யாழில் பெண்ணுடன் தவறாக நடக்க முயன்ற கடற்படைச் சிப்பாயைக் கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி
13 Aug,2014
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி – வினாயகபுரம் பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் தவறான நோக்கத்திற்காக வீடு புகுந்த கடற்படைச் சிப்பாய் ஒருவரை அப்பகுதி மக்கள் மடக்கிப் பிடித்து பளைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
மேற்படி இந்தச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,
வினாயகபுரம் பகுதியில் அதிகாலை வேளை ஒருவர் வீடு ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த பெண்ணுடன் தவறாக நடக்க முயற்சித்துள்ளார் இதனை அவதானித்த அந்தப் பெண்ணின் கணவர் அந்த நபரைப் பிடிக்க முற்பட்டபோது அவர் தப்பி ஓட முயற்சித்துள்ளார்.
வீட்டாரின் அலறலைக் கேட்டு அயலவர்கள் விழித்துக் கொண்டு ஒன்றுகூடி குறித்த நபரை மடக்கிப் பிடித்துள்ளனர். இது குறித்து அருகிலுள்ள இராணுவ முகாமுக்கும் பளைப் பொலிஸ் நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
அங்கு வந்த இராணுவத்தினர் குறித்த நபர் கடற்படையைச் சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்தினர் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். எனினும் அந்த நபரை தாம் பொலிஸாரிடம் ஒப்படைப்போம் எனக் கூறிய பொதுமக்கள் பளைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் குறித்த சிப்பாய் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு அவரை எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.