
மலேசிய விமானத்தில் பயணித்த மர்ம நபர்களின் போட்டோக்கள் இதோ! மாயமாகும் முன்னரே, மர்மமாக சில விஷயங்கள் நடந்து உள்ளனவே
மலேசிய விமான ‘மர்ம நபர்’ டீலை ஏன் ‘ஊதுறாங்க’ தெரியுமா? இஸ்லாமிய தொடர்பு!

கடந்த சனிக்கிழமை காலை வானில் மாயமாக மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த இரு ‘மர்ம மனிதர்கள்’, பற்றிய பரபரப்பு தகவல்கள் மீடியாக்களில் உலாவிக்கொண்டு இருக்கின்றன. போலி பாஸ்போர்ட்டில் பயணித்த இவர்கள் இருவருக்கும், விமானம் மாயமானதற்கும் இடையே ஏதாவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் மீடியாக்கள் அலசுகின்றன.
நிஜமாகவே, இந்த இரு ‘மர்ம மனிதர்களுக்கும், மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமானதற்கும் இடையே ஏதாவது தொடர்பு இருக்கலாமா?
அந்த விஷயத்துக்கு போவதற்குமுன், இந்த விவகாரம் தொடர்பாக மீடியாக்களில் என்ன சொல்லப்படுகிறது என்று பாருங்கள். இது பற்றி எழுதியுள்ள குறைந்தபட்சம் பாதி (தமிழ்) மீடியாக்களுக்கு, விமானத்துறை பற்றிய தெளிவான ஐடியா ஏதும் கிடையாது. அவர்கள் பாட்டுக்கு, “விமானத்தில் இருந்த மர்ம நபர்கள்தான், தீவிரவாதிகள்” என்று ஏதேதோ எழுதித் தள்ளுகிறார்கள்.
இவர்கள் காமெடி பண்ணுவதை விட்டுவிடலாம்.
மற்றொரு தரப்பினர், பெரும்பாலும் ஆங்கில மீடியாக்கள், இந்த ‘மர்ம நபர்கள்’ விவகாரத்தை தூக்கிப் பிடிப்பதற்கு, வேறொரு காரணம் உண்டு. தமிழ் மீடியாக்களில் அந்த விஷயம் இன்னமும் வந்து சேரவில்லை
அந்தக் காரணம் என்ன தெரியுமா?
இந்த இரு ‘மர்ம நபர்களுக்காக’ டிக்கெட் எடுக்கப்பட்ட தாய்லாந்து நாட்டு ட்ராவல் ஏஜென்சி, இஸ்லாமியர்களுடன் தொடர்புடையது. புக்கிங் செய்த ட்ராவல் ஏஜென்ட் பெண்ணும் இஸ்லாமியர். இரு பயணிகளுக்காக பணம் செலுத்தி டிக்கெட் எடுத்த நபரின் பெயர், அலி. ஈரானியரான அவரும் இஸ்லாமியர்.
இதை வைத்துக்கொண்டுதான் ஆங்கில மீடியாக்கள், ‘மர்ம நபர்களின் தீவிரவாத நடவடிக்கை’ என்று எழுதுகிறார்கள். (நாளை இந்த விஷயம் சற்று தாமதமாக நம்மூர் மீடியாக்களில் வரும்போது, என்ன போடு போடுவார்கள் என்பதை, இருந்து பாருங்கள்)
எமது ஊகம், ‘வேறு எதையோ’ மறைப்பதற்காக, இந்த ‘மர்ம நபர்கள்’ விஷயம் பெரிதுபடுத்தப் படுகிறது. அதாவது, இதை வைத்து விவகாரத்தை யாரோ திசைதிருப்புகிறார்கள். ‘சர்வ வல்லமை பொருந்திய’ சர்வதேச அமைப்பு ஒன்று மீடியாக்களை கைகளில போட்டால், எந்த விஷயத்தையும் சுலபமாக திசைதிருப்பலாம்.
இந்த ‘மர்ம நபர்கள்’ விவகாரத்தில் நாம் சேகரித்த தகவல்களின் அடிப்படையில், இது வெறும் ஆட்கடத்தல் ஆபரேஷன்தான். இவர்கள் குறிப்பிடும் ‘மர்ம நபர்கள்’ தீவிரவாதிகள் கிடையாது. இஸ்லாமுக்கும், இதற்கும் தொடர்பும் ஏதுமில்லை. இந்த ஆட்கடத்தல் ‘ரிங்’கில் (Human trafficking ring) தொடர்புடைய சிலர், மதத்தால் இஸ்லாமியர்கள். அவ்வளவுதான் விஷயம்.
சரி. இவர்கள் எப்படி டிக்கெட் எடுத்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறினார்கள்?
தாய்லாந்துக்கு வந்த இரு வெவ்வேறு நாடுகளை சேர்ந்த ஐரோப்பிய உல்லாசப் பயணிகளின் பாஸ்போர்ட்டுகள் திருட்டுப் போயின. இருவரும், தத்தமது தூதரகத்தில் முறையீடு செய்து, புது பாஸ்போர்ட்டுகளை எடுத்து விட்டனர்.
இவர்களில் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த கிரிஸ்டியன் கோசெல், தமது நாட்டுக்கு போய்விட்டார். இத்தாலியரான லுய்கி மரால்டி, இன்னமும் தாய்லாந்தில் தங்கியுள்ளார்.
அவரது போட்டோவை இடப்புறம் பார்க்கவும்.
இந்த இரு பாஸ்போர்ட்களும் திருட்டு போனது குறித்து, இரு நாடுகளும் சர்வதேச போலீஸூக்கு உடனேயே தெரியப்படுத்தி விட்டன.
இரு பாஸ்போர்ட்களும், இன்டர்போலால் ‘பிளாக் லிஸ்ட்டிங்’ செய்யப்பட்டு விட்டன.
அதாவது, அவற்றில் பயணிக்க முடியாது.
இம்மாதம் (மார்ச்) 6-ம் தேதி, வழமையாக வரும் கஸ்டமர் ஒருவர் வருகிறார். ஈரான் நாட்டவரான அவரது பெயர், ‘அலி’ என்பது மட்டுமே, இந்த ட்ராவல் ஏஜென்சியில் பணிபுரியும் பெண்ணுக்கு தெரிந்துள்ளது.
“கிரிஸ்டியன் கோசெல், லுய்கி மரால்டி என்ற இரு பெயர்களில் ஐரோப்பாவுக்கு டிக்கெட் எடுக்க வேண்டும்” என்கிறார் இவர். “இருவரும் கோலாலம்பூரில் இருந்து புறப்பட வேண்டும். ஒருவர் பிராங்பர்ட் (ஜேர்மனி) போகவேண்டும், மற்றவர் கொப்பென்ஹகன் (டென்மார்க்) செல்ல வேண்டும்” என்கிறார்.
தாய்லாந்தில், ஈரான்காரர் ஒருவர் வந்து, ஒரு ஆஸ்திரியருக்கும், ஒரு இத்தாலியருக்கும், ஜெர்மனிக்கும், டென்மார்க்குக்கும் டிக்கெட் எடுப்பது, அதிசயமான விஷயம்தான். ஆனால், ட்ராவல் ஏஜென்ட் அதை கண்டுகொள்ளவில்லை.
இதிலிருந்து, இந்த ஈரானியர் அலி, ஆட்கடத்தல் ‘ரிங்’கை சேர்ந்தவர் என்பது ட்ராவல் ஏஜென்ட்டுக்கு ஏற்கனவே தெரியும் என ஊகிக்கலாம்.
ட்ராவல் ஏஜென்ட், டிக்கெட்டுகளில் விலைகளை பார்த்தபோது, சீனா பீய்ஜிங் ஊடாக செல்லும் டிக்கெட்டே விலை குறைவானதாக இருந்தது. அந்த ரூட்டிலேயே புக்கிங் செய்யப்பட்டது.
கோலாலம்பூரில் இருந்து பீய்ஜிங்குக்கு மலேசியன் ஏர்லைன்ஸ், அங்கிருந்து ஆம்ஸ்ட்டர்டாம் (நெதர்லாந்து) ஊடாக செல்வதற்கு KLM (ராயல் டச் ஏர்லைன்ஸ்) விமானத்தில் புக்கிங் செய்யப்பட்டது.
கவனியுங்கள், டிக்கெட் மலிவாக உள்ளது என்ற காரணத்தால்தான் இந்த ரூட்டில் புக்கிங் செய்யப்பட்டது. மலேசியன் ஏர்லைன்ஸோ, பீய்ஜிங் நகரோ கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என புக்கிங் செய்யப்படவில்லை.
இதை எப்படி சொல்கிறோம் என்றால், இதே அலி, இதே இரு பயணிகளுக்காக, இதே ட்ராவல் ஏஜென்சியில் மார்ச் 1-ம் தேதி டிக்கெட் புக்கிங் செய்தார். அப்போது வேறு விமான ரூட் மலிவாக இருந்தது. ஆனால், அந்த புக்கிங்குக்கான டிக்கெட்டுகளை 6-ம் தேதி வரை எடுக்காத காரணத்தால், அவை கேன்சலாகி விட்டன.
மீண்டும் 6-ம் தேதி அலி செய்த புக்கிங்தான், மலேசியன் ஏர்லைன்ஸ் புக்கிங்.
இம்முறை அலி, டிக்கெட் எடுக்க தயாராக பணத்துடன் வந்திருந்தார். காரணம், மறுநாள் நள்ளிரவுக்குப் பின், விமானம் புறப்படுகிறது.
கிரான்ட் ஹொரைசன் ட்ராவல் ஏஜென்சி, இந்த டிக்கெட்டை இஷ்யூ செய்யவில்லை (அதற்கான லைசென்ஸ், அல்லது, பி.எஸ்.பி. (பாங்க் செட்டில்மென்ட் பிளான்) ஒப்பந்தம் இவர்களுக்கு இல்லாது இருந்திருக்கலாம்). ‘சிக்ஸ் ஸ்டார்ஸ் ட்ராவல்’ என்ற மற்றொரு ட்ராவல் ஏஜென்சியால் டிக்கட் இஷ்யூ செய்யப்பட்டது.
இந்த டிக்கெட்டுகளை பார்க்க வேண்டுமா, இங்கே கிளிக் செய்யவும்.
நீங்கள் பார்த்த டிக்கெட்டில் இருந்து என்ன தெரிகிறது?
டிக்கெட்டின் விலை 19,560 தாய்லாந்து பாட். (சுமார் 600 அமெரிக்க டாலர்) இரு டிக்கெட்டுகளும் அடுத்தடுத்த இ-டிக்கெட் இலக்கங்களில் இஷ்யூ செய்யப்பட்டுள்ளன. 7842280116099, 7842280116100. (டிக்கெட்டின் இடது கீழ் மூலையில் பார்க்கவும்)
மற்றொரு விஷயத்தையும் கவனியுங்கள், டிக்கெட் இலக்கங்கள் இரண்டும், ‘784’ என்ற எண்ணில் தொடங்குகிறது அல்லவா?
டிக்கெட்டில் உள்ள முதல் 3 இலக்கத்தை, ஏர்லைன் ப்ரிபிக்ஸ் (airline prefix) என்பார்கள். எந்த ஏர்லைன் இந்த டிக்கெட் ஸ்டாக்குக்கு சொந்தக்கார ஏர்லைன் என்பதை அது குறிக்கும்.
இந்த இரு டிக்கெட்டுகளும், மலேசியன் ஏர்லைன்ஸ், KLM ஆகிய இரு ஏர்லைன்ஸில் புக்கிங் செய்யப்பட்டுள்ளதால், ஏர்லைன் ப்ரிபிக்ஸ் இந்த இரு ஏர்லைன்ஸில் ஒன்றாக இருக்கும் என்றுதானே எதிர்பார்ப்பீர்கள்? ஆனால், இந்த டிக்கெட்டுகளில் அதுதான் இல்லை.
‘784’ என்ற இலக்கம், எந்த விமான நிறுவனத்துக்கு சொந்தமானது தெரியுமா?
சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் (China Southern Airlines)!
வழமையாக ஆட்கடத்தல் செய்பவர்கள், ஏர்லைன்களை ஏமாற்ற செய்யும் சிறு தந்திரம்தான் இது. (பயணிக்கும் இரு விமான நிறுவனங்களைவிட, 3-வது ஒரு விமான நிறுவனத்தின் ப்ரிபிக்ஸில் புக்கிங் செய்வார்கள்.
காரணம், புக்கிங் தொடர்பான சில விபரங்கள், மற்றும் புக்கிங் ஹிஸ்டரி, பயணிக்காத விமான நிறுவனத்தின் கம்ப்யூட்டரிலேயே தங்கிவிடும். பயணிக்கும் விமானத்தின் கம்ப்யூட்டருக்கு போகாது.)
இப்படித்தான் டிக்கெட் எடுத்து, ‘மர்ம நபர்கள்’ இருவரும் மலேசியன் விமானத்தில் ஏறி (அல்லது ஏற்றப்பட்டு) மாயமாக மறைந்து போயினர்.
எமது ஊகம், இந்த இரு ‘மர்ம நபர்களுக்கும்’ தாம் பயணிக்கும் மலேசியன் விமானம் மாயமாக மறையப் போகிறது என்பது முன்கூட்டியே தெரிந்திராது. அவர்களுக்கு மட்டுமல்ல, புக்கிங் செய்த ட்ராவல் ஏஜென்ட், பணம் கொடுத்த ஈரானியர் அலி ஆகிய இருவருக்கும்கூட, விமானம் மாயமாக போகிறது என்பது தெரிந்திராது என்பது எமது ஊகம்.
ஆனால், இந்த விவகாரத்தில் இஸ்லாமிய தொடர்புடைய ட்ராவல் ஏஜென்சி, ஈரான்காரர் எல்லாம் வருவதால், இந்த ‘மர்ம நபர்கள்’ விவகாரத்தை அடுத்த சில தினங்களுக்குள் பெரிதாக ஊதி, பெரிதுபடுத்துவார்கள்
மாயமாக மறைந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370-ல் ஏறுவதற்காக வந்த பயணிகள் அனைவரும், கோலாலம்பூர் விமான நிலைய செக்யூரிட்டி கேமராவில் பதிவாகியுள்ளனர். அந்த பதிவில் இருந்த போட்டோக்களையும், பயணிகள் பட்டியலில் உள்ள பெயர்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பணி முடிந்து விட்டது.
நிஜ அடையாளங்களுடன் பயணித்த பயணிகளின் பெயர்களுடன், போட்டோக்களை ஒப்பிட்டு பார்த்ததில், இரு போட்டோக்கள் மீதமாக உள்ளன.
இந்த இரு போட்டோக்களும்தான், அந்த விமானத்தில் போலி பாஸ்போர்ட்டில் பறந்த இருவருடைய போட்டோக்கள் என்று இதிலிருந்து ஊகிக்கப்படுகிறது.
தற்போதுள்ள தகவல்களின்படி, ஆஸ்திரிய, இத்தாலிய பாஸ்போர்ட்டுகளில் பயணம் செய்ய, அடையாளம் காணப்படாத, மர்ம மனிதர்கள்:
மலேசிய விமானம் மாயமாகும் முன்னரே, மர்மமாக சில விஷயங்கள் நடந்து உள்ளனவே!
“சீனாவின் விமான நிலையம் மீதான தீவிரவாத தாக்குதல் ஒன்று நடக்கலாம் என்ற உளவுத்தகவல் (மலேசிய விமானம் மாயமான தினத்துக்கு) எமக்கு முன்னரே கிடைத்திருந்தது” என்று தாய்வான் நாட்டு உளவுத்துறை தலைவர் இன்று கூறியுள்ளது குறித்து விறுவிறுப்பு.காமில் BRIEF NEWS வெளியிட்டிருந்தோம்.
தாய்வான் உளவுத்துறை NSB-யின் தலைவர் சய் டி ஷெங், இந்த விஷயத்தை வெளியிட்டதன் பின்னணி என்ன?
அது தொடர்பாக அவர் விரிவாக எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால், இந்த உளவுத் தகவலை தாய்வான் உளவுத்துறை எங்கிருந்து பெற்றது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.
இந்த தகவல், உளவுத்துறைக்கு கிடைத்தது, ‘சைனா ஏர்லைன்ஸ்’ விமான நிறுவனத்திடம் இருந்துதான் என்று தெரிகிறது.
‘சைனா ஏர்லைன்ஸ்’ என்பது, தாய்வான் நாட்டு சர்வதேச விமான நிறுவனம் (‘ஏர் சைனா’ சீனா நாட்டு தேசிய விமான நிறுவனம். அதையும், இதையும் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். தாய்வான்காரர்கள், தாம்தான் நிஜ சீனா என்று சொல்வதால், தமது நாட்டு விமான நிறுவனத்துக்கு ‘சைனா ஏர்லைன்ஸ்’ என்று பெயர் வைத்துள்ளனர்).
கடந்த 4-ம் தேதி, சைனா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு ஒரு போன் அழைப்பு வந்திருக்கிறது. அழைத்த நபர், பிரெஞ்ச் மொழியில் பேசியிருக்கிறார். “தீவிரவாத தாக்குதல் ஒன்று நடப்பதற்கான சாத்தியம் பற்றி பேசவேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
போனில் பேசிய நபர், “சீனாவுடன் தொடர்பான தீவிரவாத தாக்குதல் ஒன்று திட்டமிடப்படுகிறது. சீனாவின் பீய்ஜிங் விமான நிலையம், தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகலாம். அதுதான், உங்களை எச்சரிக்கை செய்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
விமான நிறுவனங்களுக்கு இப்படியான எச்சரிக்கை அழைப்புகள் அவ்வப்போது வருவதுண்டு. ஏதோ ஒரு காரணத்தால், இந்த எச்சரிக்கை மிக சீரியசாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. விஷயம், தாய்வான் உளவுத்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மலேசிய விமானம் மாயமாகிவிட்ட நிலையிலும், தாய்வான் நாட்டு உளவுத்துறை தலைவர், தமக்கு உளவுத் தகவல் கிடைத்தது என்று கூறியுள்ள நிலையிலும், ‘சைனா ஏர்லைன்ஸ்’, தமக்கு எச்சரிக்கை அழைப்பு போன் கால் வந்ததை ஒப்புக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக ‘சைனா ஏர்லைன்ஸ்’ இப்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், “China Airlines on March 4 received calls claiming to provide intelligence on terror organisations, referring to mainland China, (saying) Beijing airport will have terrorist attacks” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அழைப்பு வந்தவுடன் ‘சைனா ஏர்லைன்ஸ்’, தாய்வான் உளவுத்துறைக்கு தகவல் கொடுத்ததுடன், சீனா, பீய்ஜிங்கில் உள்ள தமது அலுவலகத்துக்கும் ஒரு சர்குலர் அனுப்பியது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 5-ம் தேதி அனுப்பப்பட்டுள்ள இந்த சர்குலரில், “All staff in mainland China please be aware of individual security. Carry out your security responsibilities accordingly” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் பீய்ஜிங் வரும் வழியில் மாயமாக மறைந்தது, 8-ம் தேதி அதிகாலை. அதற்கு 3 நாட்களுக்கு முன் 5-ம் தேதி, ‘சைனா ஏர்லைன்ஸ்’ தமது பீய்ஜிங் அலுவலகத்துக்கு இந்த எச்சரிக்கை சர்க்குலரை அனுப்பி வைத்தது. அதற்கு 1 தினம் முன் (4-ம் தேதி), தம்மை போனில் யாரோ எச்சரித்ததாக இப்போது ஒப்புக் கொள்கிறது. இந்த முழு விவகாரமுமே, மர்ம கதை போல உள்ளது. காரணம், இதில் நிறையவே லூஸ்-என்ட்ஸ் உள்ளன. ஒவ்வொன்றாக சொல்கிறோம், நீங்களே பாருங்கள்.
1) யாரோ ஒருவர் போனில் அழைத்து (பிரெஞ்சில்) சொல்லிய தகவலை, ‘சைனா ஏர்லைன்ஸ்’ இவ்வளவு சீரியசாக ஏன் எடுத்தது? அதன் நம்பகத்தன்மை எப்படி உறுதி செய்யப்பட்டது? அந்த போன் கால் ட்ரேஸ் பண்ணப்பட்டதா? அழைத்த நபர் யாரென்று தெரியுமா?
கிடைத்த எச்சரிக்கை மிக துல்லியமானது என்பதை உறுதி செய்யாமல், ஒரு விமான நிறுவனம் இப்படி ரியாக்ட் செய்ய மாட்டார்கள். எச்சரிக்கையை உறுதி செய்தது யார்? தாய்வான் உளவுத்துறையா?
2) போனில் அழைத்து எச்சரிக்கை தகவலை கூறியவர், எதற்காக தாய்வானுக்கு போன் செய்ய வேண்டும்? ‘சீனாவின் பீய்ஜிங் விமான நிறுவனம் மீது தீவிரவாத தாக்குதல்’ என தெளிவாக குறிப்பிட்டுள்ள அந்த நபர், ஏன் சீனாவை அழைத்து எச்சரிக்கவில்லை? ஏன், சீனாவின் எதிரியான தாய்வானை அழைத்தார்? (சீனாவுக்கு எதிராக அமெரிக்காவால் வளர்த்து விடப்படும் நாடு, தாய்வான்)
3) சரி, தாய்வானை ஏதோ காரணத்துக்காக அழைத்ததாக வைத்துக் கொண்டாலும், அங்கு ஏன் ‘சைனா ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தை அழைக்க வேண்டும்?
இந்த கேள்விக்கு காரணம், அரசியல் ரீதியான முரண்பாடுகளால், ‘சைனா ஏர்லைன்ஸ்’ நிறுவனம், தாய்வான் தலைநகர் தைபேயிலிருந்து பீய்ஜிங்குக்கு மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவையையே நடத்துகிறது. பீய்ஜிங் நகரில் பெரிதாக ஆபரேஷன் இல்லாத ஒரு விமான நிறுவனத்தை அந்த நபர் ஏன் எச்சரிக்க வேண்டும்?
4) தைபேயிலிருந்து பீய்ஜிங்குக்கு இரு விமான நிறுவனங்கள் அதிகபட்ச நேரடி விமானசேவையை நடத்துகின்றன. ‘ஏர் சைனா’, ‘ஹைனன் ஏர்லைன்ஸ்’ ஆகிய இரு நிறுவனங்கள் அவை. இவற்றை தவிர, ‘சைனா ஈஸ்டர்ன் ஏர்’ நிறுவனம், தைபேயிலிருந்து பீய்ஜிங்குக்கு ஷாங்காய் ஊடாக விமான சேவையை நடத்துகிறது.
இந்த மூன்றுமே, சீனா நாட்டு நிறுவனங்கள்.
இந்த மூன்று நிறுவனங்களில் ஒன்றை அழைத்து எச்சரிக்காத அந்த நபர், எதற்காக ‘சைனா ஏர்லைன்ஸ்’ விமான நிறுவனத்தை அழைத்து எச்சரித்தார்?
5) மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் பீய்ஜிங் வரும் வழியில் மாயமாக மறைந்த உடனே, எதற்காக தாய்வான் உளவுப் பிரிவின் தலைவர் இந்த உளவுத் தகவல் பற்றி யாரும் கேட்காமலேயே சொல்கிறார்? 4-ம் தேதி வந்த எச்சரிக்கை தொலைபேசி அழைப்பு பற்றி இப்போது ஏன் அறிக்கை விடுகிறது, ‘சைனா ஏர்லைன்ஸ்’?
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சனிக்கிழமை காலை பீய்ஜிங் வரும் வழியில் மாயமாக மறைந்து, இப்போதுவரை, தடயமே இல்லாமல் எல்லாமே மர்மமாக நடப்பது ஒன்றும் சாதாரண விஷயம் கிடையாது. இதன் பின்னணியில் ஏதோ பெரிய விஷயம் ஒன்று உள்ளது. நிச்சயமாக ‘பெரிய நாடு’ ஒன்று இதில் தொடர்பு பட்டுள்ளது. இத்துடன், தாய்வானுக்கும், இந்த விவகாரத்துக்கும் ஏதோ கனெக்ஷன் உள்ளது.
மேலே நாம் குறிப்பிட்ட விஷயங்களை படித்துவிட்டு, ஒருமுறைக்கு இருமுறை யோசித்துப் பாருங்கள். பல சந்தேகங்கள் எழும். சில ஊகங்களை செய்ய முடியும். மற்றொரு கட்டுரையில், எமது ஊகங்களை தருகிறோம், உங்கள் ஊகங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.