உலகின் முதல் மரிஜுவானா தேசிய சந்தைக்கு ஒப்புதல் அளித்துள்ள உருகுவே அரசு
10 Dec,2013

உலகின் முதல் மரிஜுவானா தேசிய சந்தைக்கு ஒப்புதல் அளித்துள்ள உருகுவே அரசு
உலகில் முதல் மரிஜுவானா தேசிய சந்தை அமைப்பது குறித்த வாக்கெடுப்பு நேற்று உருகுவே நாட்டின் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. செனட் சபையில் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில் 13 ஓட்டுகள் எதிராகவும், 16 ஓட்டுகள் ஒன்றுபட்ட ஆளும் பிராட் முன்னணிக்கு ஆதரவாகவும் விழுந்தன.
உலகமெங்கும் சட்டவிரோதமானதாகக் கருதப்படும் போதைமருந்துப் பொருளை சட்டரீதியாக விற்பனை செய்ய முடிவெடுப்பதன்மூலம் உருகுவே அரசு ஒரு ஆபத்தான திட்டத்தைக் கையில் எடுத்துள்ளதாகக் கருதப்படுகின்றது.அடுத்த ஆண்டு இதன் விற்பனை சந்தையைத் துவக்கும் எண்ணத்துடன் உள்ள அதிபர் ஜோஸ் முஜிகாவின் ஒப்புதலுக்காக இந்த மசோதா காத்திருக்கின்றது.
உருகுவே மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் அரசாங்கமே நடத்த உள்ள இந்த போதைமருந்துப் பொருள் விற்பனைத் திட்டத்தை எதிர்க்கின்றனர். ஆனால்,போதை மருந்துக்கு எதிரான உலகளாவிய யுத்தம் தோல்வியையே தழுவியுள்ளது என்று முஜிகா கூறுகின்றார்.
அதுமட்டுமின்றி காவல்துறையினராலும், இராணுவத்தினராலும் கட்டுப்படுத்த முடியாத போதைமருந்து கடத்தல் குற்றங்களை அதிகாரத்துவ வர்க்கம் ஒழுங்குமுறைப்படுத்தும் என்றும் அவர் கருதுகின்றார்.