ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தினால் ஆயுள் முழுவதும் மது குடிக்கலாம்
11 Nov,2017
சீனாவில் ஷாங்காய் பகுதியில் ஆண்டு தோறும் நவம்பர் 11-ந்தேதி மிகப்பெரிய வர்த்தக திருவிழா நடைபெறுகிறது. அப்போது பல பெரிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குவது வழக்கம்.
இந்த திருவிழா இன்று நடைபெறும் நிலையில் ஷியாங் ஷியோ போல் என்ற மது கம்பெனி தனது வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய சலுகையை வழங்கியுள்ளது.
இன்று ரூ.1 லட்சம் முன் பணம் அதாவது 11, 111 யுவான் செலுத்துபவர்களுக்கு ஆயுள் முழுவதும் பைஜு எனப்படும் மது வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ‘பைஜு’ என்பது தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை சீன வகை மதுவாகும்.
இச்சலுகை 99 அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு மாதந்தோறும் 12 பெட்டிகள் மது வழங்கப்படும்.
ஒவ்வொரு பெட்டியிலும் 12 பாட்டில்கள் வீதம் இருக்கும். அவருக்கு இவை ஆயுள் முழுவதும் வழங்கப்படும். ஒருவேளை அவர் 5 ஆண்டுக்குள் மரணம் அடைந்துவிட்டால் அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு இச்சலுகை அளிக்கப்படும். இச்சலுகையை பெற சீன குடிமகன்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.