சூயி-வென்-தை (541 - 604)வரலாறு படைத்தோரின் குறிப்புகள் இளைஞர்களுக்காக
பல நூற்றாண்டுகளாகப் பிளவுபட்டுச் சிதறுண்டு கிடந்த சீனாவை ஒருங்கிணைத்து ஒன்றுபடுத்திய சீனப் பேரரசர் சூயி-வென்-தை ஆவார். இவருடைய இயற்பெயர் யாங்-ஷியன் என்பதாகும். அவர் ஏற்படுத்திய அரசியல் ஒற்றுமை இடைப்பட்ட பெரும்பாலான நூற்றாண்டுகள் நெடுகிலும் நிலைத்திருந்தது. இதன் விளைவாக, சீனா உலகில் மிக வலிமை வாய்ந்த நாடுகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. இந்த அரசியல் ஒற்றுமையினால் மற்றொரு முக்கியமான பயனும் விளைந்தது. அதாவது, அடிக்கடி மூண்ட போர்களின் கொடுமையால் ஏற்பட்ட உயிர்ப்பலிகள் காரணமாக, ஐரோப்பாவிலும், மத்திய கிழக்கிலும், உலகின் பெரும்பாலான மற்ற நாடுகளிலும் மக்கள் தொகை வெகுவாகக் குறைந்தது. ஆனால், உலகின் மொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ ஐந்தில் ஒரு பகுதி மக்களைக் கொண்டுள்ள சீனாவில், போர்களில் ஏராளமானோர் மடிந்தாலும், அதன் மக்கள் தொகை அதிகமாகப் பாதிக்கப்படவில்லை.
இவருக்கு முன் ஆட்சி புரிந்த ஷி-ஹூவாங்-தை என்ற பேரரசர் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் சீனாவை ஒருங்கிணைத்து வைத்தார். அவருடைய சின் அரசு மரபு, அவரது இறப்புக்குப் பின்பு விரைவிலேயே வீழ்ச்சியுற்றது. எனினும், அந்த அரச மரபுக்கு அடுத்த படியாகத் தக்க சமயத்தில் ஆட்சி பீடம் ஏறிய ஹான் அரச மரபு ஒருங்கிணைந்த சீனா சிதறிவிடாமல் பாதுகாத்து, கி.மு.206 முதல் கி.பி.220 வரையில் சீனா முழுவதையும் ஆண்டது. ஆனால், ஹான் அரச மரபின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஐரோப்பாவில் ரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, நிலவிய ஓர் இருண்ட காலத்தைப் போன்ற நீண்ட உள்நாட்டுக் குழப்ப காலம் சீனாவை அலைக்கழித்தது.
வடக்குச் சீனாவில் பெருஞ்செல்வாக்கு வாய்ந்த ஓர் உயர்குடியில் 541 ஆம் ஆண்டில் யாங்-ஷியன் பிறந்தார். இவரது 14 ஆம் வயதிலேயே இவருக்கு முதலாவது இராணுவப் பதவி கிடைத்தது. யாங்-ஷியன் மிகவும் திறமைசாலியாக விளங்கியதால், வடக்குச் சீனாவை ஆண்ட சூ அரச மரபைச் சார்ந்த பேரரசின் ஆட்சியில், மிக விரைவாக முன்னேறி வந்தார். வடக்குச் சீனா முழுவதையும் பேரரசர் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு இவர் பேருதவி புரிந்தார். இதற்கு இவருக்குக் கைம்மாறு கிடைக்காமற் போகவில்லை. 572 ஆம் ஆண்டில் யாங்-ஷியனின் மகளைப் பட்டத்து இளவரசன் மணந்து கொண்டான். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு பேரரசர் மண்டார். பட்டத்து இளவரசன் மூளைக் கோளாறுடையவனாகத் தோன்றியது. அதனால், அரச பதவிக்குப் போராட்டம் மூண்டது. அந்தப் போராட்டத்தின் இறுதியில் யாங்-ஷியன் வெற்றி பெற்றார். 581 ஆம் ஆண்டில், இவரது 50 ஆம் வயதில், இவர் புதிய பேரரசராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். எனினும், இவர் வட சீனாவுக்கு மட்டும் பேரரசராக இருப்பதோடு மனநிறைவு கொள்ளவில்லை. மிகக் கவனமாக ஆயத்தங்கள் செய்து கொண்டு, இவர் 583 ஆம் ஆண்டில் தென் சீனா மீது படையெடுத்தார். இப்படையெடுப்பு வெகு துரிதமாக வெற்றி தேடித் தந்தது. 589 ஆம் ஆண்டில் இவர் சீனா முழுவதற்கும் பேரரசரானார்.
சூயி-வென்-தை தம் ஆட்சியின் போது, ஒருங்கிணைக்கப்பட்ட பேரரசுக்கு ஒரு பெரிய புதிய தலைநகரை அமைத்தார். சீனாவின் மிகப் பெரிய இரு ஆறுகளை இணைக்கும் பெருங்கால்வாயை அமைக்கும் பணியையும் இவர் தொடங்கினார். இந்தக் கால்வாய், மத்திய சீனாவில் ஓடும் யாங்சே ஆற்றையும், வடக்குச் சீனாவில் பாய்ந்த ஹூவாங்-ஹோ (மஞ்சள் ஆறு) ஆற்றையும் இணைத்தது. இந்தக் கால்வாயை அமைக்கும் பணி இவருடைய புதல்வன் காலத்தில் முடிவுற்றது. வட சீனாவையும், தென் சீனாவையும் ஒற்றுமைப்படுத்துவதற்கு இந்தக் கால்வாய் பெருந்துணை புரிந்தது.
இவருடைய மிக முக்கியமான சீர்திருத்தங்களில் ஒன்று, அரசப் பணியாளர் தேர்வுகள் மூலமாக அரசு அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும் முறையைக் கொண்டு வந்ததாகும். பல நூற்றாண்டுகள் வரை நாடு முழுவதிலிருந்தும் - அனைத்துச் சமூகத்தினரிடமிருந்தும், மிகத் தேர்ந்த அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து, மிக்க திறமை வாய்ந்த நிர்வாகிகள் வர்க்கத்தை எப்போதும் அரசுக்கு அளிப்பதற்கு இந்த முறை மிகவும் உதவியாக இருந்தது. இந்த முறை முதலில் ஹான் அரசர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு நெடுங்காலம் வரை இம்முறை வழக்கற்றுப்போய், பெரும்பாலான அரசப் பதவிகள் பரம்பரைப் பதவிகளாகவே இருந்து வந்தன:
"தவிர்ப்பு விதி" என்னும் கொள்கையை சூயி-வென்-தை நடைமுறைக்குக் கொண்டு வந்தார். இதன்படி, மாநில ஆளுநர்கள்; தாங்கள் பிறந்த மாநிலங்களில் ஆளுநர்களாகப் பதவி வகிக்க முடியாது. மாநில ஆளுநர்கள், உறவினர்களுக்குச் சலுகை காட்டுவதைத் தடுப்பதற்காகவும், எந்த ஒரு ஆளுநரும் தம் சொந்த மாநிலத்தில் வலுவான ஆதிக்கத் தளத்தை அமைத்துக் கொள்ளாமல் தவிர்ப்பதற்காகவும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விதி கொண்டு வரப்பட்டது. தேவையானபோது, துணிவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வல்லவராக சூயி-வென்-தை விளங்கிய போதிலும், அவர் பொதுவாக மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டார். அவர் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்தார்; குடிமக்கள் மீது வரிச் சுமையைக் குறைத்தார். அவருடைய அயல் நாட்டுக் கொள்கை மொத்தத்தில் வெற்றிகரமாக இயங்கி வந்தது.
சூயி-வென்-தைக்கு இணையாக மாபெரும் வெற்றி பெற்ற அரசர்களில அல்லது வெற்றி வீரர்களில் பெரும்பாலோரைப் போலன்றி அவர் மிகவும் தன்னம்பிக்கையற்றவராக இருந்ததாக தெரிகிறது. கோடிக்கணக்கான மக்கள் ஆளும் வல்லமை வாய்ந்த போதிலும், அவர் அளவுக்கு மீறிய மனைவியின் மேலாட்சிக்கு உட்பட்டவராக இருந்தது விசித்திரமாக உள்ளது. அவருடைய மனைவி ஆதிக்க மனப்பான்மை கொண்டவராக இருந்தாலும், மிகத் திறமைசாலியாக விளங்கினார். சூயி-வென்-தை ஆட்சியைப் பிடிப்பதற்கும், அவருடைய ஆட்சியின்போதும் தம் கணவருக்கு அவர் மனைவிபேருதவி புரிந்தார். சூயி-வென்-தை தமது 63 ஆம் வயதில் காலமானார். அவருக்குப் பிறகு அவருடைய இரண்டாவது மகன் அரியணை ஏறினான். அரசியாரின் செல்லப் பிள்ளையான இவன், தான் ஆட்சிக்கு வருவதற்காகச் சதி செய்து தந்தையைக் கொன்றுவிட்டதாகப் பரவலாக ஐயுறப்படுகிறது.
புதிய பேரரசர் தமது அயல் நாட்டுக் கொள்கையில் பெருந் தோல்விகளைக் கண்டார். இறுதியில், சீனாவில் அவருடைய ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி தோன்றியது. இக் கிளர்ச்சியில் 618 ஆம் ஆண்டில் அவர் கொலையுண்டார். அவரது மரணத்துடன் சூயி அரச மரபின் ஆட்சியும் முடிவுற்றது. ஆனால், சீனாவின் ஒற்றுமை அத்துடன் முடிவடைந்து விடவில்லை. சூயி அரச வீழ்ச்சியடைந்தவுடனேயே, தாங் அரசர்கள் நிறுவியிருந்த அரசுக் கட்டமைப்பையே பொதுவாகப் பேணி வைத்துக் கொண்டார்கள். அவர்கள் ஆட்சியிலும், சீனா தொடர்ந்து ஒற்றுமையுடன் விளங்கியது. தாங் அரசர்களின் ஆட்சி, சீனாவின் மாட்சிமை மிகுந்த காலம் என்று கருதப்படுகிறது. காரணம், அவர்கள் மிகவும் இராணுவ வலிமை வாய்ந்தவர்களாக இருந்தார்கள். அதை விட முக்கியமாக, அவர்கள் ஆட்சியின் போது கலையும் இலக்கியமும் வெகுவாக வளர்ச்சி பெற்றன.
சூயி-வென்-தை எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தவர்? இது பற்றி ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்வதற்கு, அவரைப் பெற்ற ஐரோப்பிய (பிரெஞ்சு) அரசர் சார்லிமேனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது உதவியாக இருக்கும். இவ்விருவருடைய வாழ்விலும் தனிச் சிறப்பான பொருத்தம் காணப்படுகிறது. ரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக்கு ஏறத்தாழ மூன்று நூற்றாணடுகளுக்குப் பிறகு, மேற்கு ஐரோப்பாவின் பெரும் பகுதியை ஒருங்கிணைப்பதில் சார்லிமேன் வெற்றி கண்டார். அதே போன்று, ஹான் அரசு வீழ்ச்சியடைந்த 350 ஆண்டுகளுக்குப் பின்னர், சீனாவை மீண்டும் ஒருங்கிணைப்பதில் சூயி-வென்-தை வெற்றி பெற்றார். மேலை நாடுகளில் சார்லிமேன் அதிகப் புகழ் பெற்றவர் சூயி-வென்-தை தான் எனக்கூற வேண்டும். ஏனெனில், முதலில் சீனா முழுவதையும் ஒருங்கிணைப்பதில் யி-வென்-தை வெற்றி கண்டார். ஆனால், மேற்கு ஐரோப்பாவின் பல முக்கிய பகுதிகளை (இங்கிலாந்து, ஸ்பெயின், தென் இத்தாலி போன்றவை) சாரலிமேன் ஒரு போதும் வெற்றி கொள்ளவில்லை. இரண்டாவதாக, சூயி-வென்-தை ஏற்படுத்திய ஒற்றுமை நெடுங்காலம் நிலை பெற்றிருந்தது. ஆனால், சார்லிமேனின் பேரரசு விரைவிலேயே சிதறுண்டது. மீண்டும் ஒற்றுமை ஏற்படவில்லை.
மூன்றாவதாக, சூயி அரசு அரசியல் ஒற்றுமையை வலுவாக நிலைநாட்டியதன் காரணமாக, அடுத்து ஆட்சிக்கு வந்த தாங் அரசர்கள், சீனாவின் பொருளாதார வளங்களை மேம்படுத்துவதிலும், கலை - இலக்கிய - பண்பாட்டுச் செல்வங்களைப் பெருக்குவதிலும் அருஞ்சாதனைகளைப் புரிய முடிந்தது. இதற்கு மாறாக, சார்லிமேன் பேரரசரை முதல்வராகக் கொண்ட இரண்டாவது பிரெஞ்சு அரச மரபினர் காலத்தில் தொடங்கிய மறுமலர்ச்சி அற்ப ஆயுளில் முடிந்தது; சார்லிமேனின் மரணத்துடன் அதுவும் முடிவுற்றது; அவருடைய பேரரசும் உருக்குலைந்து போயிற்று. இறுதியாக சூயி அரசர்கள் ஏற்படுத்திச் சென்ற அரசுப் பணியாளர் தேர்வு முறை மிகப் பெரிய நீண்ட காலப் பயன் விளைவுகளைக் கொண்டிருந்தது. இந்தக் காரணங்களினால் உலக வரலாற்றில் சீனாவைவிட ஐரோப்பா மொத்தத்தில பெரும் பங்கு பெற்றது என்பதை கவனத்தில் கொண்டாலுங்கூட சார்லிமேனைவிட வரலாற்றில் அதிக விளைவை ஏற்படுத்தியவர் சூயி-வென்-தை தான் என்றே கூற வேண்டும். உண்மையைக் கூறின், சீனாவிலாயினும், ஐரோப்பாவிலாயினும், சூயி-வென்-தையைப் போன்று வரலாற்றில் மிக நெடிய காலத்திற்குச் செல்வாக்குப் பெற்றிருந்த அரசர்கள் மிகச் சிலரே.