கொழும்பு கப்பல் சேவையை ரத்து செய்க : மத்திய அரசிடம் முதல்வர் ஜெயலலிதா மனு!
14 Jun,2011



இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என, சட்டசபையில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், தூத்துக்குடிக்கும், கொழும்புக்கும் இடையில் கப்பல் போக்குவரத்து சேவை துவக்கப்பட்டிருப்பது சரியல்ல. இதை உடனடியாக தடை செய்ய வேண்டும். மேலும், தமிழகத்துக்கு என சிறப்பு நிதி ஒதுக்கீடாக ஒரு லட்சம் கோடி ரூபாய் அளிக்க முன்வர வேண்டும்,'' என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம், முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை வைத்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று டில்லியில் சந்தித்துப் பேசினார். மதியம் 12 மணிக்கு, பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, தமிழகத்தின் தேவை மற்றும் இலங்கைத் தமிழர் விவகாரம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து, 30 பக்கங்களைக் கொண்ட கோரிக்கை மனுவை அளித்தார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் போர் நடந்த கடைசி நேரங்களில், அப்பாவி தமிழ் மக்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை அரசின் போர்க்குற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் வரை கொண்டு செல்ல இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்களுக்கு சம அந்தஸ்து, உரிமைகள் வழங்கிட இலங்கை அரசை, இந்தியா வலியுறுத்த வேண்டும். மத்திய அதிகாரங்களை மாநிலங்களுக்கும் பரவலாக்கி தமிழர்களுக்கு நில உரிமை மற்றும் போலீஸ் அதிகாரம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்.
தமிழர்கள் மீது எண்ணற்ற அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாலும், பல கோரிக்கைகளை ஏற்க மறுத்துக் கொண்டே வருவதாலும் இலங்கை மீது பொருளாதார தடையை கொண்டு வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போரால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களின் புனர்வாழ்க்கைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவை திரும்பப் பெறுவது குறித்தும், அங்கு தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமைகளை நிலைநாட்டிடவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொழும்புக்கும், தூத்துக்குடிக்கும் இடையில் துவங்கப்பட்டிருக்கும் கப்பல் போக்குவரத்து சேவையை உடனடியாக தடை செய்ய வேண்டும். இலங்கை மீது பொருளாதார தடை கொண்டு வருவதற்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு கிடைத்துள்ள நிலையில், பிரதமரே தலையிட்டு இந்த சேவையை நிறுத்த வேண்டும். ஊதியம், பென்ஷன் போன்றவற்றாலும் ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளாலும் தமிழக அரசு நிதிநிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இந்த பாரத்தை சமாளிப்பதற்காக சிறப்பு நிதிஒதுக்கீடாக ரூ. ஒரு லட்சம் கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்.முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை வைத்துள்ளார்.