ரூ.2 ஆயிரம் பணத்துக்காக சிறுவனை கடத்திய வாலிபர்: திருப்பதியில் போலீசார் கைது செய்தனர்
20 Feb,2015
ரூ.2 ஆயிரம் பணத்துக்காக சிறுவனை கடத்திய வாலிபர்: திருப்பதியில் போலீசார் கைது செய்தனர்
விஜயவாடா கிருஷ்ணாலங்கா பகுதியை சேர்ந்த தம்பதியர் குமாரராஜா–மனைவி சந்தோஷி. இவர்களுடைய மகன் சிவா (வயது 7). இவன், அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறான். சந்தோஷியின் அண்ணன் கோபி (30). இவர், விசாகப்பட்டினத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவர், அடிக்கடி குமாரராஜாவிடம் பணம் கேட்பது வழக்கம். அதேபோல் கடந்த 3 நாளுக்கு முன்பு கோபி, குமாரராஜாவிடம் ரூ.2 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் இல்லை என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கோபி, குமாரராஜாவை பழிவாங்க திட்டமிட்டார். அதற்காக சிறுவன் சிவாவிடம், ‘‘உன்னை பூங்காவுக்கு அழைத்து செல்கிறேன், என்னுடன் வா’’ என கூறி அவனை வெளியே அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் இரவு வெகுநேரம் ஆகியும் அவர்கள் இருவரும் வீட்டுக்கு வரவில்லை. சிவாவைவும், கோபியையும் காணாதது கண்டு குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள் விஜயவாடா போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சிவாவை தேடி வந்தனர்.
இந்தநிலையில் பணத்துக்காக சிவாவை கடத்தி சென்ற கோபி, நேற்று முன்தினம் திருமலைக்கு வந்தார். திருமலையில் உள்ள லேப்பாட்சி அருகேயுள்ள ஒரு தொலைபேசி மையத்தில் இருந்து கோபி போன் செய்து குமாரராஜாவுடன் பேசினார். நான் சிவாவை கடத்தி வந்து திருமலையில் வைத்துள்ளேன். எனக்கு ரூ.2 ஆயிரம் பணம் கொடுத்தால் தான் சிவாவை விஜயவாடாவுக்கு அழைத்து வருவேன். இல்லையெனில் இங்கேயே கொன்று விடுவேன் என பேசி விட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கோபி பேசியதை கேட்டு விட்டு, இதுபற்றி திருமலை–2 டவுன் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து கோபியை கைது செய்தனர். அவரிடம் இருந்து சிறுவன் சிவாவை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்தனர். இதுபற்றி திருமலை–2 டவுன் போலீசார், குமாரராஜாவுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.