வாட்ஸ் அப் உள்ளிட்ட ஆப்ஸ்களுக்கு தடை விதிக்க பிரிட்டன் பிரதமர் கேமரூன் அதிரடி முடிவு?
15 Jan,2015
கடந்த வாரம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தீவிரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதல் காரணமாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க தயாராகியுள்ளார். இவற்றில் முக்கிய அம்சங்களாக வாட்ஸ்-ஆப், ஸ்நாப் சாட் போன்ற ஆன்லைன் மெசேஜிங் ஆப்ஸ்களுக்கு தடை விதிக்க அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
பிரிட்டனில் தீவிரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டங்களை கொண்டுவர முடிவு செய்துள்ள கேமரூன், ஆன்லைன் கம்யூனிகேஷன் வசதிகளே தீவிரவாதிகள் எளிதாக தகவல் பறிமாறிக்கொள்ள ஏதுவாக இருப்பதாக பிரிட்டன் புலனாய்வுத் துறை பிரதமர் அலுவலகத்திற்கு கூறியதை அடுத்து ஆன்லைன் கம்யூனிகேஷன் வசதிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தி கார்டியன் பத்திரிகைக்கு பேட்டியளித்த பிரதமர் கேமரூன், எளிய முறையில் தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் அமைந்துள்ள எந்தவித தகவல் தொடர்பு வழிமுறைகளையும் பிரிட்டன் அனுமதிக்க போவதில்லை என்றும் அப்படியான ஆப்ஸ்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அறிவித்துள்ளார்.
கேமரூன் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டால் மட்டுமே இந்த சட்டங்கள் அமலாக்க வாய்ப்பு இருப்பதாகவும். அப்படி, இந்த சட்டங்கள் அமலுக்கு வந்தால், ஸ்நாப் சாட், ஆப்பிள் நிறுவனத்தின் ஐமெசேஜ், வாட்ஸ்-ஆப் போன்றவைகளுக்கு நிரந்தரமாக தடை விதிக்கப்படும். பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.