இந்த காலத்தில் திடீர் திடீரென என புதுப்புது வைரஸ்கள் பரவுகிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் பொருளாதார பாதிப்புகளும் மிக மோசமாக இருக்கிறது. கொரோனா, மங்கி பாக்ஸ் எனப் பல வைரஸ்கள் பரவியுள்ள நிலையில், இப்போது புதிதாக Bleeding Eye வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்த ப்ளீடிங் ஐ வைரஸ் என்றால் என்ன.. இது எப்படிப் பரவுகிறது.. இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை நாம் பார்க்கலாம். கடந்த 2019 இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா நம்மை எந்தளவுக்குப் புரட்டிப் போட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.
கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார பாதிப்புகள் மிக மோசமாக இருந்தது. அவற்றில் இருந்து நாம் இப்போது தான் மெல்ல மீண்டு வரும் நிலையில், இப்போது புதிதாக மார்பர்க் வைரஸ் எனப்படும் ப்ளீடிங் ஐ வைரஸ் பரவி வருகிறது. இது குறித்து நாம் பார்க்கலாம். ப்ளீடிங் ஐ வைரஸ்: இந்த ப்ளீடிங் ஐ வைரஸ் இப்போது ஆப்பிரிக்க நாடுகளைப் புரட்டிப் போட்டு வருகிறது. குறிப்பாகக் கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் பாதிப்பு மிக மோசமாக இருக்கிறது. இதனால் ருவாண்டாவில் மட்டும் சுமார் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இது 17 ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பரவியுள்ளதும் அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. பிரேசில், கென்யா, ருவாண்டா, காங்கோ, உகாண்டா, பொலிவியா உள்ளிட்ட இந்த 15 நாடுகளுக்குச் செல்லும் தங்கள் நாட்டுப் பயணிகளுக்குப் பிரிட்டன் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா பரவிய காலத்தில் இதுபோலத் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நாடுகளுக்குச் செல்வோருக்குப் பல நாடுகள் எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மார்பர்க் மட்டுமின்றி கிளேட் 1 மற்றும் ஓரோபூச் காய்ச்சலும் இங்குப் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. இப்பகுதிகளுக்குச் செல்லும் மக்கள் கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆபத்தான நோய்: ப்ளீடிங் ஐ வைரஸ் எனப்படும் இந்த மார்பர்க் வைரஸ் நோய் மனிதர்களுக்கு ஏற்படும் மிகவும் ஆபத்தான நோய் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.. பழம் தின்னும் வௌவால் இனமான ரூசெட்டஸ் ஏஜிப்டியாகஸ் என்ற வகை வௌவால்களில் தான் இந்த மார்பர்க் வைரஸ் இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அறிகுறிகள்: இந்த வைரஸ் நமக்குப் பரவினால் இரண்டு முதல் 21 நாட்களில் அறிகுறிகள் தென்படத் தொடங்கும். அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, உடல்வலி ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, தசைப்பிடிப்பு,
குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை 3வது நாளில் இருந்து ஆரம்பிக்கும். 5ம் நாள் முதல் வாந்தி மற்றும் மலத்தில் ரத்தம் தென்படத் தொடங்கும். மேலும், மூக்கு, கண், காது, வாய் ஆகியவற்றிலிருந்து ரத்தம் கொட்ட தொடங்கும். சில நேரம் ஆண்களுக்கு ஆணுறுப்புகள் வீங்கவும் செய்யும் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். எட்டு முதல் ஒன்பது நாட்களுக்குப் பிறகு பாதிப்பு தீவிரமாக இருந்தால் ரத்தப் போக்கு காரணமாக உயிரிழப்பும் கூட ஏற்படலாம்.
எப்படிப் பரவுகிறது: இந்த வகை வைரஸ் கொரோனா போலக் காற்றின் மூலம் பரவாது. நேரடியாக நோயாளியுடன் தொடர்பு ஏற்பட்டால் தான் பரவும். நோயாளிகளின் ரத்தம், உள்ளிட்ட உடலின் பிற திரவங்கள் அல்லது அவர்கள் பயன்படுத்தும் படுக்கை, உடை ஆகியவற்றைத் தொடும் போது இந்த வைரஸ் பரவுகிறது. பொதுவாக இந்த ப்ளீடிங் ஐ வைரஸ் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்போருக்கே இந்த வைரஸ் முதலில் ஏற்படுகிறது. மேலும், இந்த வைரஸால் ஒருவர் உயிரிழந்து, அவருக்கு இறுதிச் சடங்கு நடக்கும் போதும் கூட இந்த உடலுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்துவோருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு பரவுவதாக
மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். சிகிச்சை என்ன: இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரில் சுமார் 50% பேர் உயிரிழக்கும் ஆபத்து இருக்கிறது. இதுவே இதை மிகவும் கொடிய வைரஸாக மாற்றுகிறது. அதேநேரம் தற்போது வரை இந்த கொடூர வைரஸுக்கு தடுப்பூசிகள் அல்லது தடுப்பு சிகிச்சைகள் எதுவும் இல்லை. நோய் பாதிக்கப்பட்டோரின் உடலில் தென்படும் அறிகுறிகளுக்குச் சிகிச்சை அளிக்கலாம். மேலும், அதிகளவில் நீரை எடுத்துக் கொள்ளச் சொல்வது மட்டுமே சிகிச்சை முறையாக இருக்கிறது.