உலகில் நீங்கள் எத்தனையோ முறைகேடு, மோசடி குறித்துப் படித்து இருப்பீர்கள். ஆனால், இந்த மோசடியைப் பற்றி நீங்கள் படித்தால் உங்கள் தலையே சுற்றிவிடும். 1990களில் நடந்த இந்த மிகப் பெரிய மோசடி ஒட்டுமொத்த உலகையும் அலறவைத்தது. இல்லாத விமான நிலையத்தை ஒருவர், சர்வதேச வங்கி ஒன்றுக்கே சத்தமில்லாமல் விற்றிருக்கிறார்.
நைஜீரியா நாட்டை சேர்ந்த மோசடி பேர்வழியான இம்மானுவேல் நுடே என்பவர் இல்லாத விமான நிலையத்தை 242 மில்லியன் டாலர்களுக்கு (சுமார் ரூ.20 ஆயிரம் கோடி) விற்றிருந்தார்.. அதுவும் வங்கி ஒன்றுக்கே இல்லாத இந்த விமான நிலையத்தை விற்றிருக்கிறார். தன்னை நைஜீரியாவின் மத்திய வங்கியின் கவர்னர் பால் ஓக்வுமா எனச் சொல்லி ஆள்மாறாட்டம் செய்து ஏர்போர்ட்டை விற்றுள்ளார்.
மோசடி அதாவது பிரேசில் நாட்டிலுள்ள பான்கோ நோரோஸ்டே வங்கியின் இயக்குநர் நெல்சன் சகாகுச்சி என்பவரை நுடே சந்தித்துள்ளார். தன்னை நைஜீரிய ரிசர்வ் வங்கி கவர்னர் என சொல்லிக் கொண்ட அவர், நைஜீரியா தலைநகர் அபுஜாவில் இல்லாத விமான நிலையத் திட்டத்தில் முதலீடு செய்யச் சொல்லிக் கேட்டுள்ளார்.
அவர் ஏற்கனவே யூனியன் பாங்க் ஆஃப் நைஜீரியாவில் இயக்குநராக இருந்திருந்ததால் நைஜீரியா பொருளாதாரம் மற்றும் முதலீடு சார்ந்து துல்லியமான தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த மோசடியில் பலரையும் அவர் கூட்டாளியாகவும் சேர்த்திருக்கிறார். கமிஷனுக்கு ஆசைப்பட்டு நைஜீரிய ரிசர்வ் வங்கி ஆளுநர் பால் ஓக்வுமா என்று ஆள்மாறாட்டம் செய்த நியூடே, அபுஜாவில் இல்லாத ஒரு விமான நிலையத்தில் முதலீடு செய்தால் 10 மில்லியன் டாலர் கமிஷன் தருவதாகச் சொல்லி ஏமாற்றியிருக்கிறார்.
மொத்த ஒப்பந்தம் $242 மில்லியன் ஆகும். இதில் $191 மில்லியன் ரொக்கமாகவும் மீதமுள்ளவை 1995 மற்றும் 1998க்கு இடையில் வட்டியாகத் தர முடிவு செய்யப்பட்டது.. மோசடியை உணராமல் 10 மில்லியன் கமிஷனுக்கு ஆசைப்பட்டு பான்கோ நோரோஸ்டே வங்கியின் இயக்குநர் நெல்சன் சகாகுச் முதலீடு செய்ய ஓகே சொன்னார். அதாவது விமான நிலையத்தின் பங்குகளை வாங்க ஒப்புக்கொண்டார்.
சில ஆண்டுகளுக்கு பிறகே இந்த மோசடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பான்கோ நோரோஸ்டே வங்கியின் கையிருப்பில் இது கணிசமான தொகை என்பதால் இந்தச் செய்தி வெளியே வந்தவுடன் வங்கி கடும் அழுத்தத்தை எதிர்கொண்டது. 2001ம் ஆண்டு இந்த வங்கி மொத்தமாகத் திவாலும் ஆனது. வெளிச்சத்திற்கு வந்தது எப்படி ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பாங்கோ சாண்டாண்டர் என்ற நிதி நிறுவனம் பான்கோ வங்கியை வாங்க முடிவு செய்து,
இது தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருந்தது. அப்போது வங்கியின் நிதி நிலைமையில் பெரிய முரண்பாடு இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. வங்கியின் மதிப்பு மற்றும் எளிதாகப் பணமாக மாற்றக்கூடிய கணிசமான சொத்து கேமன் தீவுகளில் இருப்பது போல் கணக்குக் காட்டப்பட்டு இருந்தது.. இதனால் சந்தேகமடைந்த அந்த நிதி நிறுவனம் உடனடியாகத் தங்கள் அரசை அலர்ட் செய்துள்ளனர்.
சிக்கிய மோசடி பேர்வழிகள்
இதையடுத்து பிரேசில், பிரிட்டன், நைஜீரியா, சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்கா அதிகாரிகள் இணைந்து விரிவான குற்றவியல் விசாரணையை நடத்தினர். நீண்ட விசாரணைக்குப் பிறகு என்ன மோசடி நடந்தது என்பதை கண்டறிந்தனர். 10 மில்லியன் கமிஷனுக்கு ஆசைப்பட்டு உரிய விசாரணை இல்லாமல் பெரிய தொகையை முதலீடு செய்த பன்கோ வங்கியின் தலைவர் நெல்சன் சகாகுச்சி அமெரிக்காவில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இந்த ஒட்டுமொத்த மோசடியையும் திட்டம்போட்டு நடத்த நியூடே கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அவருக்குக் கூட்டாளியாக இருந்தவர்கள் அவருக்கு எதிராகச் சாட்சி சொன்னர். இதையடுத்து கடந்த 2005ம் ஆண்டு நியூடே குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.