

சிங்கத்தின் குகைக்குள் சிவில் சமுக அமைப்புகள்! சூத்திரதாரி யார்?
போர் முடிவடைந்து ஏறத்தாழ நான்கு வருடங்கள் கடந்து விட்ட நிலையில், இந்த நான்கு வருடங்களும் சிவில் சமுக செயல்பாடுகளில் இராணுவ தலையீடுகளை எதிர்த்தும், இராணுவ மயப்படுத்தப்படும் சூழலை கண்டித்தும், வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பிரதேசங்களில் பல்வேறு சிவில் சமுக அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் போராடிக்கொண்டிருக்கின்றன.
இத்தகைய போராட்டங்களின் தீவிரத்தை சகித்துக்கொள்ள முடியாத சிறீலங்கா அரசு, சிவில் சமுக அமைப்புகளை நலினப்படுத்தும் கைங்கரியத்துக்குள் ஆழமாக இறங்கியுள்ளது.
இதன் ஒரு அங்கமாக வற்றாப்பளை, கேப்பாப்பிலவு பகுதிகளைச்சேர்ந்த மாதர் அபிவிருத்தி சங்கங்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், கூட்டுறவு சங்கங்கள், கமக்கார அமைப்புகள், முன்பள்ளிகள், ஆலய பரிபாலன சபைகள் என்று பல்வேறு சிவில் சமுக அமைப்புகளின் பிரதிநிதிகளை, ஒட்டுசுட்டான் முள்ளியவளை பிரதான வீதியில் அமைந்துள்ள ஒட்டுசுட்டான் “டவர் காம்ப்”க்கு கடந்த 12.02.2014 அன்று ஒரு மணிக்கு, அழைத்து சிறீலங்கா இராணுவத்தினர் சந்தித்துள்ளனர். சந்திப்புக்கான அழைப்பு தொலைபேசி அழைப்புகள் மூலமே விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில், “இராணுவ சேவைக்கு பெண் பிள்ளைகளை இணைத்துத்தருமாறு” இராணுவத்தினரால், சிவில் சமுக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதோடு, “ஊர்களுக்குள் புதிதாக யார் யார் வருகிறார்கள், போகிறார்கள்” என்பது பற்றி கண்காணிக்குமாறும், தகவல் தருமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை சந்திப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தவர்களுக்கு, குறிப்பாக பெண்கள் சிலருக்கு, தொலைபேசி அழைப்பு எடுத்து, “நீங்க வரேல்ல தானே, நாங்க ஒங்கள தான் பாத்திருந்தது, நீங்க வந்தா நல்லம், போன மொறயும் நீங்க வரேல்ல தானே, அடுத்த மொற நீங்க கட்டாயம் வாரது, சரியா” என்று கெஞ்சல் ஸ்தாயி விளையாட்டுகள் காட்டியதாகவும் அறிய முடிகின்றது.
சூழ்ச்சியின் சூத்திரதாரி!
இராணுவத்தினர் காணிகளை சுவீகரிக்க கிராம அபிவிருத்தி சங்கத்தின் பெயரால் ஒப்புதல் கடிதம் வழங்கி, கேப்பாப்பிலவு மக்களின் பூர்வீக காணிகளை (400 ஏக்கர்கள்) சிறீலங்கா அரச படைகள் சுவீகரித்துக்கொண்டு, மாற்று காணிகளில் மக்களை பலவந்தமாக குடியமர்த்தவும், கேப்பாப்பிலவு மாதிரி கிராமம் உருவாகவும் காரணமாகிய கேப்பாப்பிலவு கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் பரமேஸ்வரனே குறித்த சந்திப்பை ஒழுங்கமைத்துள்ளார்.
சடுதியாக மாற்று நிலங்களில் குடியமர்த்தியதால், என்ன தொழிலில் ஈடுபடுவதென்றே தெரியாமல் மக்கள் குழம்பியிருந்த நிலையிலும், “இராணுவத்தினர் தந்த மாற்று நிலங்கள் வேண்டாம், தமக்கு தமது பூர்வீக நிலங்களே வேண்டும்” என்று மக்கள் போராடிக்கொண்டிருக்க, இவரோ, கேப்பாப்பிலவு பிரதேசத்திலிருந்து பணிநிலை மாற்றலாகிச்செல்லும் பிரிகேடியர் சமரசிங்கவுக்கு (2013ம் வருடம்) விழா எடுப்பதற்காக,
கிராம அபிவிருத்தி சங்கத்தின் மூலம் “கட்டாயம் எல்லோரும் 1000 ரூபா வீதம் காசு தர வேண்டும், இல்லையென்றால் சங்க பதிவிலிருந்து நீக்கப்படுவீர்கள்” என்று மக்களை மிரட்டி பணம் வசூலித்தும், சங்கத்தின் இருப்பு பணத்தை செலவழித்தும், 70,000 ஆயிரம் ரூபா செலவில் சமரசிங்கவுக்கு ஒன்றரை பவுன் தங்கச்செயின் அணிவித்து அழகு பார்த்தவர் என்பதும், சமரசிங்கவின் ஞாபகார்த்தமாக மாதிரிக்கிராமத்தின் 03வது ஒழுங்கைக்கு “சமரசிங்க வீதி” என்று பெயரை சூட்டி பிரிவு உபசார விழாவை நடத்தியவர் என்பதும்,நீங்கள் அவசியம் அறிந்திருக்க வேண்டியதே!
வடபிராந்திய புலனாய்வு ஊடகவியலாளர்,
-கழுகுகண்-


ஊடகத்துரோகிகள்-
கடந்த 08.03.2014 அன்று எமது செய்தித்தளத்தில் “பாதீனியம் வளர்க்கும் கமநல அபிவிருத்தி திணைக்களம்! ஒரு இலட்சம் ரூபாய் தண்டப்பணம் அறவிடுமா வவுனியா விவசாய திணைக்கள விரிவாக்கல் பிரிவு? என்று கேள்வியெழுப்பி புலனாய்வு அறிக்கையிட்டிருந்தோம்.
எமது செய்தித்தளத்தின் வடபிராந்திய புலனாய்வு ஊடகவியலாளர் கழுகுகண், குறித்த புலனாய்வு அறிக்கையிடலை செய்திருந்தார்.
இந்நிலையில் வவுனியா மத்திய புகையிரத நிலையத்துக்கு எதிர் பக்கமாக (புகையிரத நிலையத்தின் முகப்பிலிருந்து வடகிழக்கு திசையில் 50 மீற்றர்கள் தூரத்தில்) அமைந்துள்ள “கமநல அபிவிருத்தி திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது” என்று அறிவிப்புப்பலகை நாட்டப்பட்டிருக்கும் குறித்த காணியை, கடந்த (09.03.2014 அன்று) ஞாயிற்றுக்கிழமை அரச விடுமுறை நாளாக இருந்த போதிலும், பிற்பகல் 4.00 மணியிலிருந்து 5.00 மணிவரை கமநல அபிவிருத்தி திணைக்களத்தை சேர்ந்த மூவர் சுத்தப்படுத்திக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்துள்ளது.
அதேவேளை துப்பரவு செய்யப்பட்ட குறித்த காணியை ஒளிப்படம் எடுப்பதற்காக அக்காணி தொடர்பில் புலனாய்வு அறிக்கையிடலை செய்த ஊடகவியலாளர் அவ்விடத்துக்கு வருவார், அவர் யார் என்பதை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்று பிற்பகல் 6.00 மணிவரை அவ்விடத்தில் சிலர் உளவு பார்த்து காத்திருந்ததாகவும் எமக்கு அறியக்கிடைக்கின்றது.
ஊடகத்துரோகிகளும், உலுத்தர்களும்:
இன முன்னேற்றத்தில் துடிப்பு, நடப்பு பிரச்சினைகளில் அக்கறை, எதிர்கால தேசம் குறித்த பரந்த சிந்தனை, மக்களின் அத்தியாவசியத்தை உணர்ந்து செயல்படுதல் என்று செய்தியறிக்கைகளை இடாமல், ஆரோக்கியமான ஒரு போட்டியைக்கொடுத்து மிகச்சிறப்பான ஊடக கலாசாரத்தை (ஊடக ஒழுக்கப்பண்புகள்) பேணாமல், அதற்கு பொருத்தமான ஊடகப்பலத்தையும் எழுத்தையும் பிரயோகிக்காமல் “இவர் தான் அந்த பெயரில் எழுதுகிறார், அவர் தான் இந்த பெயரில் எழுதுகிறார்” என்று ஊடகவியலாளர்களை காட்டிக்கொடுத்துக்கொண்டும், சதிவலை விரித்துக்கொண்டும் ஈழத்தில் ஒரு கும்பல் திரிந்து கொண்டிருப்பதாக எமக்கு ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நிலைமை கட்டுப்பாட்டை மீறிப்போனால், சிங்கள ஆட்சியாளர்களாலும், அடிவருடிகளாலும் ஈழத்தில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டாலோ, அல்லது கடத்தப்பட்டாலோ, அல்லது காணாமல் போகச்செய்யப்பட்டாலோ, தமிழ் மக்களின் பாதுகாப்பு கருதி, நலன் கருதி, ஊடகத்துறைக்குள் இருந்து கொண்டே ஊடகவியலாளர்களை காட்டிக்கொடுத்துக்கொண்டிருப்பவர்கள் யார் அவர்கள்? என்பதை ஒளிப்படங்களுடனும், ஆதாரங்களுடனும் வெளிப்படுத்தப்படும் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
எமது செய்தித்தளத்தின் சிறப்பு செய்தியாளர்களும், புலனாய்வு ஊடகவியலாளர்களும் நாடு முழுக்கவும் உள்ளார்கள் என்பதையும், அவர்கள் சமுக அநீதிக்கு எதிராக கிளர்ந்தெழுந்து அதிகளவில் செய்தியறிக்கைகளை இடுவதோடு, அங்கு நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும், அசைவுகளையும், அரசியல் சார்ந்தும், சமுகம் சார்ந்தும், பொதுநலன் சார்ந்தும் ஒவ்வொரு தனிநபர்களின் நடவடிக்கைகளையும் மிகவும் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் சம்பந்தப்பட்டவர்களுக்கும், சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கும் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டுவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.
அதேவேளை எத்தகைய மிரட்டல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் பணியாமல், கிஞ்சித்தும் பயமில்லாமல், எமது செய்தியாளர்கள் ஈழமக்களின் இழப்புகள், கவலைகள், துயரங்கள், கண்ணீர், வலிகள், விருப்பு வெறுப்புகள், அபிலாசைகள், தேவைகள், அவலங்களை வெளிக்கொண்டு வருவார்கள் என்பதையும், எமது செய்தியாளர்களின் முதுகை நோக்கி குத்துவாளை எறிந்தாலும், அது அவர்களின் கழுத்தில் முத்துமாலையாகத்தான் விழும் என்பதையும் சொல்லிக்கொள்வதில் பெரு மகிழ்ச்சியுறுகிறோம்.
நன்றி,
-நிர்வாகம்-