தாய்-மகன் எரித்துக்கொலை.. காரணம் என்ன.?
14 Mar,2018
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மந்தவெளி பகுதியை சேர்ந்தவர் சரவணன்(வயது 35). மாற்றுத் திறனாளி. இவரது மனைவி கனகா(30). இவர்களுக்கு கார்த்திகா(7), என்ற ஒரு மகளும், சிவசந்திரன் என்ற 10 மாத ஆண் குழந்தையும் இருந்தனர்.
சரவணன் மாற்றுத்திறனாளி என்பதால் வேலைக்கு எங்கும் செல்லவில்லை. அவரது தந்தை பால்ராஜ், தாய் விஜயா ஆகியோர் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ஆவார்கள். அவர்களுக்கு வரும் பென்சன் பணத்தை கொண்டு சரவணன் குடும்பம் நடத்தி வந்தார்.
பால்ராஜீம், விஜயாவும் கள்ளக்குறிச்சியில் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தனர். நேற்று இரவு சரவணனும், அவரது மகள் கார்த்திகாவும் வீட்டின் உள் பகுதியில் படுத்து தூங்கினார்கள். கனகாவும், கைக்குழந்தை சிவசந்திரனும் வீட்டின் முன் அறையில் பாயில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர்.
நள்ளிரவில் 1ண மணியளவில் திடீரென்று வீட்டில் தீபற்றி எரிந்தது. வீடு முழுவதும் ஒரே புகை மயமாக இருந்தது. வீட்டில் உள்ள டியூப் லைட்டுகள் வெடித்து சிதறின. கனகாவும், சிவசந்திரனும் தீயில் சிக்கி உடல் கருகினார்கள்.
சிறிது நேரத்தில் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். வீட்டின் பின்பகுதியில் படுத்திருந்த சரவணன் தீயில் சிக்காமல் உயிர்தப்பினார். அவர் வீடு தீ பற்றி எரிவதை பார்த்து அலறினார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு கனகாவும், சிவசந்திரனும் உடல் கருகி பிணமாக கிடந்தனர். உடனடியாக கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
துணை போலீஸ் சூப்பிரண்டு கோமதி, இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அங்கு பிணமாக கிடந்த கனகா, சிவசந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சரவணனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர் இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. என்னால் எழுந்து கூட நடக்க முடியாது. வீட்டில் புகை வந்தவுடன் எழுந்து வந்து பார்த்தேன். என் மனைவியும், குழந்தையும் உடல் கருகி கிடந்தார்கள். அவர்களை நான் இழந்து விட்டேன் என்று கதறி அழுதார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சரவணனின் மகள் கார்த்திகாவிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
சரவணன் வீட்டிற்குள் நள்ளிரவில் ஜன்னல் வழியாக பெட்ரோலை ஊற்றி கனகாவையும், சிவசந்திரனையும் மர்ம கும்பல் எரித்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா? இல்லை வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்று போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சம்பவ இடத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் விரைந்து சென்று பார்வையிட்டார். அந்த பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே வெள்ளாம்புத்தூரில் தாய், மகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படவில்லை. இந்தநிலையில் கள்ளக்குறிச்சியில் தாய், மகன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.