
வள்ளல் பிறந்தார்!! பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு.. (பாகம்-1-4)

திரை உலகிலும், அரசியலிலும் சகாப்தம் படைத்த எம்.ஜி.ஆரின் முழுப்பெயர் எம்.ஜி.ராமச்சந்திரன். பெற்றோர் பெயர் கோபாலமேனன் – சத்தியபாமா.
கோபாலமேனன், மாஜிஸ்திரேட்டாக பணிபுரிந்து வந்தார். அரூர், எர்ணாகுளம், திருச்சூர், கரூர் முதலிய இடங்களில் வேலை பார்த்தார். அநீதிக்கு துணை போக மறுத்ததால் அவரை வேறு ஊருக்கு பணி மாற்றம் செய்து அன்றைய ஆட்சியாளர்கள் உத்தரவிட்டனர்.
இதனால் மன வேதனை அடைந்த கோபாலமேனன், தனது மாஜிஸ்திரேட் பதவியை ராஜினாமா செய்து விட்டு மனைவியுடன் இலங்கைக்கு சென்றார்.
கோபாலமேனன் – சத்தியபாமா தம்பதியினர் இலங்கையில் வசித்து வந்தபோது, 1917-ம் ஆண்டு ஜனவரி 17-ந்தேதி சுவாதி நட்சத்திரத்தில் அவர்களுக்கு ஓர் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
சொந்த நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாட்டில் குடியேறிய வனவாச காலத்தில் அந்த அழகு திருமகன் பிறந்ததாலோஸஎன்னவோ?.. ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு ஏற்பட்ட வனவாசத்தை நினைவு கூரும் விதமாக எதிர்கால தமிழக வரலாற்றில் நீங்காத சிறப்பிடத்தை பிடித்த அந்த அதிசயப் பிறவிக்கு ‘ராம் சந்தர்’ என பெயர் சூட்டி அவர்கள் மகிழ்ந்தனர்.
கண்டியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹந்தானா என்ற இடத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தார். அந்த இடம் தமிழில் அ பச்சைக்காடு ஞ என்று அழைக்கப்படுகிறது. எம்.ஜி.ஆர். பிறந்த வீட்டில், தற்போது பள்ளிக்கூடம் நடந்து வருகிறது.
எம்.ஜி.ஆருக்கு எம்.ஜி.சக்ரபாணி, பாலகிருஷ்ணன் என்று இரண்டு அண்ணன்கள். கமலாட்சி, சுபத்ரா என்ற 2 தமக்கைகள். 4 குழந்தைகளுக்குப்பின் கடைக்குட்டியாகப் பிறந்தவர், எம்.ஜி.ஆர்.
பாலகிருஷ்ணன், கமலாட்சி, சுபத்ரா ஆகிய மூவரும் சிறு வயதிலேயே இறந்து விட்டனர். சக்ரபாணியையும், எம்.ஜி.ஆரையும் கோபாலமேனனும், சத்தியபாமாவும் அன்புடன் வளர்த்து வந்தனர்.
எம்.ஜி.ஆருக்கு 2 வயதானபோது, குடும்பத்துடன் தாயகம் திரும்பினார், கோபாலமேனன். முன்பு செல்வச் செழிப்புடன் வாழ்ந்த அவரது குடும்பம், ஒத்தப்பாலம் என்ற இடத்தில் வாடகை வீட்டில் வசித்தது.
1920-ம் ஆண்டு, கோபாலமேனன் திடீரென்று மாரடைப்பால் காலமானார். தந்தை இறந்த போது எம்.ஜி.ஆருக்கு மூன்று வயது. இரண்டு மகன்களையும் வளர்த்து ஆளாக்கும் பெரும்பொறுப்பு சத்தியா அம்மையார் தலையில் விழுந்தது.
அவருடைய தம்பி நாராயணனும், குடும்ப நண்பர் வேலு நாயரும் அப்போது கும்பகோணத்தில் வசித்து வந்தனர். ஆதரவு தேடி தனது இரு மகன்களுடன் சத்தியபாமாவும் கும்பகோணத்திற்கு வந்து சேர்ந்தார்.
அவரது தம்பி நாராயணன், அப்போது அ ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி ஞ என்ற நாடகக் குழுவில் பின்பாட்டு பாடி வந்தார்.
சக்ரபாணியும், எம்.ஜி.ஆரும் கும்பகோணம் ஆனையடியில் உள்ள பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டனர். இலங்கையில் இருந்து கொண்டு வந்திருந்த பணமும், நகைகளும் தீரும் வரை அன்றாட வாழ்க்கை சிரமம் இன்றி கழிந்தது. அதன்பின், குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க சத்தியபாமா அரும்பாடு பட்டார்.
அவரது தம்பி நாராயணன், குடும்பக் கஷ்டத்தைப் போக்க சத்தியபாமா அம்மையாரிடம் ஒரு யோசனை தெரிவித்தார். ‘சக்ரபாணியும், ராமச்சந்திரனும் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார்கள். நான் வேலை பார்க்கும் நாடக கம்பெனியில் சேர்த்துவிட்டால், விரைவில் முன்னுக்கு வந்து விடுவார்கள்’ என்று அவர் கூறினார்.
குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டும் என்று சத்தியபாமா விரும்பிய போதிலும், குடும்ப சூழ்நிலையைக்கருதி அவர்களை நாடகத்தில் சேர்க்க சம்மதித்தார்.
அதைத்தொடர்ந்து, அவர்களை நாடகத்தில் சேர்த்துவிட்டார், நாராயணன். அப்போது அந்த கம்பெனியில் பி.யு.சின்னப்பா, டி.எஸ்.பாலையா ஆகியோர் நடிகர்களாக இருந்தனர்.
ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நாடகங்களில் முதலில் சிறு வேடங்களில் தோன்றி நடித்துவந்த எம்.ஜி.ஆர், படிப்படியாக உயர்ந்து கதாநாயகன் பாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். இந்த காலகட்டத்தில்தான் தமிழில் பேசும் படங்கள் வரத்தொடங்கின.
1935-ம் ஆண்டு, எஸ்.எஸ். வாசன் எழுதிய அ சதிலீலாவதி ஞ என்ற கதை, சினிமாவாக தயாரிக்கப்பட்டது. இந்த படத்தின் மூலம் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்த எம்.ஜி.ஆர்., தமிழ் திரையுலகில் தனது பயணத்தை தொடங்கினார்.
எஸ்.எஸ்.வாசன், எம்.ஜி.ஆர், என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ். பாலையா ஆகிய நால்வருக்கும் இதுதான் முதல் படம்.
இந்தப் படத்தில் நடித்தபோது எம்.ஜி. ஆருக்கு வயது 19. முதல் படத்தில் நடித்ததற்காக அவருக்கு கிடைத்த சம்பளம் நூறு ரூபாய். அதை அப்படியே சத்தியபாமாவிடம் கொண்டு போய் கொடுத்து, ஆசி வழங்கி தன்னை வாழ்த்தும்படி தலை தாழ்த்தி நின்றார்.
எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் ஏழை-எளிய மக்களை வாழ்விக்க பிறந்த அந்த அன்பு மகனை உச்சி முகர்ந்த அருமை தாயார், அன்று தெய்வத்திடம் என்ன வரம் கேட்டு எம்.ஜி.ஆரை வாழ்த்தினாரோஸ? அது வரம் கேட்ட சத்தியபாமாவும், கேட்ட வரத்தைவிட பன்மடங்கு அதிகமாகவே ஆசியளித்த தெய்வமும் மட்டுமே அறிந்த ரகசியம்.
திருமணமும்-தகுதி உயர்வும்

எம்.ஜி.ஆரின் இரண்டாவது படம் “இரு சகோதரர்கள்”. இதில் சக்ரபாணியும் நடித்தார். இந்தப்படம் வெற்றிகரமாக ஓடியது. தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆருக்கு திருமணம் செய்து வைக்க சத்யபாமா அம்மையார் விரும்பினார்.
“நடிப்புத்துறையில் முன்னேறிய பிறகுதான் திருமணம்” என்று எம்.ஜி.ஆர். கூறினார். ஆனால் தாயார் தொடர்ந்து வற்புறுத்தவே திருமணத்துக்கு சம்மதித்தார். பாலக்காட்டைச் சேர்ந்த பார்க்கவி என்கிற தங்கமணியை எம்.ஜி.ஆருக்கு திருமணம் செய்து வைத்தார், சத்யபாமா.
துரதிர்ஷ்டவசமாக, பார்க்கவி சில ஆண்டுகளில் காலமானார். மனைவியின் மரணம் எம்.ஜி.ஆரை மிகவும் பாதித்தது. துறவிபோல் வாழ்ந்தார். மகனின் நிலையைக் கண்டு வருந்திய சத்யபாமா, அவருக்கு மறுமணம் செய்து வைக்க விரும்பினார். இதற்கு எம்.ஜி.ஆர். சம்மதிக்கவில்லை. எனினும், “பார்க்கவியை இழந்தது நமது துரதிர்ஷ்டம். என்றாலும், நீ வாழ்க்கையில் வெறுப்படைவது நல்லதல்ல. அது உன் உடல் நலனையும், எதிர்காலத்தையும் பாதிக்கும்” என்று சத்யபாமா எடுத்துக் கூறவே, மறுமணத்துக்கு எம்.ஜி.ஆர். சம்மதித்தார்.
தாயார் பார்த்து முடித்த சதானந்தவதியை, 1942-ம் ஆண்டு ஆனி மாதம் 16-ந் தேதி எம்.ஜி.ஆர். மணந்தார்.
சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் 25 ரூபாய் வாடகை வீட்டில் எம்.ஜி.ஆர். குடும்பத்துடன் குடியேறினார்.
முதல் முறையாக சதானந்தவதி கருத்தரித்தபோது அவரை காச நோய் பற்றிக் கொண்டது. அவருடைய வயிற்றில் உருவாகியிருந்த கரு, கர்ப்பப்பைக்கு வெளியே இருந்ததை டாக்டர்கள் கண்டு பிடித்தனர். அது அப்படியே வளர்ந்தால், தாயின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று டாக்டர்கள் கருதியதால் ஆபரேஷன் மூலம் அந்தக் கரு அகற்றப்பட்டது.
1947-ம் ஆண்டில், சென்னை அடையாறில் மாதம் 170 ரூபாய் வாடகைக்கு ஒரு வீடு பார்த்து குடியேறினார், எம்.ஜி.ஆர்.அங்கு வசித்தபோது, அன்னை சத்யா அம்மையார் காலமானார். அந்த துயரத்தில் இருந்து மீள எம்.ஜி.ஆருக்கு வெகு காலம் தேவைப்பட்டது.
1949-ம் ஆண்டில், சதானந்தவதிக்கு இரண்டாவது முறையாக கருச்சிதைவு ஏற்பட்டது. அதன் பின், அவர் உடல் நலம் குன்றி படுத்த படுக்கையானார். 1962-ல் அவர் மறையும் வரை, நோயாளியாகவே வாழ்ந்தார்.
எம்.ஜி.ஆர். தனது மனைவியை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டார். 20 ஆண்டு காலம், சதானந்தவதியுடன் குடும்பம் நடத்திய போதிலும், அவர் இல்லறத் துறவியாகவே வாழ்ந்தார்.
குடும்பத்தில் சோதனை நிறைந்திருந்தபோதிலும், படத்துறையில் அவர் படிப்படியாக முன்னேறிக்கொண்டிருந்தார்.
“வீர ஜெகதீஷ்”, “மாயா மச்சீந்திரா”, “பிரகலாதா”, “சீதா ஜனனம்” ஆகிய படங்களிலும் அவர் சிறிய வேடங்களில் நடித்தார்.
1941-ல் “ஏழிசை மன்னர்” எம்.கே.தியாகராஜ பாகவதருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு, “அசோக்குமார்” படத்தின் மூலம் அவருக்கு கிடைத்தது. எம்.ஜி.ஆரின் ஆரம்ப காலப் படங்களில் குறிப்பிடத்தக்க படம் “அசோக்குமார்.”அசோக்குமாரைத் தொடர்ந்து “தமிழறியும் பெருமாள்”, “தாசிப்பெண்”, “ஹரிச்சந்திரா” (ஜெமினி), “சாலிவாகனன்”, “மீரா”, “ஸ்ரீமுருகன்” முதலிய படங்களில் நடித்தார்.
பின்னணி பாடும் முறை கண்டுபிடிக்கப்படாத அந்த காலக்கட்டத்தில் சொந்தக் குரலில் பாடத்தெரிந்தவர்கள் மட்டுமே கதாநாயகனாக நடிக்க முடியும். அழகும், திறமையும் கொண்ட எம்.ஜி.ஆர்., அப்போதே கதாநாயகனாக உயர முடியாமல் போனதற்கு அதுதான் காரணம். 1946-ல் பின்னணி பாடும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. எம்.ஜி.ஆரின் வாழ்க்கையிலும் திருப்பம் ஏற்பட்டது.
இந்தியாவின் வரலாற்றில் 1947-ம் ஆண்டு எப்படி முக்கியமானதோ. அதேபோல், எம்.ஜி.ஆரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமானதாக அந்த ஆண்டு அமைந்தது.
1947 ஆகஸ்ட் 15-ந்தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது. அதற்கு 4 மாதங்களுக்கு முன்னதாக – அதாவது ஏப்ரல் 11-ந் தேதி எம்.ஜி.ஆர். முதன் முதலாகக் கதாநாயகனாக நடித்த “ராஜகுமாரி” படம் வெளியானது.
எம்.ஜி.ஆர். நடித்த முதல் திரைப்படமான “சதிலீலாவதி” 1936-ல் வெளியானது. அதற்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகுதான் “ராஜகுமாரி” திரைப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவின் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.
’எவர்கிரீன் ஹீரோ’வாக எம்.ஜி.ஆர். உயர்ந்தது எப்படி?
சூப்பர் ஹிட்டான ‘ராஜ குமாரி’

தமிழ் திரையுலகின் ‘எவர்கிரீன் ஹீரோ’வாக (என்றென்றும் பசுமையான கதாநாயகனாக) எம்.ஜி.ஆர். உயர்ந்தது எப்படி? என்பதை இன்றைய தொடரில் விரிவாக காண்போம்.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.ஏ.சாமி, இலங்கையில் வாழ்ந்தவர். அவர் ‘பில்ஹணன்’ என்ற நாடகத்தை எழுதி திருச்சி வானொலி நிலையத்துக்கு அனுப்பினார்.
அதை வானொலி நாடகமாக தயாரிப்பதற்கு ஒப்புக்கொண்ட திருச்சி வானொலி நிலையம், 29-08-1944 அன்று ஒலிபரப்பியது. அன்றைய சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர், இந்த நாடகத்தின் கதாநாயகன் பில்ஹணன் வேடமேற்று நடித்தார்.
எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த ஒரே ரேடியோ நாடகம் இதுதான். பாகவதர் பங்கேற்ற காரணத்தால், இந்த ரேடியோ நாடகத்தை தமிழகமே ஆவலுடன் கேட்டது. அப்படி கேட்டவர்களில் ஒருவர், நாடக மேதை டி.கே.சண்முகம். அவர் ‘பில்ஹணன்’ – ஐ மேடை நாடகமாக்க விரும்பினார்.
உடனே ஏ.எஸ்.ஏ.சாமியை தொடர்பு கொண்ட அவர், ‘பில்ஹணன்’ ரேடியோ நாடகத்தை மேடைக்கு ஏற்றவாறு மாற்றித்தருமாறு கேட்டுக்கொண்டார். அவரும், தக்கபடி மாற்றித் தந்தார். கதாநாயகனாக டி.கே.சண்முகம்; கதாநாயகியாக எம்.எஸ்.திரவுபதி நடிக்க மேடை நாடகமாக ‘பில்ஹணன் ’ அரங்கேறியது.
இந்தக் காலக்கட்டத்தில் ஜெமினி, மாடர்ன் தியேட்டர்ஸ் போல ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனமும் படத்தயாரிப்பு தொழிலில் முன்னணியில் இருந்தது. எம். சோமசுந்தரம், எஸ்.கே.மொகிதீன் ஆகிய இருவரும் ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிபர்களாக இருந்தார்கள்.
‘பில்ஹணன்’ மேடை நாடகத்தை பார்த்த ‘ஜுபிடர்’ சோமு, அதை படமாக்க முடிவு செய்தார். உடனடியாக, ஏ.எஸ்.ஏ.சாமியை அழைத்து, ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிக்க திட்டமிட்டுள்ள 6 படங்களுக்கு வசனம் எழுத ஒப்பந்தம் செய்து கொண்டார்.
அந்த ஒப்பந்தத்தின்படி, ‘வால்மீகி’, ‘ஸ்ரீமுருகன்’ ஆகிய படங்களுக்கு ஏ.எஸ்.ஏ.சாமி முதலில் வசனம் எழுதினார்.
‘ஸ்ரீமுருகன்’ படத்தில் கதாநாயகனாக (முருகனாக) ஹொன்னப்ப பாகவதர் நடித்தார். பரமசிவன் வேடத்தில் எம்.ஜி.ஆர். தோன்றினார். அவரும், பார்வதியாக நடித்த கே.மாலதியும் இப்படத்தில் ஆடிய சிவ- பார்வதி தாண்டவம், ரசிகர்களைக் வெகுவாக கவர்ந்தது.
ஜுபிடர் பட நிறுவனத்தில் ஒன்றாக பணியாற்றிய எம்.ஜி.ஆரும், ஏ.எஸ்.ஏ. சாமியும் நண்பர்கள் ஆனார்கள். அடுத்தபடியாக, ‘ராஜகுமாரி’ என்ற படத்தைத் தயாரிக்க ஜுபிடர் பிக்சர்ஸ் முடிவு செய்தது.
கதை, வசனத்துடன் படத்தை இயக்கும் பொறுப்பையும் ஏற்கும்படி ஏ.எஸ்.ஏ.சாமியிடம் ஜுபிடர் சோமு கூறினார். சாமியும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். இந்தப் படத்தின் கதாநாயகனாக பி.யு.சின்னப்பாவையும், கதாநாயகியாக டி.ஆர்.ராஜகுமாரியையும் ஒப்பந்தம் செய்ய ஜுபிடர் நிறுவனம் நினைத்தது.
ஆனால், படத்தின் இயக்குனர் ஏ.எஸ்.ஏ.சாமி, ‘ஸ்ரீமுருகன் படத்தில் சிவனாக நடித்த எம்.ஜி.ராமச்சந்திரனும், பார்வதியாக நடித்த கே.மாலதியும் திறமையானவர்கள். அவர்களையே கதாநாயகன் – கதாநாயகியாக நடிக்க வைத்து ‘ராஜகுமாரி’ யை குறைந்த செலவில் தயாரிக்கலாம் ஞ என்று கூறினார்.
இந்த திட்டம் ஜுபிடர் அதிபர்களுக்கு ஆச்சரியம் அளித்தது. ‘நீங்கள் டைரக்ட் செய்யப்போகும் முதல் படம் இது. பிரபல நட்சத்திரங்களான சின்னப்பாவும், டி.ஆர்.ராஜகுமாரியும் நடித்தால் வெற்றி நிச்சயம். நாங்களே பெரிய நடிகர்- நடிகைகளை போடலாம் என்கிறபோது, நீங்கள் ராமச்சந்திரனையும், மாலதியையும் போடலாம் என்கிறீர்களே!’ என்று கூறினார்கள்.
‘இல்லை. எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ராமச்சந்திரனையும், மாலதியையும் வைத்தே, இதை பெரிய வெற்றிப்படமாக்க நம்மால் முடியும்’என்று உறுதியாக சொன்னார், ஏ.எஸ்.ஏ.சாமி.
‘உங்களுக்கு இவ்வளவு நம்பிக்கை இருக்கும்போது, நாங்கள் மறுப்பு சொல்லவில்லை. உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள்’ என்று கூறிய ஜுபிடர் சோமுவும், மொகிதீனும் ஏ.எஸ்.ஏ.சாமியின் யோசனைக்கு ஒப்புதல் அளித்தனர்.
ஏற்கனவே எம்.கே.தியாகராஜ பாகவதரை வைத்து ‘உதயணன்’ என்ற படத்தை ஜுபிடர் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. இதில் பாகவதரும், வசுந்தராதேவியும் ஜோடியாக நடிக்க இருந்தனர். லட்சுமிகாந்தன் வழக்கில் கைதாகிய பாகவதர் சிறை செல்ல நேர்ந்ததால், அந்தப் படத்தின் தயாரிப்பு கைவிடப்பட்டது.
இந்தப் படத்திற்கு இசை அமைப்பதற்காக, சிதம்பரம் ஜெயராமன் ஜுபிடருக்கு வந்தார். அப்போது ஏ.எஸ்.ஏ. சாமிக்கும், அவருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. ‘என் மைத்துனர் மு.கருணாநிதி, திராவிடர் கழகத்தில் இருக்கிறார். பெரியாரின் ‘குடியரசு’ பத்திரிகையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். எழுத்தாற்றல் மிக்கவர். வசனம் எழுதுவதற்கு அவருக்கு வாய்ப்பு கொடுங்கள்’ என்று சாமியிடம், சிதம்பரம் ஜெயராமன் கேட்டுக் கொண்டார்.
அதை ஞாபகத்தில் வைத்திருந்த ஏ.எஸ்.ஏ.சாமி, வசனம் எழுத வருமாறு கருணாநிதிக்கு தந்தி அனுப்பினார். தந்தியை பெரியாரிடம் காட்டினார், கருணாநிதி. ‘இது நல்ல வாய்ப்பு. போய் வாருங்கள்’ என்று, பெரியார் அனுப்பி வைத்தார்.
ஈரோட்டிலிருந்து கோவைக்கு சென்றார், கருணாநிதி. ஏற்கனவே நாடகங்கள் எழுதி அனுபவப்பட்ட அவர், ஏ.எஸ்.ஏ.சாமி சொன்ன காட்சிகளுக்கெல்லாம் வசனம் எழுதிக் கொடுத்தார். அவருடைய திறமையை புரிந்து கொண்ட ஏ.எஸ்.சாமி, படத்திற்கான முழு வசனத்தையும் எழுதித்தரும்படி சொன்னார். அதனையேற்று, கருணாநிதி முழு வசனத்தையும் எழுதிக் கொடுத்தார்.
இந்தக் காலக்கட்டத்தில், எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. விரைவிலேயே நெருங்கிய நண்பர்களானார்கள். அப்போது, எம்.ஜி.ஆர். காங்கிரஸ் அனுதாபியாகவும், ஆத்திகராகவும் இருந்தார். அவர் கழுத்தில் ருத்திராட்ச மாலை அணிந்திருப்பார்.
காந்தி எழுதிய புத்தகங்களை கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர். பரிசளிப்பார். பெரியார் எழுதிய புத்தகங்களைக் எம்.ஜி.ஆருக்கு கொடுப்பார், கருணாநிதி.
இதற்கிடையில், ‘ராஜகுமாரி’ படம் வேகமாக வளர்ந்தது. எம்.ஜி.ஆர். மீது ஏ.எஸ்.ஏ.சாமி வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். வெகு சிறப்பாக நடித்தார். எம்.ஜி.ஆரும், டி.எஸ். பாலையாவும் போடும் கத்திச்சண்டை படத்தின் சிறப்பு அம்சமாக இருந்தது.
‘ராஜகுமாரி’ படத்தில் வில்லியாக நடித்தவர், இலங்கைக் குயில் தவமணிதேவி. படப்பிடிப்புக்காக மேக்கப் போட்டுக்கொண்டு வந்து நின்ற தவமணி தேவியைப் பார்த்து, டைரக்டர் உள்பட அனைவரும் அசந்து போனார்கள்.
மர்லின் மன்றோவை தோற்கடிக்கும் விதத்தில் கவர்ச்சியின் சிகரமாக அவர் தோன்றினார். ஜாக்கெட் போட்டிருந்தார்; ஆனால் கடைசி பட்டன்களைத் தவிர மற்ற பட்டன்களைப் போடவில்லை! இதை பார்த்து மிரண்டுப் போன இயக்குனர் ஏ.எஸ்.ஏ.சாமி. ‘இவ்வளவு கவர்ச்சி வேண்டாம் தாயே!’ என்று கூறினார்.
‘கதாநாயகனை மயக்கும் விதத்தில் நடனம் ஆடுவதற்காகத்தானே நான் வந்திருக்கிறேன். இப்படி இருந்தால்தான் இயற்கையாக இருக்கும்’ என்றார், தவமணிதேவி.
கடைசியில், டைரக்டரும், தவமணிதேவியும் கலந்து பேசி ஒரு ‘சமரச உடன்பாட்டு ஞக்கு வந்தனர். அதன்படி ஜாக்கெட்டுக்கு மத்தியில் ஒரு காகிதப்பூ சொருகப்பட்டது!
இந்தப் படத்தில், எம்.ஜி.ஆருக்கு எம்.எம்.மாரியப்பா பின்னணி குரல் கொடுத்து பாடினார். எம்.ஜி.ஆருக்காக குரல் கொடுத்த பாடிய முதல் பின்னணி பாடகர் எம்.எம்.மாரியப்பா தான். பின்னாளில் பிரபல வில்லனாக தமிழ் சினிமாவை கலக்கிய எம்.என்.நம்பியார், இந்தப் படத்தில் நகைச்சுவை வேடமேற்று நடித்தார்.
11-04-1947 அன்று ‘ராஜகுமாரி’ படம் ரிலீஸ் ஆனது. படத்தின் “டைட்டில் கார்டில்” எம்.ஜி.ஆரின் பெயர் ‘எம்.ஜி.ராம்சந்தர்’ என்று காட்டப்பட்டது. ‘வசனம் உதவி’ என்று கருணாநிதியின் பெயர் இடம் பெற்றது.
‘ராஜகுமாரி’ ‘சூப்பர் ஹிட்’ படமாக வெற்றி பெறவே, மக்கள் மத்தியில் எம்.ஜி.ஆர், பிரபலமானார்.

. ஜானகியை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார்!
“ராஜகுமாரி” “சூப்பர் ஹிட்” படமாக வெற்றி பெறவே, மக்கள் மத்தியில் எம்.ஜி.ஆர், மிகவும் பிரபலமானார்.
“ராஜகுமாரி” வெளிவந்தபோது, கருணாநிதியின் தந்தை முத்துவேலரின் கண் ஒளி மங்கியிருந்தது. இருப்பினும், திருவாரூரில் இந்தப்படம் ரிலீஸ் ஆன தியேட்டருக்குச் சென்று, வசனங்களைக் கேட்டு மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சி நடந்து சில நாட்களுக்குப்பின் அவர் காலமானார்.
“ராஜகுமாரி”க்குப்பிறகு, “அபிமன்யூ” என்ற படத்தை ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்தப் படத்தில் எஸ்.எம். குமரேசனும், அவருடைய ஜோடியாக யு.ஆர்.ஜீவரத்தினமும் நடித்தனர்.
அபிமன்யூவின் தந்தை அர்ஜுனனாக எம்.ஜி.ஆர். நடித்தார். படத்தின் பிற்பகுதியில்தான் அவர் வருவார். எனினும், நடிப்பு சிறப்பாக இருந்தது. மற்றும் நரசிம்மபாரதி, எம்.ஜி. சக்ரபாணி, நம்பியார், கே.மாலதி, எம்.ஆர்.சந்தான லட்சுமி ஆகியோரும் இதில் நடித்தனர். இந்தப் படத்தை எம்.சோம சுந்தரமும், ஏ.காசிலிங்கமும் இணைந்து டைரக்ட் செய்தனர்.
லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அடைந்து, லண்டனில் உள்ள பிரிவியூ கவுன்சில் (வெள்ளையர் ஆட்சியின்போது உச்சநீதி மன்றம்) வரை சென்று விடுதலையான எம்.கே.தியாகராஜ பாகவதர், “ராஜமுக்தி” என்ற படத்தை தயாரித்தார். இதன் படப்பிடிப்பு புனே நகரில் நடந்தது.
இதில் பாகவதரும், வி.என்.ஜானகியும் ஜோடியாக நடித்தனர். பாகவதருக்கு அடுத்த வேடத்தில், தளபதியாக எம்.ஜி.ஆர். நடித்தார். வில்லி போன்ற வேடத்தில் பி.பானுமதி நடித்தார். அவர் நடித்த முதல் தமிழ்ப்படம் இதுதான்.
இந்தப்படத்தில் நடிக்கும்போது, எம்.ஜி.ஆரும், வி.என். ஜானகியும் முதன் முதலாக நேரில் சந்தித்துக் கொண்டனர். ஜானகியை எம்.ஜி.ஆர். ஏற்கனவே படத்தில் பார்த்திருக்கிறார். எம்.ஜி.ஆரின் முதல் மனைவி பார்கவி என்கிற தங்கமணியின் சாயலில் ஜானகி இருந்தது அவருக்கு வியப்பளித்தது.
நேரில் சந்தித்தபோது அசந்தே போனார். பார்கவியின் அசல் அச்சு போலவே எம்.ஜி.ஆரின் கண்களுக்கு ஜானகி காட்சி அளித்தார். இதன் காரணமாக, இருவரும் நெருங்கிப் பழகினார்கள். ஒருவர் மனதில் ஒருவர் இடம் பெற்றனர்.
இதே சமயத்தில், ஜுபிடரின் “மோகினி” படத்தில் எம்.ஜி. ஆரும், ஜானகியும் ஜோடியாக நடித்தனர்.
1948 அக்டோபர் 9-ந்தேதி “ராஜமுக்தி”யும், அதே மாதம் 31-ந்தேதி “மோகினி”யும் ரிலீஸ் ஆயின. இதில் “ராஜமுக்தி” தோல்வி அடைந்தது. “மோகினி” வெற்றி பெற்றது.
பின்னர், கோவிந்தன் கம்பெனி தயாரித்த “மருதநாட்டு இளவரசி”யில், எம்.ஜி.ஆரும், வி.என்.ஜானகியும் இணைந்து நடித்தனர். இதில் எம்.ஜி.ஆரின் சகோதரர் எம்.ஜி.சக்ரபாணி, பி.எஸ்.வீரப்பா, சி.கே.சரஸ்வதி ஆகியோரும் நடித்தனர்.
கதை-வசனத்தை மு.கருணாநிதி எழுத ஏ.காசிலிங்கம் டைரக்ட் செய்தார்.
இந்தப் படத்தில் வி.என். ஜானகி மருதநாட்டின் இளவரசி. அவர், சாதாரண இளைஞனான எம்.ஜி.ஆரை காதலிப்பார். அவர் இளவரசி என்று எம்.ஜி.ஆருக்குத் தெரியாது. அதனால் அவரும் காதலிப்பார். எம்.ஜி.ஆருக்கு கத்திச்சண்டை கற்றுத்தருவார், ஜானகி!
மருதநாட்டு அரசரை பதவியில் இருந்து இறக்க அவரது இளைய மனைவியின் சகோதரன் (மைத்துனன்) திட்டம் தீட்டுவான். அதை எம்.ஜி.ஆரும், ஜானகியும் சேர்ந்து முறியடிப்பதே இப்படத்தின் மூலக்கதை.
இந்தப் படத்தில், எம்.ஜி.ஆர். ஒரு வேட்டி மட்டும் அணிந்து சாதாரண குடிமகனாக நடிப்பார். படம் முழுவதும் இந்த ஒரே உடைதான்! கருணாநிதியின் வசனம் அருமையாக அமைந்தது. எம்.ஜி.ஆரும், ஜானகியும் சிறப்பாக நடித்திருந்தனர். எம்.ஜி.ஆரின் கத்திச்சண்டைகள் ரசிகர்களைக் கவர்ந்தன. படம் அமோக வெற்றி பெற்றது.
மருதநாட்டு இளவரசி 1950-ல் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து, ஜானகியை தன் வாழ்க்கைத் துணைவியாக ஏற்க எம்.ஜி.ஆர். தீர்மானித்தார். அதற்கு முன்னதாக நோயுற்றிருக்கும் மனைவியின் சம்மதத்தைப் பெற எண்ணினார்.
ஜானகியை தன் வீட்டுக்கு அழைத்துச்சென்று, மனைவி சதானந்தவதியிடம் அறிமுகம் செய்து வைத்தார். சதானந்தவதியை, “அக்கா” என்றே அழைத்தார், ஜானகி. இருவரும் சகோதரிகள் போலவே பழகினார்கள்.
நாளடைவில், எம்.ஜி.ஆர். மனதில் ஜானகி இடம் பெற்றிருப்பதை சதானந்தவதி தெரிந்து கொண்டார். ஒரு நாள் கணவரை அழைத்து, “வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு பாரமாக இருந்து வருகிறேன். என்னால் உங்களுக்கு ஒரு சுகமும் இல்லை. என் தங்கையை (ஜானகி) நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினார்.
இதைக்கேட்டு எம்.ஜி.ஆர். கண்கலங்கினார். “நீ மனப் பூர்வமாகத்தான் சொல்கிறாயா?” என்று கேட்டார்.
“மனப்பூர்வமாகத்தான் கூறுகிறேன். ஜானகியை நீங்கள் மணந்து கொள்ளுங்கள். ஆனால், நானும், ஜானகியும் ஒரே வீட்டில் இருக்க வேண்டாம். அவளுக்குத் தனி வீடு பார்த்து குடிவையுங்கள்” என்றார், சதானந்தவதி.
மனைவியின் பூரண சம்மதத்துடன், ஜானகியை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார், எம்.ஜி.ஆர்.
பாகவதர்- சின்னப்பா காலத்தில் பெரிய பாடல் ஆசிரியராகத் திகழ்ந்த பாபநாசம் சிவனின் அண்ணன் பி.ஆர். ராஜகோபாலய்யரின் மகள்தான் வி.என்.ஜானகி. (வைக்கம் நாராயணி ஜானகி என்பதன் சுருக்கமே வி.என்.ஜானகி)
எம்.ஜி.ஆர். சாதாரண வேடங்களில் நடித்து வந்த காலக்கட்டத்திலேயே வி.என்.ஜானகி கதாநாயகியாக புகழ் பெற்று விளங்கினார். எம்.ஜி.ஆரை விட அதிக சம்பளம் வாங்கி வந்தவர். எனினும், எம்.ஜி.ஆரை மணந்தபின் நடிப்பதை நிறுத்திவிட்டு கணவரின் சாதனைகளுக்கு அவர் பெருந்துணையாக நின்றார்
.தொடரும்..