11 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான விண்கலம் செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிப்பு
17 Jan,2015
கடந்த 2003–ம் ஆண்டில் இங்கிலாந்து செவ்வாய் கிரகத்துக்கு பிகில்–2 என்ற விண்கலத்தை அனுப்பியது. ஆனால் அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்துக்கு சென்றடையும் முன்பு அதாவது 2003–ம் ஆண்டு டிசம்பர் 26–ந்தேதி திடீரென மாயமானது.
தகவல் கட்டுப்பாட்டு அறைக்கும், பிகில்–2 விண்கலத்துக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. எனவே அந்த விண்கலம் என்ன ஆனது என்று தெரியாமல் இருந்தது. ஆனால் அதை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் தற்போது அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கி இருப்பது தெரியவந்துள்ளது. அதை நாசாவின் செவ்வாய் கிரக உளவு பார்க்கும் விண்கலம் கண்டுபிடித்து போட்டோ எடுத்துள்ளது. பிகில்–2 விண்கலம் பாரா சூட்டுடன் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கி இருப்பது போன்று போட்டோ உள்ளது. இதன் மூலம் பிகில்–2 விண்கலம் வெற்றிகரமாக தரையில் இறங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை இங்கிலாந்து விண்வெளி நிறுவன தலைவர் டேவிட் பார்கர் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த விண்கலத்துடன் தொடர்பு கொள்ளவோ, அதில் இருந்து தகவல்களையோ பெற முடியாது என்றும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த விண்கலத்தை விஞ்ஞானி கொலின் பில்லிங்கர் உள்ளிட்டோர் அடங்கிய குழு இந்த விண்கலத்தை உருவாக்கி செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பினர். அவர்களில் இக்குழுவின் தலைவர் கொலின் பில்லிங்கர் கடந்த ஆண்டு மரணம் அடைந்தார்.