டென்மார்க் போபோ நகரத்தில் உள்ள கோடை கால இல்லமொன்றில் இருந்து 72 வயது நபர் ஒருவருடைய இறந்த உடலம் மீட்கப்பட்டுள்ளது.
கோடைகால இல்லத்திற்குள் தீ பரவியதைத் தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் தீ பரவிய இடத்திற்குள் 72 வயது நபருடைய இறந்த உடலமொன்றை கண்டெடுத்துள்ளனர்.
விசாரணைகள் தொடர்கின்றனஸ
இது இவ்விதமிருக்க..
நிவோ நகரத்தில் நேற்று முன்தினம் இடம் பெற்ற சம்பவத்தில் 27 வயது நபர் ஒருவர் இறந்ததாக தொவிக்கப்பட்டிருந்தது.
இந்த நபரை அவுடிக் காரில் கொண்டு வந்து இருவர் வைத்தியசாலையில் சேர்த்திருந்தனர், இறந்த நபர் கத்திக்குத்துக்கு ஆளாகி மரணித்துள்ளார்.
சந்தேக நபர் சிறையில் தள்ளப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது, ஏற்கெனவே அவுடிக்காரில் வந்த இருவரும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை போலீசார் கொலை செய்த நபர் யாரென தமக்குத் தெரியும் என்றும் அவர் தானாக சரணடையாவிட்டால் புகைப்படமும் பெயரும் வெளியிடப்படும் என்றும் போலீசார் எச்சரித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து 22 வயது நபர் ஒருவர் சரணடைந்துள்ளார்.
மறுபுறம் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் ஒல்போ கிழக்கில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இடம் பெற்ற கத்திக்குத்தில் 44 வயது நபர் ஒருவர் இறந்துள்ளார், இன்னொருவர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்தச் சம்பத்தில் சந்தேகத்தின் பேரில் 31 வயது ஆணும், 64 வயது பெண் ஒருவரும் கைதாகியுள்ளனர்ஸ
டென்மார்க்கிலும் பட்டிக்காடா பட்டணமா பிரச்சனை
பொதுவாக ஒரு நாடு நல்லபடியாக முன்னேறுகிறது என்றால் நகரங்களும், கிராம நகரங்களும் இணைந்த முன்னேற்றம் காணவேண்டும்.
இந்தியாவின் கிராமங்கள் ஒளி பெறும்போதுதான் இந்தியா ஒளி பெறும் என்று மகாத்மா காந்தி சென்னதை இந்தியர்கள் விளங்காமல் போனது போல டேனிஸ்காரரும் விளங்கவில்லை என்று உணர முடிகிறது.
கடந்த 30 முதல் 40 வருட காலப்பகுதியில் டென்மார்க்கின் பெரிய நகரங்கள் பல மாடிக்கட்டிடங்களுடன் வேகமாக முன்னேறி வருகின்றன.
மாறாக கிராம நகரங்களோ மக்களற்று தொடர்ந்து பின்தங்கி வருகின்றன.
கிராம நகரங்களில் உள்ள மக்கள் பெரு நகரங்களை நோக்கி வேகமாக நகர்வதால் நகராக்க வளர்ச்சி வேகமடைகிறது.
தொழில், கல்வி, வேலைவாய்ப்பு, கலாச்சாரம் என்று பல விடயங்களோடு நகர சமுதாயம் பின்னிப்பிணைந்து இணைவாக்கமடைவதால் கிராமங்கள் தேடுவாரற்று பின்தங்குகின்றன.
கவர்ச்சியற்ற கிராமங்கள் தேடுவாரற்று பின்தங்கிச் செல்கின்றன.
இது டென்மார்க்கின் நகர வளர்ச்சி சரியான தடத்தில் நடக்கிறது என்ற கருத்தில் ஓட்டைவிழச் செய்துள்ளது, என்று ஓகூஸ் நகராக்கப்பிரிவு அதிகாரி பென்ர லுக்க சோன்சன் கூறுகிறார்.
ஆகாயத்தில் இருந்து புகைப்படம் எடுத்தால் வளரும் ஏழை நாடுகளில் உள்ளதைப் போல நகரங்கள் பலமாடிக் கட்டிடங்களாகவும், கிராமங்கள் காடுகளாகவும் கிடக்கும் காட்சிகளே தெரியும்.
இது ஏழை ஆபிரிக்க நாடுகளின் காட்சி அல்லவா..?
பட்டணங்கள் வளர பட்டிக்காடுகள் தொடர்ந்தும் பட்டிக்காடுகளாவது பணக்காரர் மேலும் பணக்காரராக ஏழைகள் தொடர்ந்தும் பரம ஏழைகளாவதைப் போன்ற பின்னேற்றமான காரியமே.
ஆறுக்கு ஒருவர் பேஸ்புக்கை தூக்கி வீச விருப்பம்
சமீபகாலமாக பேஸ்புக்கை பாவிக்கத் தெரியாதவர்களின் பிரச்சனையால் அந்தச் சமூக வலைத்தளத்தில் இருந்தே முற்றாக விலகிச் செல்ல பலர் முடிவு செய்துள்ளார்கள்.
டென்மார்க்கில் உள்ள பேஸ்புக் பாவனையாளரிடையே இது குறித்து யூகோவ் அமைப்பு நடத்திய ஆய்வில் ஒவ்வொரு ஆறு பேருக்கும் ஒருவர் என்ற அடிப்படையில் பேஸ்புக்கை விட்டு விலக எண்ணியுள்ளதாக தெரிவித்துள்ளது.
பேஸ்புக்கை பாவிப்போரில் பலர் அதை விளங்காமல் இருப்பது ஒரு புறமாக இருந்தாலும் பேஸ்புக் நிறுவனத்தின் அசமந்தப் போக்கு மீதான களைப்பும் இந்த வெறுப்புக்கு முக்கிய காரணமாகும்.
தனிநபர் குரோதம் கொண்டு வெப்பியாரத்தில் செய்யும் வேலைகளை பேஸ்புக் கண்டும் காணாமல் இருந்து தனது வருமானமே குறிக்கோளாக இருப்பதால் மக்கள் பேஸ்புக்கை வெறுக்க ஆரம்பித்துள்ளார்கள்.
எழுதுவோர் மட்டுமல்ல நடத்துவோரும் இதற்கு தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்பதை ஆய்வு புலப்படுத்துகிறது.
பேஸ்புக் என்பது சமூக வலைத்தளமாக இருந்தாலும் கூட பத்திரிகா தர்மம் என்ற கோட்பாடு அதற்கும் பொருத்தமானதே.
எழுதுவதற்கு ஓர் ஊடகம் கிடைத்துவிட்டால் நாம் நினைத்ததை எல்லாம் தாறுமாறாக எழுதிவிடக்கூடாது பத்திரிகைக்கான தர்மம் ஒன்று இருக்கிறது.
ஒவ்வொரு எழுத்திலும் தர்மம் இருக்கிறதா என்ற கேள்விக்கு மனச்சாட்சிப்படி பதில் கொடுக்க இயலாத எழுத்துக்களை எழுதுதல் தவறு என்ற தர்மம் மேலை நாட்டு ஊடகங்களில் பேசு பொருளாக இல்லை.
அதேபோல பத்திரிகா தர்மம் என்ற புகழ் பெற்ற தமிழ் கொள்கை இன்றைய மேலை நாட்டு வாழ் தமிழரால் எவ்வளவு தூரம் விளங்கப்பட்டுள்ளது என்ற கேள்வியையும் இந்த ஆய்வானது மனதில் ஒரு சுற்று எழுப்பிவிட்டே அப்பால் செல்கிறது.
அமெரிக்காவில் உள்ள பிள்ளைகள் பராமரிப்பு நிலையம் ஒன்றுக்கு பணி புரியச் சென்று அங்கு 13 பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பின் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் விடுதலை செய்யப்பட்ட 22 வயதுடைய டேனிஸ் இளைஞரான மல்ரா ரொம்சன் இன்று டென்மார்க் வருகிறார்.
ஐந்து மாதங்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்ட இவர் விமான நிலையம் வரும்போது பலத்த வரவேற்பு வழங்கப்படவுள்ளது.
—————-
டென்மார்க் புய்ன் பகுதியில் வாழும் அலன் என்ற நபர் சிகரட் தயாரிப்பு நிறுவனம் ஒன்றிடம் நஷ்ட ஈடு கோரி தொடர்ந்த வழக்கின் மேன்முறையீட்டு விசாரணை இன்று விசாரிக்கப்படுகிறது.
11 வயதில் சிகரட் புகைப்பிடிக்க ஆரம்பித்த இவர் இன்றுவரை அதிலிருந்து விடுபட முடியாத அடிமையாக இருக்கிறார்.
சிகரட் உற்பத்தி நிறுவனமானது புகைப்பிடிப்போர் அதைக் கைவிட முடியாதவாறு செய்யும் போதைகளை தந்திரமாக கலந்து புகை மன்னர்களை தந்திரமாக சிறைப்பிடித்துள்ளன என்பது இவருடைய குற்றச்சாட்டாகும்.
புகையிலையை சிகரட் ஆக்கி விற்பது ஒரு பணி, அதற்குள் மனிதனை அடிமைப்படுத்தும் ஆபத்தான மூலகங்களைக் கலந்து தயாரிப்பது ஏமாற்று வித்தை.
ஆகவே ஏமாற்று வித்தை செய்த நிறுவனம் தனக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என்பது இவருடைய வாதமாகும்.
இவருக்கு நஷ்ட ஈடு வழங்கினால் மற்றவருக்கு என்ன செய்வது..?
பாலியல் குற்றவாளிக்கு காலவரையற்ற சிறை
டென்மார்க்கின் புய்ன் பகுதியில் நடைபெற்ற 41 வயதுடைய உளவியல் சிக்கல் கொண்ட பாலியல் பலாத்கார நபருக்கு எதிரான வழக்கில் மேற்கண்ட நபருக்கு காலவரையற்ற சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட நபர் மீது சுமத்தப்பட்ட 11 குற்றச் சாட்டுக்களும் ஊர்ஜிதம் செய்யப்பட்ட காரணத்தினால் இவரை உளவியல் குற்றவாளிகளை தடுத்து வைத்து சிகிச்சையளிக்கும் இடத்தில் அடைக்கும்படி பணிக்கப்பட்டுள்ளது.
உளவியல் சிகிச்சையின் போது இவர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார் என்று வைத்திய உளவியல் அதிகாரிகள் முடிவெடுக்கும் வரை இவர் வெளியில் வர இயலாது.
டென்மார்க் சரித்திரத்தில் வழங்கப்பட்ட காலவரையற்ற சிறைத்தண்டனை இதுவாகும்.
சிவப்பு நிறமான ஸ்டேசன் காரில் பாடசாலை மாணவிகளை கடத்தி பலாத்காரம் செய்கிறார் நபர் ஒருவர், இவரைக் கண்டு பிடிக்க போலீஸ் வலை விரித்துள்ளதென கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியான செய்தியில் கூறப்பட்ட சிவப்புக்கார் பேர்வழி இவரே என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தான் உளவியல் பாதிப்பில் இதை செய்துவிட்டதாகவும், இப்போது திருந்திவிட்டதாகவும் இவர் கூறியுள்ளார், ஆனால் இவர் வெளியில் நடமாடுவது ஆபத்து என்ற முடிவுக்கு நீதிமன்று வந்துள்ளது.
இவர் மேன்முறையீடு செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.
அகதிகள் பாரபட்சம் அவசரக் கூட்டம்
டென்மார்க் வரும் அகதிகளில் சிரியாவில் இருந்து வரும் அகதிகளுக்கு மட்டும் கே எனப்படும் கொன்வன்சன் அகதி அந்தஸ்த்து வழங்கப்படுகிறது, மற்றவர்களுக்கு சாதாரண அடைக்கலமே வழங்கப்படுகிறது.
கே அந்தஸ்த்து குடும்பத்தை உடன் இணைக்க வழி செய்வதோடு ஐந்தண்டு காலம் இங்கு வாழவும் வழி செய்கிறது.
அது இல்லாதவர்களுக்கு ஒரு வருட வாதிவிட அனுமதியும், குடும்பங்களை எடுக்க இயலாது என்ற விதியும் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஏன் இந்தப் பாகுபாடு என்பதற்கான விளக்கத்தை தரும்படி மூன்று அமைச்சர்களிடம் பாராளுமன்ற சபை விளக்கம் கேட்டுள்ளது.
சர்வதேச சட்டங்களுக்கு முரண்படாமல், எதிர்கட்சிகளின் கேள்விகளை கருத்தில் கொண்டு, அதிக அகதிகள் வராத விதமாக, அகதி அந்தஸ்த்து விவகாரத்தில் தளம்பலற்ற ஒரு முடிவு எடுக்கப்படும் என்று வயன் நகர சோசல் டெமக்கிரட்டி பாராளுமன்ற உறுப்பினர் ரோல்ஸ் ராவன் தெரிவித்தார்.
அதேவேளை தற்போது சிரிய அகதிகளே அதிகமாக வருகிறார்கள், இவர்களுக்கு கே அந்தஸ்த்து வழங்கினால் வந்தோரின் குடும்பங்களை இணைக்க வந்தோர் தொகையை மேலும் ஐந்து மடங்காக உயரும் என்பது அடிப்படை அச்சமாகும்.
வென்ஸ்ர – டேனிஸ் மக்கள் கட்சி குடும்பங்களை இங்கு வரவழைப்பதைவிட யோர்டான் போன்ற அயல் நாடுகளில் வைத்து பராமரிப்பதே சாலச் சிறந்தது என்கின்றன.
ஓர் அகதி தாய்நாட்டை விட்டு வெளியே ஒரு நாட்டில் அடைக்கலம் பெற்றால் அவர் வாழும் நாட்டில் இணைவதற்கு அவருடைய மனைவி அல்லது கணவன் பிள்ளைகளுக்கு உரிமை இருப்பதாக ஐ.நா சட்டம் கூறுகிறது.
அகதிகள் முகாமில் கிரிமினல்கள் வென்ஸ்ர அலப்பாரிப்பு
டென்மார்க் அகதிகள் முகாமில் குற்றச்செயல் பின்னணிகொண்ட 64 வரையான கிரிமினல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இதில் அரைப்பங்கினர் பாரதூரமான குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்று போலீஸ் அறிக்கை கூறுகிறது.
இத்தகையவர்களின் கால்களில் விசேட கருவியை பொருத்த வேண்டும் என்றும், அதன் மூலம் இவர்களுடைய நடமாட்டங்கள் பூரணமான கண்காணிப்பில் வரவேண்டும் என்றும் டேனிஸ் மக்கள் கட்சி கேட்டுள்ளது.
இவர்களில் பலர் போதை வஸ்த்து, ஆயுதக்கடத்தல், வன்முறைகளில் தொடர்பு கொண்டவர்கள் என்றும் வென்ஸ்ர கட்சி பேச்சாளர் கூறுகிறார், ஆகவே டேனிஸ் மக்கள் கட்சியின் குரலை தாமும் வழிமொழிவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கெனவே நீதியமைச்சர் தெரிவித்திருப்பது ஒரு முன்னேற்றமான விடயம் என்று கூறிய வென்ஸ்ர கட்சிப் பேச்சாளர் தற்போதைய சோசல் டெமக்கிரட்டி அரசு இதுகுறித்து ஏதாவது நடவடிக்கை எடுக்குமாக இருந்தால் தாம் ஆதரவளிக்க தயார் என்று திருவாய் மலர்ந்துள்ளார்.
அதேவேளை அகதிகளும் பொது மக்களும் வேறு வேறானவர்கள் அல்ல அகதிகளும் குற்றம் செய்தால் சிறையில் அடைக்கப்படுதல், நாடு கடத்தப்படுதல் போன்ற தண்டனைச் சட்டங்களுக்குள் வருகிறார்கள்.
அவர்களை அந்தச் சட்டங்களில் தண்டிக்க வழியிருக்க மேலும் எதற்காக கால்களில் ஓர் அடிமைத்தளை பூட்டி ஆனந்தம் காண வேண்டும் என்று என்கில்ஸ் லிஸ்ற் கேட்டுள்ளது.
நாட்டில் வேலையற்றோர் பிரச்சனை, சமுதாய பின்னடைவு குறித்த விவகாரங்களிலும், அகதிகள் விவகாரங்களிலும் தமது சொந்த முன்னேற்றமான கருத்துக்களை வென்ஸ்ர கட்சியும், டேனிஸ் மக்கள் கட்சியும் முன்வைக்கின்றனவா என்பதே இப்போது முக்கிய கேள்வியாகும்.
எல்லாவற்றையும் தண்டிப்பதன் மூலமாக சமுதாயத்தை மேம்படுத்த முடியாது, ஆரோக்கியமாக அகதிகள் தொடர்பாக இதுவரை ஒரு கருத்தையும் முன்வைக்காத இக்கட்சிகள் பிழைபிடித்து அரசியல் வளர்க்கின்றன என்பதை சுட்டிக்காட்டும் அறிவுப்பலம் என்கில்ஸ் லிஸ்ற் கட்சிக்குள் ஏன் மலரவில்லை என்பதும் இன்னொரு கேள்வியாகும்.
கட்டப்படும் ஒரு கட்டிடத்தை இடித்து வீழ்த்த ஓர் அலவாங்கு போதும், ஆனால் ஒரு கட்டிடத்தை அமைக்க மாபெரும் பலம் வேண்டும், அலவாங்கு அரசியல் செய்கிறோமா இல்லை அபிவிருத்தி அரசியல் செய்கிறோமா என்ற சுய பரிசோதனை இன்றைய உலக அரசியலுக்கு மிகவும் தேவைப்படுகிறது.
இந்த நேரம் பகிஸ்கரிப்புக்களுக்கு கிளம்புவதும், குறை கூறித்திரிவதுமான தொழில்களை புரியும் புலம் பெயர் தமிழரும் தமது அலவாங்குகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும், ஆக்கபூர்வமாக களமிறங்கி எந்த செயலையாவது நாம் செய்தோமா என்பதை ஒவ்வொருவரும் நெஞ்சைத் தொட்டு கேட்க வேண்டும், இல்லாவிட்டால் வென்ஸ்ர கட்சியை நாம் விமர்சிக்க முடியாது என்பதும் கவனிக்கத்தக்கதே.
ஈராக்கில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக குண்டு வீசப்புறப்பட்டுள்ள டேனிஸ் போர் விமானங்கள் இதுவரை 39 தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும், 14 தாக்குதல் பணிகளில் இவை உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களால் கிடைத்த பெறுபேறு என்னவென்பது வெளியிடப்படவில்லை, குவைத் சிற்றியில் இருந்து ஏழு எப் 16 விமானங்கள் ஈராக்கில் உள்ள ஐ.எஸ். படைகள் மீது அமெரிக்காவின் வழி நடத்தலில் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
டென்மார்க்கில் உள்ள வெஸ்ராஸ் காற்றாடி நிறுவனம் முன்னர் எதிர்பார்த்ததைவிட அதிகமான இலாபத்தை உழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, ஏற்கெனவே ஆறு பில்லியன் யூரோ இலாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் தற்போது ஏழு பில்லியன் யூரோ இலாபம் கிடைத்துள்ளது.
விற்பனை, உற்பத்தி, சந்தைப் படுத்தலில் வெஸ்ராஸ் புதிய நடைமுறைகளை அமல் செய்துள்ளதால் இந்த மாற்றம் ஏற்பட்டு, புதிய பாதை திறந்துள்ளது.
இதுபோன்ற இலாபம் உழைக்கும் போக்கானது படிப்படியாக அதிகரிக்கும் என்றும் வெஸ்ராஸ் நிர்வாகம் கூறுகிறது.
யோர்மனியை இரண்டாகப் பிளவுபடுத்திய பேர்ளின் சுவர் உடைக்கப்பட்ட 25 வருட வெள்ளி விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது.
இந்தச் சுவர் இடிக்கப்பட்டதால் டென்மார்க்கிற்கான ஜேர்மனிய வர்த்தகத்தில் சுமார் 20 வீத அதிகரிப்பு ஏற்பட்டது, ஜேர்மனி டென்மார்க் எல்லையில் உள்ள பட்போக் பகுதியில் இருந்து பாரவண்டிகள் கிழக்கு யேர்மனிக்குள் பயணிக்க புது வழி பிறந்தது.
சுவர் உடைப்பு மேற்கு – கிழக்கு யேர்மனிகளுக்கு நன்மையாக அமைந்தது போல டென்மார்க் போன்ற ஜேர்மனியின் அயல் நாடுகளுக்கும் பெரும் நன்மை படைத்துள்ளதென்று டென்மார்க் செய்திகள் தெரிவிக்கின்றன.
டென்மார்க்கின் பிரபல நடிகர் வில்லியம் றோசன்பேர்க் தனது 94 வது வயதில் மரணமடைந்தார்.
ஊதின்சவில் உள்ள அவருடைய இல்லத்தில் அமைதியாக உயிர் பிரிந்ததாக நடிகர் லாஸ் குனுற்சன் தெரிவிக்கிறார்.
tks.s.durai