பெலிஸில் நடுவானில் பறந்தபோது கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் சுட்டுக்கொலை
18 Apr,2025
மத்திய அமெரிக்க நாடான பெலிஸ் எல்லையில் உள்ள கோரோஷல் எனும் நகரில் இருந்து சுற்றுலாதலமான சான் பெட்ரோவுக்கு சிறிய ரக விமானம் புறப்பட்டது. அதில், 14 பயணிகள் மற்றும் 2 விமானிகள் இருந்தனர். நடுவானில் விமானம் பறந்தபோது, திடீரென கத்திமுனையில் ஒருவர், விமானத்தை கடத்தினார்.
அவர், இந்த நாட்டை விட்டு என்னை வெளியே கொண்டு சென்று விடுமாறு கோரிக்கை விடுத்தார். இதனால் பதற்றம் நிலவியது. பயணிகள் பீதியடைந்தனர். அப்போது திடீரென அந்த நபர், விமானி உள்பட 3 பேரை கத்தியால் குத்தினார். அதனால் பயணிகளில் ஒருவர், தன்னிடம் இருந்த லைசென்ஸ் பெற்ற துப்பாக்கியால், அந்த நபரை சுட்டார். இதில் கீழே சுருண்டு விழுந்து இறந்தார்.
இந்த சம்பவத்தால் சுமார் 2 மணி நேரம் விமானம் வானில் வட்டமடித்தது. பிறகு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், விமானத்தை கடத்த முயன்றது அமெரிக்காவை சேர்ந்த அகின்யேலா சாவா டெய்லர் என தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.