி, வண்டிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து தொட்டியில் நிரப்பி, அதைக் கொண்டு மண்டபம் கட்ட முடிவு செய்திருந்தனர். ஆனால், அவர்களுக்குச் சிரமம் கொடுக்க விரும்பாத முத்தாரம்மன், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மழை பொழியச் செய்து, மண்டபம் கட்டும் பணி சிரமமில்லாமல் நடைபெற அருள்புரிந்தாளாம். இன்றைக்கும் அன்னையின் அருளாடல்களும் அற்புதங்களும் தொடர்ந்தவண்ணம் உள்ளன.
தூத்துக்குடி மாவட்டம், செந்தில் அழகன் அருளாட்சி புரியும் திருச்செந்தூரிலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது குலசேகரப்பட்டினம்.
இந்த வருடம், வரும் அக்டோபர் 10-ம் தேதி புதன் கிழமையன்று (புரட்டாசி-24) கொடியேற்றத்துடன் தொடங்கும் தசரா திருவிழா, 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. அக்டோபர் 19-ம் தேதி விஜய தசமியன்று சூரசம்ஹாரம் நடைபெறும்.
அன்னை முத்தாரம்மனின் அருள் பெருகும் இந்தத் திருவிழாவில் நாமும் கலந்துகொண்டு, அளவில்லா வரம்பெற்று வருவோம்.