சிறந்த மந்திரவாதி ஆவதற்கு முதலில் நா வன்மை அவசியம் ஆகிறது, உலகில் உள்ள எல்லோரையும் ஓன்று கூட்டி ஒருத்தர் விடாமல் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு சாஸ்த்திரத்தை நா வன்மையால் கூறமுடியும், "நீங்கள் எல்லோருக்கும் உதவி செய்வீர்கள் உங்களுக்கு உதவி செய்ய யாருமில்லை" என்று கூறினால் யார்தான் மறுக்க போகிறார்கள். இது சாதாரண மனித மனோன் நிலை. இதுதான் மந்திரவாதிகளின் முதல் அஸ்திரம்.
இரண்டாவது சமயோசிதம், உதாரணம் மந்திரவாதியிடம் நீங்கள் சென்றால் நீங்கள் விபரம் சொல்லுவதற்கு முன்பே அவர் விபரம் சொல்லுவார் இப்படி, "தொலைத்து விட்டு வந்திருக்குறீர்கள்" என்பார், உடனே நாம் ஏதாவது தொலைத்துவிட்டுத்தான் அங்கு போயிருந்தோம் என்றால் உடனே நாம் "கிடைக்குமா? கிடைக்காதா?" என்போம். அவருக்கு நிச்சயம் ஆகிவிடும் நாம் தொலைத்து விட்டுதான் வந்திருக்கிறோம் என்று. ஒரு வேளை நாம் வீட்டில் உள்ளவரின் நோய் சம்பந்தமாக சந்திக்க சென்றிருந்தால், நாம் யோசிப்போம் நாம் நோய்க்கு மாந்திரிகம் பார்க்க வந்திருக்கிறோம் இவர் தொலைத்த கதை சொல்கிறார் என்று, இப்போதான் சமயோசிதம் தேவை. நாம் யோசிப்பதை பார்த்ததும் அவர் அடுத்த பிட்டை போடுவார், "வாழ்கையில் நிம்மதி சந்தோசம் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு வந்திருக்குறீர்கள்" என்று, நாம் அவுட். வீட்டில் யாரும் நோய்வாய்ப் பட்டு இருக்கும் போது மேற்சொன்னவை இருக்காது என்பது எல்லோருக்கும் தெரியும். அதை கொஞ்சம் ஏற்ற இறக்கங்ககளுடன் சொல்ல வேண்டும்.
மூன்றாவது வார்த்தை ஜாலங்ககள், சொல் மயக்கம் வரும் படி பேசுவது, இப்போ நம்மிடம் சொல்லுவார், "எல்லாவற்றையும் பார்க்கலாம், முதலில் உங்கள் வீட்டு முற்றத்தில் கால் படாத மண்ணை கைபடாமல் கொண்டுவா" என்பார், சின்ன விசயம்தான் ஆனால் சட்டென்று விளங்காது. அது மட்டுமல்ல, "ஒரு கிடா ஆடு வேண்டும் பலி கொடுக்க, ஆனால் அதன் தாயிக்கு இதற்க்கு பிறகு குட்டி இருக்க கூடாது" என்றெல்லாம் நம்மை சுத்தலில் விடுவார்கள், எல்லாம் நம்மை பிரமிக்க வைக்கும் வார்த்தைகள். ஒன்னும் இல்லை முதலில் சொன்னதற்கு நம் முற்றத்தில் பள்ளம் தோண்டி அதற்குள் இருக்கும் மண்ணை கையில் கிளவுஸ் எதாவது போட்டு எடுக்க வேண்டும், மற்றது தாய் இறந்துவிட்ட ஆட்டு கிடா வேண்டும் அவ்வளவுதான்.ஆனால் இதெல்லாம் எதற்கு கேட்கிறார்கள் என்பதுதான் இறைவனுக்கு வெளிச்சம்.
முதலில் இந்த மந்திர வேலைகளை மூன்று பிரிவாக பிரித்து நம்மிடம் இருந்து பணமாக பொருளாக ஆட்டையப் போடுவார்கள்.
பேய் பிசாசுகளை அடையாளம் காணுதல் உறுதிப் படுத்தல்
அவற்றை நம் இடத்திலிருந்தும் , பாதிக்கப்பட்டவரிடம் இருந்தும் விரட்டுதல்
இனி அவைகள் நம்மிடம் அண்டாதவாறு பாதுகாப்பு செய்தல்
நம் இடத்தில் இருக்கும் பேய் பிசாசுகளை அடையாளம் காண பலமுறைகள் உண்டு. உதாரணத்துக்கு ஒரு முறை, நம் வீட்டிக்கு மந்திரவாதி வருவதற்கு முன்பு வாங்க வேண்டிய பொருட்கள் லிஸ்ட் ஓன்று கொடுப்பார். அதில் முக்கியமாக மூன்று வர்ணத்தில் கோழி முட்டை என்று இருக்கும். மூன்று வர்ணத்தில் தான் உலகத்தில் கோழி முட்டை இருக்கின்றது என்பது வேறு விடயம் (பிரவுன், பழுப்பு, நல்ல வெள்ளை என்பன அவை). குறித்த நாளில் மந்திரவாதி நம் வீட்டுக்கு வருகை தந்து, வாங்கிய வாங்கப் போகின்ற காசுக்கு வஞ்சகம் இல்லாமல் மந்திரம் சொல்லிவிட்டு அந்த மூன்று முட்டைகளையும் பரிசோதித்து விட்டு அதில் நல்ல வெள்ளை முட்டையை தேர்ந்தெடுத்து வீட்டு முற்றத்தில் அவர் கையால் 2 அடி வரை குழி தோண்டி மந்திரம் மீண்டும் சொல்லி முட்டையை அவர் கையாலேயே நாம் எல்லோரும் பார்க்க குழியில் வைத்து மந்திர தண்ணிய அதன் மீது தெளித்து குழியை மூடி விடுவார், பின் ஒரு மணி நேரம் கழித்து வீட்டில் உள்ள திடகாத்திரமான ஆணை கூப்பிட்டு அந்த குழியை மீண்டும் தோண்டி அந்த முட்டையை எடுத்து வர சொல்லி விட்டு நாம் கொடுத்த அவர் சிற்றுண்டியில் கவனமாக இருப்பார். தோண்ட சென்றவர் அன்றைய பொழுதுக்கு தோண்டினாலும் மசகு எண்ணை வந்தாலும் வருமே தவிர முட்டை கிடைக்காது. உடனே மந்திரவாதி அந்த இடத்துக்கு வந்து குழியை பரிசோதித்து முட்டையை கொண்டு சென்ற பேயின் பூர்வீகமும் அது ஏன் நம்மை பிடித்தது என்ற வெவரமும் அதற்க்கு என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்லுவார்.
நடந்தது இதுதான், தங்கம் வேலைகளுக்கு பாவிக்கப்படும் வெண்காரம் பற்றி நம்மில் பலபேருக்கு தெரிந்திருக்கும். ஆனால் அதன் இன்னொரு தன்மை இருக்கிறது, காற்றுப் பட்டால் திண்மம் ஆகிவிடும், அப்படி அதனை திண்மமாக்கி முட்டை வடிவத்தில் மந்திரவாதி சீவி வைத்துக் கொள்வார் யாருக்கும் தெரியாமல். இந்த முட்டை வெவகாரத்தில் நல்ல வெள்ளை முட்டையை தேர்ந்து எடுத்ததுக்கும் காரணம், இந்த வெண்காரத்தால் செய்யப்பட்ட முட்டை அதே மாதிரி கலரில் இருப்பது ஆகும். உண்மையான கோழி முட்டையையும் இந்த வெண்கார முட்டையையும் மாற்றுவதுதான் மந்திரவாதியின் உழைப்பு தந்திரம். பின் அவர் கையால் வெண்கார முட்டையை குழியுனுள் வைப்பதும் யாரும் அதனை கண்டு பிடிக்கக் கூடாது என்பதற்காக தான். அதன் பின் மந்திரத் தண்ணி தெளிப்பதில் தான் விசயமே இருக்கிறது அது மந்திரத் தண்ணி அல்ல. வெறும் பச்சத்தண்ணி தான். வெண்காரத்தில் ஒரு தன்மை உள்ளது, தண்ணீர் பட்டவுடன் கரைந்து விடும், விஞ்ஞான முறைப்படி சொல்வதானால், தண்ணீர் பட்டவுடன் எச்சமில்லாமல் தகனமடையும். இப்போ புரிந்திருக்கும் முட்டை எங்கு போயிருக்கும் என்று.
ஆயிரம் வழிகளில் பேய் பிசாசுகளை அடையாளம் காணலாம்
முதலில் நம்மை பிடித்த பேய் பிசாசு பற்றி மந்திரவாதி கொடுப்பார் பாருங்க விளக்க வெண்ணை ஒண்ணு மதிமயங்கி போயிடுவோம், அது ஏன் வந்தது, நம்மை ஏன் பிடித்தது, அதற்க்கு இப்போ என்ன வேணும், எப்படி விரட்டுவது என்று அள்ளி விடுவாரு பாருங்க ஏதோ அவருதான் அதை வளர்த்து நம்ம மேல ஏவி விட்டவர் மாதிரி இருக்கும். அப்புறம் அதை விரட்ட ஒரு நல்ல நாள் பார்த்து நம்ம கையில் ஒரு பெரிய லிஸ்ட் கொடுப்பார், அதில் இருக்கும் பெரும்பாலான பொருட்கள் ஏன் வாங்க சொன்னார் என்று நமக்கும் புரியாது அவருக்கும் தெரியாது. இருந்தாலும் வாங்கி வைப்போம். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று, இந்த மாந்திரிகத்திக்கு மிக முக்கியமாக தேவைப்படும் ஓன்று ரெண்டு பொருட்கள் நம்மை வாங்க சொல்ல மாட்டார் அவரே வாங்கிக் கொள்வதாக் சொல்லி அதற்கும் வேறையாக நம்மிடம் பணத்தை ஆட்டையப் போட்டு விடுவார். இப்படி பேய் விரட்டுவதற்கு பல முறைகள் இருந்தாலும் உதாரணத்திக்கு ஒரு முறையை பார்ப்போம்.
குறித்த நாளில் நம் வீட்டிற்க்கு வரும் மந்திரவாதி, மந்திர வேலைகளுக்கு உரிய ஆயத்தங்களை செய்து விட்டு, பாதிக்கப் பட்டவரை அவ்விடத்தில் தன் முன்னால் வைத்து நாலு மணி நேரம் மந்திரம் சொல்லி பாதிக்கப் பட்டவரை படுத்தும் பாடு இருக்கே, உண்மையில் பேய் இருந்தால் கூட அப்படி ஒரு சித்திரவதை பண்ணி இருக்குமா என்பது சந்தேகேமே. இதையெல்லாம் முடித்து விட்டு கிளைமாக்ஸ் ஆரம்பமாகும். ஒரு நன்றாக சீவி எடுக்கப்பட்ட தேங்காய் சிரட்டை (இந்த சிரட்டைதான் நம் வீடும் நம் இடமும் என்று நமக்கு சொல்லிக் கொடுப்பார்) ஒன்றில் மந்திரவாதி "மந்திரித்து" கொண்டு வந்த ஏழு சுண்ணாம்பு சிப்பிகளை போடுவார் (மூன்று, ஏழு, பதினொன்று என்ன கணக்கு என்று அவர்களுக்கும் தெரியாது), அதுதான் நம் வீட்டில் உள்ள பேய்கள் என்று விளக்கம் வேறு. பின் அவரே கொண்டுவந்த மந்திர தண்ணியை அதனுள் ஊற்றி (அதுதான் அவரது மந்திர சக்தியாம்) மந்திரம் சொல்ல தொடங்குவார். இப்போது மந்திரம் உச்சத்தை அடையும். இந்த நேரத்தில் சிரட்டையினுள் இருக்கும் சிப்பிகள் மெதுவாக ஒவ்வொன்றாக தானாக வெளியேறத் தொடங்கும். எல்லாம் வெளியேறி முடிந்தவுடன் மந்திரவாதி முகத்தை பார்க்கவேண்டும். மலையைப் பிளந்த பெருமிதம் தெரியும். நமக்கு சர்வமும் ஒடுங்கிப் போய் அவர் தெய்வமாக தெரிவார். பின் அவருக்கு உரியதை பயபக்தியோடு கொடுத்து வழியனுப்பி வைப்போம்.
உண்மையில் ஒரு பாத்திரம் போன்ற ஒன்றில் இருந்து உள்ளே போடப்பட்ட ஒரு சடப் பொருள் தானாக அசைந்து வெளியேறினால் அதற்கு காரணமானவனை தெய்வம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல. இங்கு நடந்தது இதுதான், சிப்பிகள் உண்மையானவை, அதில் எந்த மாற்றமும் இல்லை, தேங்காய் சிரட்டையும் உண்மையானது அதிலும் எந்த மாற்றமும் இல்லை, ஆனால் ஏமாற்று வித்தை இருப்பது மந்திரவாதி கொண்டு வந்த மந்திர தண்ணியில் தான், அது மந்திர தண்ணி அல்ல, பேட்டரி அசிட், பள்ளியில் விஞ்ஞான பாடத்தை ஒழுங்காக படித்தோருக்கு இப்போது விளங்கி இருக்கும். சுண்ணாம்பு சிப்பி ஒரு காரம், பேட்டரி அசிட் ஒரு அமிலம். எப்போதும் இரண்டுக்கும் ஒத்துக் கொள்ளாது, அதிலும் சுண்ணாம்பு சிப்பி பலகீனமானது. அதனால் தான் பேட்டரி அசிட் தாக்கம் தாங்காமல் தானாக நகரத் தொடங்கும். அனால் இங்கு தேங்காய் சிரட்டை எடுத்ததன் காரணம், வேறு பாத்திரத்தில் இதனை செய்தால் காரமோ அமிலமோ அதனுடன் தாகம் புரிந்து மந்திரவாதிக்கு தேவையான பெறுபேறு கிடைக்காமல் போகலாம் என்பதால் தான்.
முதலில் நம்மிடம் சொல்லுவார், ஒரு கிடா ஆடு வேண்டும், அதன் தாயிக்கு இதன் பிறகு குட்டி இருக்கக் கூடாது என்று. நமக்கு தலை சுத்திப் போகும் என்ன சொல்கிறார் என்று புரிய. ஒன்றும் குழம்ப வேண்டாம், தாயில்லாத ஆட்டுக்குட்டியை தான் அப்படி சுத்தலில் விட்டு சொன்னார். நேரிடையாக சொன்னால் நமக்கும் அவருக்கும் வித்தியாசம் இல்லாமல் போகுமாம். இதைத் தேடி கண்டுபிடிக்கவே நமக்கு கொஞ்சம் நாளாகும், அதற்குள் மந்திரவாதியும் பூஜைக்குரிய ஆயத்தங்களை செய்யத் தொடங்குவார். எப்படியும் ஆட்டை கண்டு பிடித்து கொண்டுபோனால், அதனை காலையில் வெட்டி சமைத்து சாப்பிட்டுவிட்டு தலையை மட்டும் எந்த சேதாரமும் இல்லாமல் கொண்டு வந்து தரச் சொல்லுவார், நாமும் அவர் மேல் கொண்ட பாசத்தால் ஆட்டுக் கறியும், தலையையும் மிகவும் பயபக்தியோடு கொண்டு கொடுத்து விட்டு வருவோம். அப்போதே இன்றைக்கு இரவைக்கு பூஜை நடத்த வேண்டும், என்று சொல்லி தலையை வாங்கி வைத்துக் கொள்வார், தண்ணீர் கரையான கடற்கரை, அல்லது ஆற்று ஓரம் லோகேசன் குறித்து கொடுப்பார். அந்த இடத்துக்கு நோயாளியை கொண்டுவரச் சொல்லுவார், பெரும் பாலும் இரவு 10 மணி பிற்பாடு தான் பூஜைக்கு நேரம் குறித்து கொடுப்பார். அவர் சொன்ன படியே நோயாளியும் அவரது உறவினர்களும், மந்திரவாதி, அவர் சிஷ்யன்களும், பூஜைக்குரிய பொருட்களோடு குறித்த இடத்துக்கு வண்டியில் சென்று இறங்குவார்கள்.
சென்று இறங்கியதும் "இங்க மந்திரம் செய்யும் இடத்தில் சிங்கம், புலி போன்ற பயங்கர உருவங்கள் பயமுறுத்தும், யாரும் பயந்திராதீங்க" அப்படின்னு முத பிட்டை போடுவார். உடனே வந்தவர்களில் வீக்கான பார்ட்டிகள் நாலைந்து பேர் அங்கேயே வண்டிக்கு காவலுக்கு உட்காந்து விடுவார்கள். மிகுதி ஆட்கள் பூஜைக்குரிய இடத்தை அடைவாங்க, அங்கு எல்லா ஏற்பாடுகளும் தடபுடலாக நடக்கும், நோயாளியை ஒருபக்கமும் பூஜைப் பொருட்களை மறுபக்கமும் வைத்து விட்டு, நடுவில் ஆட்டுதலையை செம்புள்ளி கரும்புள்ளி குத்தி வைத்திருப்பார்கள், பூஜை ஆரம்பமாகும், சிஷ்யர்களில் ஒருவன் கையில் சில கொத்துக்களை வைத்துக்கொண்டு பூச்சி பொட்டுகளை கொஞ்சம் தள்ளி நின்று விரட்டிக் கொண்டிருப்பான். பூஜை உச்ச நிலையை அடையும் போது மந்திரவாதி திடிரென்று கத்துவான், அதோ பாருங்க பேய் சிங்க வடிவில் போகிறது, கரடி வடிவில் போகிறது என்று கரடி விடுவான், அப்போது கூட வந்தவர்களில் ஓன்று ரெண்டு பேருக்கு காலடியில் ஈரம் ஆவது கூட நடக்கும், சிலர் இதுக்கு கூட அசரமாட்டாகள். அப்போது ஆட்டுத் தலைமீது எலுமிச்சம் பழத்தை வைத்து விடுவான் மந்திரவாதி, அப்போது பூச்சி வெரட்டிய சிஷ்யன் கையில் இருக்கும் கொத்தை பூஜை இடத்தில் போட்டுவிட்டு, கத்தியை எடுத்து மந்திரவாதியின் கையில் கொடுப்பான். மந்திர வாதியும் ஆட்டின் தலையை வெட்ட கத்தியை மந்திரம் சொல்லிக்கொண்டே ஓங்குவான், நம்பினால் நம்புங்க காலையில் வெட்டிய ஆட்டுதலை கத்தத் தொடங்கும், கத்தும் போதே அதனை ரெண்டாப் பிளந்து விடுவான், பின் உடனே அதனை தண்ணீரிலும் தூக்கி எறிந்து விடுவான். இந்த நேரத்தில் கூட வந்தவர்களில் பயப்படதாவர் கூட பயத்தில் மயங்கி விடுவார். அவர்களுக்கு அடுத்த நாள் பயப்பாட்டுக்கு தாயத்துக் கட்ட என்று சைட் பிசினெஸ் ஓன்று வேறாக மந்திரவாதியின் வீட்டில் ஓடும் என்பது வேற கதை.
உண்மையில் இது சாத்தியமா, ஆட்டுத்தலை கத்தியதா? அப்படி கத்தவைக்க முடியுமா? பார்ப்போம். ஒருநாளும் இறந்த அல்லது துண்டாக்கப் பட்ட ஒரு தலையை கத்த அல்ல சுயமாக ஒரு அணு கூட அசைய வைக்க யாரலும் முடியாது என்பதை சந்தேகமில்லாமல் நம்புங்கள். பின் எப்படி இது, இப்படித்தான், காலையில் ஆட்டுதலை கொண்டு சென்று கொடுத்ததுமே மந்திரவாதி தன் தந்திர வேலையை ஆரம்பித்து விடுவார். ஒரு உயிருள்ள தவளையை எடுத்து, அடையாளம் தெரியாதபடி ஆட்டின் வாயை பிளந்து அதன் நாக்குக்கு கீழே வைத்து விடுவார், அந்த தவளை கத்தவும் கத்தாது, மந்திரவாதியை காட்டிக் கொடுக்கவும் கொடுக்காது. ஆற்றோரங்களில் "இனித்துள்ளா" எனும் செடி உள்ளது (எங்கள் ஊரில் அதன் பெயர் அதுதான், மற்ற இடங்களில் எப்படி அழைப்பார்கள் என்று தெரியாது). இதன் நாற்றம் தவளைக்கு ஒத்துக்காது, தவளை கத்த தொடங்கும், இதனை மனதில் வைத்துக் கொண்டு சம்பவத்திற்கு வாருங்கள். அங்கு பூச்சி பொட்டு வெரட்டிகிட்டு இருந்த சிஷ்யப் பயபுள்ளையின் கையில் இருந்த கொத்து அந்த செடிதான், அதனால் தான் அவன் ஆட்டுதலையை விட்டு தள்ளி போச்சி வெரட்டினான். பூஜையின் உச்சத்தில் அவன் கத்தியை எடுத்து மந்திரவாதியின் கையில் கொடுப்பது போல் வந்தது கொத்தை கொண்டுவந்து ஆட்டுதலைக்கு பக்கத்தில் போடத்தான். இப்போது அந்த செடியின் நாற்றம் ஆட்டுதலையின் உள்ளே தூங்கும் தவளைக்கு தொந்தரவாகி கத்தத் தொடங்கும். அப்போதுதான், மந்திரவ்வதி தலையை வெட்டி யாரும் தவளையை கண்டு விடக் கூடாது என்பதற்காக உடனே தண்ணீரில் தூக்கி எறிந்து விடுவான். இப்போ நமக்கு ஒரு கேள்வி வரும், கூட போனவர்களுக்கு ஆடு கத்துவதற்கும் தவளை கத்துவதற்கும் வித்தியாசம் தெரியாதா என்று, அதற்க்கு காரணம் உண்டு, தவளைக்கும் ஆட்டுக்கும் சத்தத்தில் கூர்ந்து கேட்டால் தான் வித்தியாசம் விளங்கும், மற்றது அவ்வாறு கூர்ந்து கேட்க முடியாத வாறு தான் மந்திரவாதி சிங்கம் புலி கரடி விட்டு பயமுறுத்தி வெச்சிருக்கானே, அப்புறம் எப்படி விளங்கும்
சரி, நாம் எப்படி அவனின் பாதையை தேர்ந்தெடுக்கிறோம். ஏனென்றால் அவன் நம்மை தேடி வருவதில்லை, நாம் தான் அவனை தேடி போய் ஏமாறுகிறோம். இதற்க்கு முக்கிய காரணம், நமக்கு வாழ்வில் ஏற்படும் சிக்கல்களுக்கு நம் அறிவுக்கு எட்டியவரை நம் கண்முன்னே தீர்வு கிடைக்காத போது தான், இவ்வாறான வழிகளை தேர்ந்தெடுக்கிறோம், சிலவேளை பரம்பரையாகவும் சிலருக்கு இந்த நம்பிக்கை தொடர்வது உண்டு. இவ்வாறாக நமக்கு சிக்கல்கள் ஏற்படும் போது, நம்மால் தீர்க்க முடியாவிட்டால் நம் மனம் குழம்பி எப்படியாவது தீர்க்க வேண்டும் என்றுதான் என்னுகிறோமே தவிர அதற்குரிய வழிமுறைகளை தேடுவதில்லை. இந்த நேரத்தில் நாம் நம் சொந்தங்களிடம், நண்பர்களிடம் ஆலோசனை செய்யும் போது அவர்களில் யாரவது இந்த மாதிரி மந்திரவாதிகளிடம் ஏமாந்தது கூட தெரியாமல் ஏமாந்து இருந்தால், அவர்களின் சிபாரிசு அந்த மந்திரவாதியாக தான் இருக்கும். நமக்கும் வேறு மார்க்கம் இல்லாது நாமும் ஏற்றுக் கொண்டு விடுவோம்.
இப்போது நமக்கு ஒரு கேள்வி வரும், ஏமாற்றுகின்றான் என்று நான் சொல்லுகின்ற மந்திரவாதி எப்படி நம் பிரச்சனையை தீர்க்கிறான் என்று. ஊரில் ஒரு விடயம் சொல்லுவார்கள், ஜலதோஷம் வந்தால் மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்தில் சுகமடையும், மருந்து சாப்பிடாவிட்டால் ஏழு நாளில் குணமடையும் என்று. அதுதான் மந்திரவாதியின் விடயத்தில் நடைபெறுகிறது. போன பாகங்களில் மந்திரவாதி நம்மை ஏமாற்றுகிறான் என்று நான் குறிப்பிட்ட விடயங்களை எடுத்து கொள்ளுங்கள். இந்த மாதிரி பிரச்சனை நம் ஊர் பகுதிகளில் இருக்கும் ஒரு ஜவுளிக் கடைகாரருக்கு வந்தது என்று வைத்துக் கொள்வோம். ஊர் பகுதிகளில் ஜவுளி வியாபாரம் என்பது ஏதாவது பண்டிகைகளை வைத்தே நடைபெறும், அதுவும் குறிப்பிட்ட காலங்களில், பொங்கலுக்கு நல்ல வியாபாரம் இடம்பெறும். அவரும் கடனோ உடனோ வாங்கி பொங்கல் வியாபாரம் பார்ப்பார், அதில் வரும் வருமானத்தை பார்த்து கொஞ்சம் பெருசாக ஆசைப் பட்டு அகலக் கால் வைத்தும் விடுவார். பொங்கல் முடிந்ததும், வியாபாரம் அப்படியே படுத்து விடும். இவருக்கு வியாபாரத்தில் சிக்கல்கள் உண்டாகி இவரால் சமாளிக்க முடியாமல் போய் விடும். இந்த நேரத்தில் யாருடையாவது ஆலோசனைப் படி மந்திரவாதியை சரணடைவார். அவரும் நான் முந்திய பாகங்களில் சொன்ன மாதிரி வித்தைகளை காட்டி பெரிய அமௌன்ட்டை ஆட்டையப் போட்டுவிடுவார். அவர் அவரது சித்துவேலைகளை காட்டிமுடிவதற்க்கும் தீபாவளி சீசன் ஆரம்பிப்பதற்கும் சரியாக இருக்கும். அப்புறம் என்ன வியாபாரம் களைகட்டும். இப்போது அந்த ஜவுளிக் கடைக்காரர் என்ன நினைப்பார், இதெல்லாம் தானாக நடந்ததா இல்லை மந்திரவாதியின் திறமையால் நடந்ததா? அப்புறம் என்ன அவரும் இதே போல் நாலுபேரிடம் மந்திரவாதிக்கு சிபார்சு பண்ணி இந்த மூடநம்பிக்கையை வளர்க்க அயராது பாடுபடுவார்.
ஓன்று மட்டும் கவனித்து பாருங்கள், இப்படி ஊர் வாழ்வில் ஒளியேற்றும் மந்திரவாதிகளின் வாழ்வு எப்போதும் அதலபாதளத்திலேயே இருக்கும், விதிவிலக்காக ஓன்று ரெண்டைத் தவிர. ஏன் இவர்களால் இவர்களுக்கே மந்திர வேலைகள் செய்து அவர்களை வளப்படுத்த முடியாதா? ஊருக்குள் குறி சொல்லும் பழங்குடி மக்கள் நாம் எப்போது கோடிஸ்வரன் ஆவோம் என்று துல்லியமாக கூறுவார்கள். அவர்களுக்கு இரவு சாப்பாடு கிடைக்குமா கிடைக்காதா என்று கணிக்க முடியாமல் சோத்துக்கே திண்டாடுவார்கள். சில மந்திரவாதிகள் எலுமிச்சை பழத்தை வெட்டி ரத்தம் எடுப்பார்கள். அவர்களிடம் நீங்கள் "உங்கள் மந்திரத்தை ஒன்றுக்கு ஆயிரம் தடவை உச்சரித்து இப்போ லேட்டஸ்ட்டாக அப்பிள் பழம் ஒன்றை வெட்டி ரத்தம் எடுத்துக்காட்டுங்கள்" என்று சொல்லுங்கள், அவர்களால் அது முடியவே முடியாது. ரத்தம் போல சிவப்பு கலரில் திரவம் எடுக்க எலுமிச்சை பழத்தில் மட்டுமே முடியும், அப்பிள் பழத்தில் தலைகீழாய் நின்றாலும் முடியாது. அதை நீங்களே செய்யலாம். இதற்கு ஆள் எதற்கு
மந்திரவாதியிடம் ஏமாந்த ஒருவர் நம்மை உசுப்பேத்தி விடுவார். நாமும் அவரின் ஆலோசனைப் படி மந்திர வாதியிடம் செல்வோம்.
க்கு ஏழரை ஆரம்பிக்கும். எல்லா சடங்கும்(?) முடிந்தபின் சொல்லுவான் தீர்ப்பு நம் குடும்பமே கலங்குகின்ற மாதிரி. "ஒரு ஆள் தான் எடுத்து இருக்கு, ஆனா அதை சொல்லுவதால் உங்கள் குடும்பத்தில் வீணான குழப்பம் வந்து விடும் என்று பயபடுகிறேன்" என்று. நாமும் விட மாட்டோம். யாரென்று சொல்லுங்க என்று மன்றாடுவோம். அவனும் ரொம்ப பிகு பண்ணிய பிறகு, நம்மிடம் பிரச்சனை படக்கூடாது அது இது என்று சத்தியமெல்லாம் வாங்கி விட்டு வரலாற்று சிறப்பு மிக்க உண்மையை சொல்லுவான். "நீங்கள் மனதில் யாரை நினைத்து இருக்குறீர்களோ அவர்தான்" என்று. நாம் அதற்கு முன்பே சொல்லியிருப்போம் எங்களுக்கு ஒருவர் மீது சந்தேகம் இருக்கு என்று. அதை வைத்து சரியா பயபுள்ள நம்மை கோர்த்து விடுவான். அதை நாம் நம்பி ஒரு அப்பாவியை பிடித்து வைத்து குமுறுவோம். வீட்டினுள் வந்து போனவன் சொந்தக்காரனாக வேறு இருந்து விட்டால், குடும்பங்கள் பிரிவதும் உண்டு.
உண்மையில் மேலே உள்ள சம்பவத்தில் மந்திரவாதி செய்தது என்ன? நம்மிடம் போட்டுவாங்கி அவன் வாயால் சொல்லுவான், அதுவும் சர்வ ஜாக்கிரதையாக. நாம் அந்த அப்பாவியை அடித்து பிரச்சனை ஏதும் வந்தால், மந்திரவாதி தப்பி விடுவான். அவன்தான் யார் பெயரையும் சொல்லவில்லையே. சிலவேளை நாம் யாரையும் சந்தேகப் படவில்லை என்று அவன் கண்டு கொண்டால், அப்பவும் நமக்கு அல்வா தான். "உங்கள் வீட்டினில் சதுரமான இடத்தில் தான் அது இருக்கு. மூன்று நாளைக்குள் கிடைத்தால் உங்களுக்கு. இல்லை என்றால் கிடைக்காது" என்று சொல்லி விடுவான். நம் வீடு காணி எந்த இடமும் சதுரம் தான் என்பது நம் மரமண்டைக்கு அப்போது புரியவே புரியாது. வீட்டினில் வட்டமான ஒரு பானைக்குள் அந்த நகை கண்டுபிடிக்கப் பட்டாலும், அந்த பானை இருந்த இடம் சதுரமான அறை என்று அவன் சமாளிப்பான். பின்னே என்ன, நகை கிடைக்குதோ இல்லையோ, நகையின் பெறுமதியில் அரைவாசியை தட்சணையாக கொடுத்து விட்டு வீர நடை போட்டு வருவோம்.
முக்கியமாக இதில் ஒரு விடயம், நாம் மந்திரவாதியிடம் போனதும் சடங்கு(?) என்னும் போர்வையில் நமக்கு மூளைச்சலவை செய்வான். முதலில் பழம் ஒன்றின் பெயரை நினையுங்க என்பான் நாமும் நினைப்போம். சரியாக நாம் நினைத்த பழத்தின் பெயரை சொல்லுவான், பின் ஒரு பூவின் பெயரை நினைக்க சொல்லுவான். நாமும் நினைப்போம். அதையும் சரியாக சொல்லுவான். இது எப்படி செய்கிறான? . பழம் என்றால் நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது, மாம்பழம் அல்லது அப்பிள்தான். பூ என்றால் மல்லிகை அல்லது செம்பருத்தி தான். மற்றது அவன் இருக்கும் இடத்தின் அனுமாஷ்யமும், அவன் செய்கைகளில் நாம் கொண்ட பயபக்தியும், அவனின் பயமுறுத்தும் நடவடிக்கைகளும் நம்மை சிந்திக்க விடாது. பழம் என்றால் செர்ரி என்றோ பூ என்றால் தேங்காய்ப்பூ என்றோ சொல்ல நமக்கு தோன்றாது. இது எல்லாவற்றுக்கும் மேலாக டெலிபதி என்னும் கலையும் இங்கு அவனால் பாவிக்கப் படும். அவன் என்ன நினைக்கிறானோ அதையே நம்மையும் நினைக்க தூண்டி விடுவான். அப்புறம் என்ன? நாம் நினைத்ததை அவன் சொல்லி விட்டால், காலம் முழுக்க நாம் அவன் காலடியில் தான்.
அனுமாஷ்ய நிகழ்வுகளை பார்க்கலாம். உதாரணமாக:
01. திடிரென்று ஒருவர் பேய்(?) பிடித்து அவர்க்கு கொஞ்சமும் பரிச்சயமில்லாத மொழி பேசுதல்.
௦2. வழமையான அளவினை விட பலமடங்கு அருவருப்பான பார்ப்போரை பயமுறுத்தும் விதத்தில் ஒருவர் சாப்பிடுதல்
இப்படி பலவகை உண்டு, நான் முந்திய பாகங்களில் சொன்னது போல் இந்த மாதிரி விடயங்களில் மந்திரவாதிகளினதோ, பேயோட்டுபவர்களினதோ தலையீடு எதுவும் இல்லாமல், சாதாரண வாழ்வு வாழும் ஒருவர் திடிரென்று இவ்வாறான செயல்கள் செய்யும் போது நமக்கும் பேய் பிசாசு என்று நம்பிக்கை லேசாக தலைதூக்குவது தவிர்க்க முடியாது. அதற்கும் காரணம் உண்டு நம் தலைமுறையில் சிறு வயதில் உணவுடன் சேர்த்து நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் இப்படியான மூட நம்பிக்களையும் ஊட்டி வளர்த்துதிருக்கிரார்கள். நாம் சரியாக சாப்பிடவில்லை என்றால், இந்த கவளத்தை மட்டும் சாப்பிடு இல்லாவிட்டால் பேயை கூப்பிட்டு உன்னை பிடித்துக் கொடுபேன், காட்டேரி வந்து சாப்பிடும் என்றெல்லாம் சொல்லித்தான் உணவுடன் மூட நம்பிக்கைகளையும் ஊட்டி இருக்குறார்கள். சரி இவையெல்லாம் மூட நம்பிக்கைகள் இல்லையென்றால், வேறு என்ன காரணம் இருக்கின்றது என்று பார்ப்போம்.
முதலாவது ஒருவர் திடிரென்று தனக்கு பரிச்சயமில்லாத மொழி பேசுகிறார் என்று வைத்துக் கொள்வோம். உதாரணமாக ஆங்கில அறிவே இல்லாத ஒருவர் அதனை ஆங்கிலப் படத்தை தவிர வேறு எங்கும் கேள்விப்படாத ஒருவர் ஆங்கிலம் பேசினால் என்னாகும், நாமும் அவரிடம் சென்று தட்சனை வைத்துவிட்டு ஆங்கில பேயிடம் நம்குறைகளை சொல்லி நிவாரணம் தேட வேண்டியதுதான். அவரும் நமக்கு வாழ வழி காட்டுவார். உண்மையில் என்ன நடக்கிறது. அவர் பேசுவதை ஆங்கிலம் தெரிந்த ஒருவர் உற்றுக் கவனித்தால் ஓன்று தெளிவாகும், நாம் என்ன கேள்வி கேட்டாலும் "கைய பிடிச்சி இழுத்தியா" என்கின்ற மாதிரி ஒரே வசனத்தை தான் சொல்லிக் கொண்டிருப்பார், வேறு வேறு ஏற்ற இறக்கங்களோடு ஒவ்வொரு கேள்விக்கும். உண்மையில் அவருக்கு வந்திருப்பது மனநோய், அவரே வைத்திய சிகிச்சை தேவைப் பாடு உள்ள ஒருத்தர். அவரிடம் போய் நாம் நமது நோய்க்கும் நம் கஷ்டங்களுக்கும் வழி சொல்ல கெஞ்சிக் கொண்டிருப்போம். என்னத்த சொல்ல நம் மூட நம்பிக்கையும் அளவை.
நம் மூளையின் நினைவகங்கள் இரண்டு வகைப் படும், வெளிமனது ஆழ்மனது என்று. நம்முடைய நாளந்த நடவடிக்கைகள் வெளிமனதால் நிர்வகிக்க படுகின்றது. அதில் பதியப் படுபவை குறிப்பிட்ட அளவுக்குமேல் சென்றால் அல்லது நாம் அந்த விடயம் சம்பந்தமாக கவனக் குறைவாக இருந்தால் அழிந்து போய்விடும். ஆனால் நம் ஆழ்மனது அப்படியல்ல, நம்முடைய கவனத்திற்கு வராத விடயங்கள் கூட அங்கு பதியப் பட்டு விடும். ஆனால் அது நம்முடைய நாளந்த நடவடிக்கைகளில் ஆதிக்கம் செலுத்தாது உறக்க நிலையில் இருக்கும். சில வேளைகளில் அது தூண்டலுக்கு உள்ளாகும் போது விழித்து தேவையான தகவல்களை கொடுத்து விட்டு மீண்டும் உறக்க நிலைக்கு சென்று விடும், நாம் சிலநேரங்களில் ஏதாவது தகவல்களை மறந்து விட்டு நெற்றியை அல்லது பின்னந் தலையினை தடவுவது மூலம் ஆழ்மனதினை தூண்டலுக்கு உள்ளாகுகின்றோம். இதனையே வைத்திய முறைகளில் ஹிப்னோடிசம் என்று சொல்லுகிறார்கள். இதனை இன்னும் ஆழமாக ஆராய்ந்தால் நமக்கு கிறுகிறுத்து விடும் என்பதால் சுருக்கமாக விளங்கக் கூடிய மாதிரி சொல்லியிருக்கிறேன்.
இப்போது மேலே சொன்ன நபர் எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என்பதை பார்ப்போம், நான் நம் மூளையின் நினைவகங்களை பற்றி சுருக்கமாக சொன்னதற்கும் அதற்கும் தொடர்பு உண்டு என்பதால் தான் சிறு விளக்கமாக தந்தேன். மேலே சொன்ன நபர் பரிச்சயமில்லாத மொழி பேசினாலும், அந்த மொழியினை அல்லது அவர் திரும்ப திரும்ப சொல்லும் வார்த்தைகளை எங்கோ எதோ ஒரு இடத்தில் அவரை அறியாமல் கேட்டு இருப்பார் அதை அவரின் வெளிமனது கவனத்தில் கொள்ளா விட்டாலும் ஆழ்மனது தெளிவாக பதிந்து வைத்திருக்கும். அந்த நபருக்கு ஏதாவது மன உளைச்சல்கள் அல்லது பாதிப்புக்கள் ஏற்படும் போது அவரது வெளிமனது சோர்வடைந்து தனது இயக்கத்தை குறைத்துக் கொள்ளும், அந்த வேளையில் அவரது ஆழ்மனது விழித்துக்கொண்டு தாறுமாறாக சேமித்து வைத்திருக்கும் தகவல்களை வழங்கும். அதில் இவர் ஏற்கனவே கேட்ட மொழியும் அடங்கும். இதற்க்கு சரியான சிகிச்சையும், மூளைக்கு நிவாரணமும் கொடுக்கும் பட்சத்தில் சரியாகிவிடும், அதை விடுத்து அவரிடம் சென்று நம் எதிர்காலத்தை ஒப்படைத்தால் என்னாகும் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.