வெண்புள்ளி பாதிப்பிற்கு நவீன சிகிச்சை
19 Dec,2024
எம்மில் சிலருக்கு திடீரென்று தலைமுடி மற்றும் தோலில் நிறமாற்றம் ஏற்படும். அப்பகுதியில் திட்டு திட்டாக வெண்மையான புள்ளிகள் தோன்றும். மருத்துவ மொழியில் விட்டிலிகோ என குறிப்பிடப்படும் இத்தகைய பாதிப்பிற்கு தற்போது போட்டோ தெரபி மற்றும் மெலனோசைட் மாற்று சிகிச்சை ஆகிய நவீன சிகிச்சையின் மூலம் முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்முடைய தலைமுடி மற்றும் தோலின் நிறத்திற்கு மெலனின் எனப்படும் ஹோர்மோன் உற்பத்தியே காரணம். இந்த மெலனின் உற்பத்தி செய்யும் போது செல்கள் சிதிலமடைந்தோ அல்லது சேதமடைந்து இறந்தாலோ அல்லது இதன் செயல்பாட்டில் ஏதேனும் பாரிய இடையூறு ஏற்பட்டாலோ தோலில் குறிப்பிட்ட பகுதியில் நிறம் இழக்கிறது.
இதனை வெண்புள்ளி என குறிப்பிடுகிறார்கள். இத்தகைய பாதிப்பு தொற்று பாதிப்பு அல்ல என்றாலும், உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியது அல்ல என்றாலும், இத்தகைய பாதிப்பின் காரணமாக மன அழுத்தம் தொடர்பான உளவியல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை உரிய தருணத்தில் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும் என வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். தவறினால் கண் பார்வை தொடர்பான கோளாறுகள், செவித்திறன் தொடர்பான கோளாறுகள், சமூகவியல் தொடர்பான மன அழுத்த பாதிப்புகள் ஆகியவை ஏற்படக்கூடும் என எச்சரிக்கிறார்கள்.
தோலில் ஏதேனும் ஒரு பகுதியில் சிறிய அளவில் ஏற்படும் இத்தகைய வெண் திட்டு இதன் தொடக்க நிலை அறிகுறியாகும். இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவுடன் வைத்தியர்களை சந்தித்தால் அவர்கள் தோல் திசு பரிசோதனை மற்றும் குருதி பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள்.
அதனைத் தொடர்ந்து நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் மூலம் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி நிவாரணம் தருவர். இதனைத் தொடர்ந்தும் பாதிப்பு நீடித்தால் போட்டோதெரபி எனப்படும் கதிர் ஒளி சிகிச்சை மூலம் நிவாரணம் தருவர்.
இத்தகைய சிகிச்சை சிலருக்கு வாரம் மூன்று தவணைகளில் ஆறு மாதம் முதல் ஒரு மாதம் வரை அளிக்க வேண்டியதாக இருக்கும். இதன் பிறகும் நிவாரணம் கிடைக்காத போது மேலும் சில பரிசோதனைகளை மேற்கொண்டு ஸ்கின் கிராஃப்டிங் எனும் சத்திர சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் வழங்குவர். வேறு சிலருக்கு மெலனோசைட் மாற்று சிகிச்சை மூலம் நிவாரணம் அளிப்பர்.