நெஸ்ற்வில் நகரில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
டென்மார்க் நெஸ்ற்வில் நகரத்தில் வன்முறை றொக் குழுவினருக்கும், அதிலிருந்து விலகிய புதிய குழுவினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் ஒருவர் மரணித்துள்ளார்.
வீட்டில் இருந்தபோது துப்பாக்கிப் பிரயோகமும், வேறோரிடத்தில் இன்னொரு துப்பாக்கிப் பிரயோகமுமாக இரண்டு இடங்களில் மோதல் நடந்துள்ளது.
அதைத் தொடர்ந்து வீடொன்றில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 22 வயது இளைஞர் இறந்து கிடந்தாகவும், விசாரணைகள் தொடர்வதாகவும் போலீஸ் கூறுகிறது.
மறுபுறம் ஊதின்ச நகரத்தில் பக்ரா, நெற்றோ மலிவு விலைக் கடைகள் இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன.
வினகேத பக்ரா கடைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் தாள் நாணயங்களை மட்டும் தரும்படி மிரட்டியுள்ளார், அந்தளவுக்கு வியாபாரம் நடக்காத காரணத்தால் 8 முதல் 10 சிகரட் பாக்கட்டுக்களையாவது தரும்படி மிரட்டியுள்ளார்.
சுமார் ஒன்றரை மணி நேரத்தில் ஸ்கிப் கூஸ் வழியில் உள்ள நெற்றோ கடைக்குள்ளும் நுழைந்து பணத்தை கேட்டு பணம் இல்லாததால் சிகரட் பக்கட்டுக்களை கேட்டுள்ளார்.
மறுபுறம் கற்றமின நகரத்தில் உள்ள பக்ரா கடைக்குள் 16 – 17 வயதுடைய இரண்டு இளைஞர்கள் நுழைந்து கத்தி முனையில் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
ஒருவர் கடையில் இருந்த கமேராவை மறைக்க மற்றவர் பணத்தைப் பிடுங்கியுள்ளார், இருவரும் அடையாளம் காணமுடியாதபடி தலை தெறிக்க ஓட்டமெடுத்துள்ளனர்.
இன்னொரு சம்பவத்தில் மாலை 17.00 மணிக்கு திருடன் ஒருவன் வீட்டை உடைத்துத் திருட முயல்வதை உணர்ந்து உறக்கத்தில் கிடந்த வீட்டுக்காரர் உள்ளே நுழைந்த திருடனுக்கு இரும்புக்கேடரால் அடித்தார், 22 வயது திருடன் பிடிபட்டார்.. அவர் உண்மையிலேயே திருடனா என்பது கேள்விக்குறியே..
அதேவேளை தலைநகரில் பாலஸ்தீன பின்னணி கொண்ட கவிஞர் யகா ஹசனுக்கு அடி போட்ட 23 வயது நபருக்கு ஐந்து மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கவிஞர் யகா ஹசன் இஸ்லாமிய பெற்றோருக்கு பிறந்து இஸ்லாத்தின் மீதான விமர்சனங்களை தனது கவிதைத் தொகுதியில் வைத்த காரணத்தில் சர்ச்சையை சந்தித்துள்ளார்.
நீதியமைச்சர் மோற்றன் புத்ஸ்கோவ் பதவி விலகினார்
டென்மார்க் சோசல் டெமக்கிரட்டி கட்சியைச் சேர்ந்தவரும், நீதியமைச்சருமான மோற்றன் புத்ஸ்கோவ் பதவி விலகினார்.
பியா கியாஸ்கோவ் அம்மையாரின் தனிப்பட்ட நிகழ்ச்சித் திட்டம் டேனிஸ் உளவுப் பிரிவால் கண்காணிக்கப்பட்ட விவகாரத்தில் பாராளுமன்றத்திற்கு சரியான தகவலை இவர் வழங்கவில்லை.
இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட உளவுப்பிரிவு தலைவர் ஜாக்கப் செராப் ஏற்கெனவே பதவி விலகிவிட்டார், இந்த விவகாரத்திற்கு பொறுப்பான நீதியமைச்சர் இது தொடர்பான விபரங்களை பாராளுமன்றத்திற்கு மறைத்தார் என்ற குற்றச்சாட்டில் அமைச்சரின் தன்னிலை விளக்கத்தை பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் பதவியை விட்டு விலகினார்.
பாராளுமன்றத்தின் நீதி ஆணையத்திற்கு தவறான தகவலை வழங்கினார் என்று இவர் மீது குற்றம் சுமத்தப்பட பதவி விலகுவதைவிட அவருக்கு வேறு வழி இருக்கவில்லை.
அமைச்சர் பொய் கூறியது நிரூபிக்கப்பட்டுவிட்டதால் அவர் பதவி விலகுவதே சரியானது என்று என்கில்ஸ் லிஸ்ற் கட்சி கூறியுள்ளது.
பொய் கூறும் ஒருவர் இந்த நாட்டின் பாராளுமன்றத்தில் நீதியமைச்சராக தொடர முடியாது என்று டேனிஸ் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
சுமார் மூன்று மணி நேரம் முப்பதிற்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து, ஈற்றில் பதவியைத் துறந்தார்.
சந்தர்ப்ப சூழ்நிலைகள் பொய் உரைப்பதைவிட வேறு வழியை எனக்குக் காட்டவில்லை என்று அமைச்சர் கவலை தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இவர் பதவியில் இருந்து விலகியது பெரிய விடயமல்ல இந்த அரசில் மாதம் ஒரு மந்திரி பொய் கூறியும், தகவலை பிழையாக தெரிவித்தும் பதவி விலகுவது ஏன்..? இப்படி மக்கள் கேட்குமளவுக்கு மந்திரிகளின் பதவி விலகல்கள் நடக்கின்றன.
யாரைக்காப்பாற்றுவதற்காக இத்தகைய வெளியேற்றங்கள் நடக்கின்றன..?
3 ஜி ஐ விவகாரத்தில் சில தினங்களின் முன்னர் அபிவிருத்தி அமைச்சர் கிறிஸ்டியான் பிறிஸ் பாக் பதவியை விட்டு வெளியேறிய பின்னர் இன்று அடுத்த தலை விழுந்துள்ளது.
மாறாக இதெல்லாம் நடந்தாலும் கடுகளவும் கவலை இல்லாமல் மண்டேலாவின் செத்த வீட்டில் போய் சிரித்தபடி படமெடுக்கும் பிரதமருக்கு ஏற்ற மந்திரிகளா இவர்கள் என்ற கேள்வியையும் இந்த நிகழ்வு எழுப்பாமல் இல்லை.
டேனிஸ் பிரதமர் செய்த வேலை.. உலகம் சிரிப்பாய் சிரிக்கிறது
டேனிஸ் பிரதமர் கெல தொனிங் சிமித் நெல்சன் மண்டேலாவின் அஞ்சலி நிகழ்வுக்கு சென்று நடந்துகொண்ட நடத்தை டேனிஸ் ஊடகங்களிலும், எலக்ரோனிக் ஊடகங்களிலும் சிரிப்பாய் சிரிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.
கெல தொனிங் சிமித்தின் அருகாமையில் பராக் ஒபாமாவும், பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரோனும் இருந்துள்ளனர்.
இவர்கள் இருவருடனும் இருப்பதை பெருமையாகக் கருதி, தனது கைத்தொலைபேசியில் படமெடுக்க முயன்ற கெல தொனிங் சிமித்தின் செயலை வேறு சிலர் படமெடுத்து உலாவ விட்டுள்ளனர்.
கெல தொனிங் சிமித் உலகத்தின் பெரிய தலைவர் ஒருவர் மரணித்துள்ள நிகழ்வுக்கு சென்றுள்ளார், அதுவும் அவர் தனி மனிதராக செல்லவில்லை ஒரு நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி சென்றுள்ளார்.
இப்படியான ஒரு தருணத்தில் தோளில் ஒருவர் சாய்ந்திருக்க, மண்டேலாவின் மைந்தன் ஒபாமா சிரித்து போஸ் கொடுக்க, கெல தொனிங் சிமித் சிரித்தபடி போஸ் கொடுத்து புகைப்படம் எடுக்க, ஒபாமாவின் மனைவி மிசேல் ஒபாமா இந்தச் சீத்துவக்கேட்டை பார்க்க விரும்பாமல் முகம் சுழிக்க .. இப்படியொரு அவலமான காட்சி இந்தப் படம் மூலம் அம்பலத்தில் உலாவுகிறது.
கெல தொனிங் சிமித் தென்னாபிரிக்காவில் நின்று கைத்தொலைபேசியில் படமெடுக்க, இங்கு அவருடைய கட்சியின் மந்திரி மோற்றன் புத்ஸ்கோவ் பாராளுமன்றத்திற்கு தகவல் கொடுக்காத குற்றத்தில் பதவியில் இருந்து வெளியேறும் நிகழ்வும் நடக்கிறது.
தன்னுடைய கட்சிக்கு ஏற்பட்ட நெருக்கடிகூட இவருடைய முகத்தில் கடுகளவும் இல்லை.
உள்நாட்டு நெருக்கடி, சர்வதேச நெருக்கடி இவை எதையும் உணர முடியாத நிலையில் ஒரு நாட்டின் பிரதமர் செத்த வீட்டில் இருந்துகொண்டு இப்படி நாணம் தரும்படி நடக்கலமா என்பது அவருடைய எதிரணியின் கேள்வியாகும்.
நெல்சன் மண்டேலா இறந்ததை தென்னாபிரிக்க மக்களில் பலர் மகிழ்வுடன் கொண்டாடி நடனமாடுவது ஏன் என்று டேனிஸ் தொலைக்காட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தன.
கெல தொனிங் சிமித் இப்படிச் செய்வது சரியா என்று ஓர் ஆபிரிக்கர் இவர்களைப் பார்த்துக் கேட்டால் என்ன சொல்ல முடியும்..
கெல தொனிங் சிமித்தின் சிரிப்பைப் பார்த்தால்..
சிலர் சிரிப்பார்.. சிலர் அழுவார்.. நான்
சிரித்துக் கொண்டே அழுகின்றேன்..
பாவமன்னிப்புப் படத்தில் வரும் பாடலை இவர்களைப் போன்றவர்களுக்காகத்தான் கவிஞர் எழுதினாரோ..?
மண்டேலா உயிரோடு இருந்து போராடி வென்றார் ஆனால் உயிரைக் கொடுத்தும் சுயநல தலைவர்களை வெல்ல முடியவில்லையோ..?
புகைப்படம் அதைத்தான் கேட்கிறது.
தலைகுனிவு தரும் இந்தப்படம் பல நாட்டு ஊடகங்களில் வெளியாகிவிட்டது.
TKS.DURAI