காளைகளுடன் மல்லுக்கட்டு அலங்காநல்லூரில் அமர்க்களம்
அலங்காநல்லூர்: உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. இதில் 649 காளைகளும், 612 காளையர்களும் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்நிகழ்ச்சியை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஐகோர்ட் மதுரை கிளையின் அனுமதி மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் நடந்தன. நேற்றுமுன்தினம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடந்தது.
இந்நிலையில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசலில் இருந்து பாய்ந்து செல்லும் காளைகள், ரசிகர்கள் மத்தியில் பாயாமல் இருக்கவும், பார்வையாளர்கள் மைதானத்துக்குள் நுழைவதை தடுக்கவும், 8 அடி உயரத்தில் 2 அடுக்கு தடுப்பு கம்பி வேலி அமைக்கப்பட்டது.
மாடுபிடி வீரர்கள் காயமடையாத வகையில் 200 மீட்டர் சுற்றளவுள்ள மைதானத்தில் தென்னை நார்கள் பரப்பி விடப்பட்டிருந்தன. வீரர்கள் பிடியில் இருந்து தப்பி செல்லும் காளைகள், மீண்டும் வாடிவாசல் பக்கம் செல்லாமல் இருக்க அந்த காளைகளை பிடித்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்க போலீசார் கயிறுடன் நிறுத்தப்பட்டனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க தேனி, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், சிவகங்கை, திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் இருந்து 649 காளைகள் பதிவு செய்யப்பட்டன. இதில் பங்கேற்க 21 முதல் 40 வயதுக்கு உட்பட்ட 640 வீரர்கள் பதிவு செய்தனர். இவர்களில் 32 பேரை மருத்துவ குழுவினர் வெளியேற்றினர்.
காலை 6 மணி முதல் கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் ராஜசேகரன் தலைமையில் 80 கால்நடை மருத்துவர்கள் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் தனித்தனியாக மது, போதை, கொம்பு மருந்து உள்ளிட்ட சோதனைகளை செய்தனர்.
பின்னர் காலை 7.40 மணிக்கு மதுரை கலெக்டர் சுப்ரமணியன் கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். முன்னதாக முனியாண்டி சுவாமி மற்றும் முத்தாலம்மன் கோயில்களில் மேளதாளத்துடன் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பரிசு பொருட்களுடன் கிராம கமிட்டியினர் ஊர்வலமாக வாடி வாசலுக்கு வந்தனர்.
முதல் காளையாக முனியாண்டி சுவாமி கோயில் காளையும், அதைத் தொடர்ந்து வலசை உள்ளிட்ட கிராமத்து கோயில் காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. இவற்றை யாரும் பிடிக்கவில்லை. இதை தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்க்கப்பட்டன. மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்த காளைகளை வீரர்கள் பாய்ந்து சென்று அடக்க முயன்றனர். தஞ்சாவூர், புதுக்கோட்டை, உசிலம்பட்டியை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட காளைகள் யாரிடம் பிடிபடாமல் ஆடுகளத்தை அமர்க்களப்படுத்தின. மாடுகள் முட்டியதில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
காலரிகளில் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். ஸ்பெயின், நார்வே, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தைவான் ஆகிய நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தனி காலரியில் அமர்ந்து ஜல்லிக்கட்டை கண்டு அதிசயித்தனர்.
மேன் ஆப் தி கேட்சர்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து 30 மீட்டர் தொலைவில் எல்லைக்கோடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதற்குள் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. நடப்பாண்டில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டியில் மேன் ஆப் தி கேட்சர் என்ற பரிசு அறிவிக்கப்பட்டது.
அதிக காளை களை பிடிக்கும் 2 வீரர்களுக்கு ஹோண்டா நிறுவனம் 2 டூவீலர்களை பரிசாக அறிவித்தது. அதனால் மாடுகளை பிடிக்க வீரர்கள் அதிக உற்சாகத்துடன் பிடித்தனர்.
விதி மீறல்கள் படம் பிடிப்பு
‘காளைகள் வாடிவாசலுக்கு உள்ளேயும், வெளியேறியபின் குறிப்பிட்ட தூரத்தை கடந்த நிலையிலும் வாலை பிடித்து இழுப்பது, அடிப்பது என பல துன்புறத்தல்கள் நடந்தன. இதுபோன்ற விதிமீறல்களை வீடியோவில் பதிவு செய்துள்ளோம் என்று மதுரை மாவட்ட பீப்பிள் பார் அனிமல் அமைப்பின் நிர்வாகி சிவக்குமார் கூறினார்.
‘ஜல்லிக்கட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர்கள் விமல், புரோட்டோ சூரி பங்கேற்றனர். அவர்கள் திருச்சி மாட்டை அடக்குபவருக்கு ரூ.5 ஆயிரம் பரிசு அறிவித்தனர். உடனே வாடிவாசலில் இருந்து பாய்ந்த அந்த காளையை சோளங்குருணியை சேர்ந்த முத்துராமன் அடக்கினார். உடனே, அவருக்கு ரூ.5 ஆயிரத்தை பரிசாக வழங்கினர். மேலும் ஜல்லிக்கட்டில் இலங்கை வடக்கு மாகாண அமைச்சர் செந்தில் தொண்டைமானுக்கு சொந்தமான காளையும் பங்கேற்றது.