
டியனன்மென் சதுக்கம் மீது கார்குண்டு தாக்குதலில் 5 பேர் பலி: மாகாண ராணுவ ஜெனரல் பணி மாற்றம்
சீனாவில் 1989-ம் ஆண்டு ஏற்பட்ட ஜனநாயக புரட்சியை ராணுவம் அடக்கி ஒடுக்கியது. இந்த புரட்சியின் போது லட்சக்கணக்கான மக்கள் சீன தலைநகர் பீஜிங்கில் போராட்டம் நடத்திய இடம் டியனன்மென் சதுக்கம் என்று அழைக்கப்படுகிறது.
சீனாவில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்து மறைந்த மாவோ ஜெடாங்கின் சமாதியும் அவரது பிரமாண்ட சித்திரமும் வரையப்பட்டுள்ள இந்த இடத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா வாசிகள் வந்து செல்கின்றனர்.
எப்போதும் போலீஸ் பாதுகாப்பு அதிகமாக உள்ள டியனன்மென் சதுக்கம் அருகே படுவேகமாக வந்த ஒரு மர்ம கார் மக்கள் கூட்டத்தில் பாய்ந்தது. பலரை இடித்து தள்ளிய அந்த கார் தடுப்பு சுவற்றில் மோதி திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் காரில் வந்த 3 பேரும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் சுற்றுலா வாசி ஒருவரும், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை சேர்ந்த ஒருவரும் என மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
படுகாயமடைந்த 38 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் எதிர்பாராத விபத்தா? அல்லது, தீவிரவாதிகளின் சதி வேலையா? என போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்த விசாரணையில் டியானன்மென் சதுக்கத்தில் நிகழ்ந்தது எதிர்பாராத விபத்து அல்ல.. தீவிரவாத தாக்குதல்தான் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக 8 பேரை பீஜிங் நகர போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர்களில் 2 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டது.
டியனன்மென் சதுக்கத்தில் நடந்தது தற்கொலை படையினரின் கார் குண்டு தாக்குதல் என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் பீஜிங் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள ஓட்டல்களில் கடந்த 1-ம் தேதியில் இருந்து தங்கியுள்ள வெளிநாட்டினரின் விபரங்களை போலீசார் சேகரித்தனர்.
தீப்பிடித்து எரிந்து நாசமாகிய காரின் நம்பர் பிளேட் சிங்ஜியாங் மாகாணத்தின் பதிவு எண்ணை கொண்டுள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் ஆதரவை பெற்ற கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தினர் சீன படையினரை எதிர்த்து போரிட்டு வருகின்றனர்.
அதிகமாக உய்ருர் முஸ்லிம்கள் வாழும் இப்பகுதியில் சீன ஹான் இனத்தவரின் குடியேற்றம் பெருகி வருவதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
எனவே, தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் சிங்ஜியாங் மாகாணத்தை சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாதிகளாகதான் இருக்க வேண்டும் என்று கருதும் போலீசார் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் எல்லையோரம் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், இந்த தாக்குதலில் தொடர்புடைய 5 குற்றவாளிகளை பீஜிங் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
இவ்விசாரணையில், முதலில் சிங்ஜியாங் தலைநகர் உரும்கி நகரில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட தீவிரவாதிகள் சுமார் 8 பேர் பின்னர் டியன்மென் சதுக்கத்தின் மீது தாக்குதல் நடத்தினால் அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்த முடியும் என்று முடிவு செய்தனர்.
இதனால் நவீன ரக ‘பென்ஸ்’ காரில் சீன தலைநகர் பீஜிங் வந்த அவர்கள் டியனன்மென் சதுக்கத்தை 3 முறைக்கு மேல் சுற்றி வந்து மனதுக்குள் ஒத்திகை பார்த்தனர்.
தீவிரவாதிகளில் 5 பேர் செஜியாங் மாகாணத்திற்கு சென்று விட காரில் சென்ற 3 தீவிரவாதிகளும் டியனன்மென் சதுக்கத்தின் மீது மோதி வெடிக்க செய்தனர் என்பது தெரிய வந்தது.
தீவிரவாதி உஸ்மன் ஹஸன் என்பவன் காரை ஓட்ட காரினுள் அவனது தாயார் மற்றும் மனைவியும் இருந்ததாக பிடிபட்டவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
இந்நிலையில், சீனாவின் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் சிங்ஜியாங் மாகாண நிலைக்குழு தலைவர் பதவியில் இருந்து பெங்யாங்கை விடுவித்துள்ளதாக கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழ் அறிவித்துள்ளது.
அந்நாட்டின் சட்டங்களின்படி, பெங்யாங் வகித்து வந்த சிங்ஜியாங் மாகாண ராணுவ ஜெனரல் பதவியில் இருந்தும் அவர் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.