கேர்னிங்கில் சங்கீத வாய்ப்பாட்டு அரங்கேற்றம்
எதிர்வரும் 02.11.2013 சனிக்கிழமையன்று டென்மார்க் சாகித்திய சுருதிலயா இசைக்கல்லூரியில் சங்கீதத்தை முறைப்படி கற்றவரும், திரு. திருமதி தங்கராஜ் தம்பதியரின் புதல்வியும், திருமதி குமுதினி பிரித்திவிராஜ் அவர்களின் மாணவியுமான செல்வி. சாய் சிந்துவின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம் கேர்னிங் கிம்நாசியம் மண்டபத்தில் பி.ப. 16.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
சங்கீத ஆசிரியை திருமதி குமுதினி பிரித்திவிராஜ் அவர்களிடம் கடந்த 15 வருடங்களாக முறைப்படி சங்கீதத்தைப் படித்து இந்த அரங்கேற்ற நிகழ்வில் பங்கேற்கிறார் சாய் சிந்து.
இந்த நிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினரான இந்தியாவின் பிரபல வயலின் வித்துவான் ஸ்ரீ மாத்தூர் சிறீநிதி வருகைதந்துள்ளார்.
மிருதங்கம் ஸ்ரீ ஜெயச்சந்திரராவ், வயலின் ஸ்ரீ ராதா கிருஷ்ணன், கடம், மோர்சிங்கு ஸ்ரீ கிரிதர் உடுப்பா, தம்புரா செல்விகள் யதுக்கா தங்கராஜ், மிதிலா தங்கராஜ் ஆகிய இருவரும் பங்கேற்கிறார்கள்.
செல்வி பிரியங்கா டேனிஸ் மொழியிலும், ஆசிரியர் கே.எஸ்.துரை தமிழிலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளனர்.
மொத்தம் பதினொரு உருப்படிகள் இடம்பெறுகின்றன, பச்சிமிரியம் ஆதிராமையர், மயூரம் விஸ்வநாத ஐயர், தியாகராஜ சுவாமிகள், முத்துஸ்வாமி தீக்சிகர், பாபநாசம் சிவம், சுப்பிரமணிய பாரதியார் போன்ற கலை மேதைகளின் பாடல்கள் இடம் பெறுகின்றன.
சுகமான ராகங்கள், சுகமான இசைப் பொழுதாகவும் அன்றைய மாலை மக்களுக்கு வரம்போல அமையவுள்ளது.
இத்தகைய அரிய நிகழ்ச்சிகளுக்கு பிள்ளைகளை அழைத்துவந்து, இப்படியெல்லாம் காரியங்கள் நடைபெறுகின்றன என்ற முகத்தோற்றத்தை வளரும் பிள்ளைகளுக்கு எடுத்துரைக்க வேண்டியது தமிழ் பெற்றோர் கடமையாகும்.
நமது வாழ்வின் அடையாளங்களை பிள்ளைகள் மனங்களில் பதியும் வாய்ப்பு இப்படி எப்போதாவதுதான் நமக்குக் கிட்டுகிறது, அதை பிள்ளைகளுக்கு அறியக்கொடுப்பது நம் கடனே.
டென்மார்க் அகதிகள் குவோட்டோ கொள்கையில் மாற்றம் ?
டென்மார்க் அரசு ஐ.நா சபையின் அகதிகள் கொள்கையில் தன்னையும் பதிவு செய்துகொண்ட ஒரு நாடாக இருக்கிறது.
குவோட்டோ என்று அழைக்கப்படும் இந்த விசேட ஒப்பந்தத்தின் பிரகாரம் வருடம்தோறும் உலகில் உள்ள பல்வேறு அகதி முகாம்களில் இருந்தும் மொத்தம் 500 அகதிகளை டென்மார்க் வரவழைக்க வேண்டும்.
கே என்ற அடையாளமிட்ட இந்த அகதிகள் விவகாரம் நீண்ட காலமாக டென்மார்க்கில் விமர்சனங்களை சந்தித்துவந்தது.
பலத்த எதிர்ப்பு நிலவுகின்ற காரணத்தால் நீதியமைச்சர் மோற்றன் புத்ஸ்கோவ் இந்தச் சட்டத்தில் மாறுதல் செய்யப்படும் என்று கருத்துரைத்துள்ளார்.
இவருடைய யோசனைப்படி ஐ.நா சட்டத்திற்காக டென்மார்க்குடன் தொடர்பில்லாத நாடுகளின் அகதிகளை இங்கே வரவழைப்பதைவிட, ஏதோ ஒருவகையில் டென்மார்க்கை அறிந்த, இந்தச் சமுதாய வாழ்வுடன் தொடர்புள்ள அகதிகளை வரவழைக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.
இவருடைய யோசனையை அரசின் கூட்டுக்கட்சியான எஸ்.எப் நிராகரித்துள்ளது.
அகதிகள் என்ற சொல்லின் பொருள் ஒன்றுதான், அதற்குள் நெருங்கியவர் – நெருங்காதவர் என்ற பாகுபாடு பார்ப்பது சரியல்ல என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்த விவாதம் தொடர்கிறது..
அதேவேளை டென்மார்க்கில் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டவர்களை நாடுகடத்துவதற்கும், அவர்களாக நாடு திரும்புவதற்கும் வசதியாகவும் புதியதோர் முகாமிற்கு மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.
சுமார் 600 தொடக்கம் 700 பேர் இவ்வாறு அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள், இவர்களை இடம் மாற்றப்போகிறது அரசு.
செல்ஸ்மார்க் குடியேற்றத்திட்டம் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த இடமாற்றக் கட்டிடத்தொகுதியானது கோஸ்கொல்ம் நகரசபைக்குள் வருவதால் அந்த நகர மேயர் எதிர்த்துள்ளார்.
இவர்களில் பலர் கிரிமினல் குற்றவாளிகள் இவர்கள் உள்ளுரில் நடமாடுவது அந்த நகரவாழ்வை பாதிக்கும் என்பது இவருடைய கோபமாகும்.
அதேவேளை இப்படியொரு காரியத்திற்கு 18 நகரசபைகள் ஆதரவும் தெரிவித்துள்ளன.
தனக்குத் தனக்கென்று வந்தால்தான் இந்த 18 நகரசபைகளுக்கும் தனது வேதனை தெரியும் என்பது கோல்ஸ்கொல்ம் நகர மேயரின் ஆதங்கமாக இருக்கிறது.