யுக்ரேனுடனான போரில் ரஷ்யா ஆண்டுக்கு லட்சக்கணக்கான ஷெல் குண்டுகளை யுக்ரேன் ராணுவத்தின் மீது வீசுகிறது. மேலும் அங்கு பொதுமக்கள் வாழும் பகுதிகளின் மீது தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்துகிறது.
இதில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான வெடிபொருட்கள் ரஷ்யாவின் நட்பு நாடுகளால் வழங்கப்பட்டவை எனக் கூறப்படுகிறது.
மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலம் அந்நாட்டின் ஆயுதங்களைத் தயாரிக்கும் திறனைத் தடுக்க முயல்கின்றன.
ஆனால், அதே வேளையில் சீனா, இரான், வட கொரியா போன்ற நாடுகள் ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கி உதவுவதாகக் கூறப்படுகிறது.
இரான் வழங்கும் ட்ரோன்கள், ஏவுகணைகள்
ஃபாத்-360 என்பது 150 கிலோ வெடிபொருட்களை சுமந்து, சுமார் 120 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடிய ஒரு ஏவுகணை. குறுகிய தூரம் தாக்கும் இந்த பாலிஸ்டிக் ஏவுகணைகளை, சுமார் 200 அல்லது அதற்கும் மேற்பட்ட அளவில் ரஷ்யாவுக்கு வழங்க இரான் ஒப்பந்தம் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
ரஷ்யாவின் ஆயுதப்படையைச் சேர்ந்த பல வீரர்கள் இந்த ஏவுகணையைப் பயன்படுத்த இரானில் பயிற்சி எடுத்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை குறிப்பிடுகிறது.
மேலும், எதிர்காலத்தில் இந்த ஏவுகணைகள் மூலம் யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய படையில் வட கொரிய வீரர்கள் சண்டையிடுவதாக முன்பு எழுந்த குற்றச்சாட்டை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் "முழுமையான முட்டாள்தனம்" என்று கூறி மறுப்பு தெரிவித்தார்
பட மூலாதாரம்,GAVRIIL GRIGOROV/POOL/AFP
படக்குறிப்பு, ரஷ்ய படையில் வட கொரிய வீரர்கள் சண்டையிடுவதாக முன்பு எழுந்த குற்றச்சாட்டை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் "முழுமையான முட்டாள்தனம்" என்று கூறி மறுப்பு தெரிவித்தார்
ரஷ்யா ஃபாத்-360 ஏவுகணைகளைப் பயன்படுத்தி யுக்ரேனின் பல்வேறு நகரங்கள் மற்றும் அந்நாட்டின் எல்லைகளுக்கு அருகிலுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற இடங்களைத் தாக்கலாம். இதனால் யுக்ரேனின் மிகவும் உள்ளார்ந்த பகுதிகளில் இருக்கும் இலக்குகளைத் தாக்குவதற்கு மட்டும் அதன் நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த முடியும்.
"ஃபாத்-360 ஏவுகணை ரஷ்ய எல்லைக்கு அருகிலுள்ள யுக்ரேனிய இலக்குகளைத் தாக்குவதற்கு உதவும். ரஷ்யாவிடம் இதுபோன்ற ஏவுகணை இல்லை," என்று லண்டன் கிங்ஸ் கல்லூரியின் போர் ஆய்வுத் துறையைச் சேர்ந்த முனைவர் மெரினா மிரோன் கூறுகிறார்.
ரஷ்யா இரானுக்கு அணுசக்தி தொழில்நுட்பம் உள்பட ராணுவத் தொழில்நுட்பத்தை வழங்கலாம் என்றும் அவர் கூறுகிறார். ரஷ்யாவுக்கு ஏவுகணைகளை வழங்கியதற்காக இரான் மீது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் புதிய தடைகளை விதித்துள்ளன.
இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் இரானை சேர்ந்தவர்களின் மீது, பயணத் தடைகள், சொத்து முடக்கம் ஆகியவற்றுடன் சேர்த்து பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவிற்குள் நுழைய இரானின் விமானங்கள் மீது கட்டுப்பாடுகள் போன்றவை விதிக்கப்பட்டுள்ளன.
ரஷ்யாவிற்கு ஃபாத்-360 போன்ற சுயமாக இலக்கை நோக்கிச் செல்லும் ஆயுதங்களை வழங்குவதை இரான் பலமுறை மறுத்துள்ளது.
யுக்ரேன் போர்: ரஷ்யாவிற்கு எந்தெந்த நாடுகள் ஆயுதம் வழங்குகின்றன?
படக்குறிப்பு, ஷாஹேத்-136 ட்ரோன், நகரங்கள், உள்கட்டமைப்புகளைத் தாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் 500 கிலோ எடையுள்ள ராக்கெட்டை சுமந்து செல்ல முடியும்.
கடந்த 2022ஆம் ஆண்டில் யுக்ரேன் - ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து ஷாஹேத்-136 ட்ரோன்களை இரான் ரஷ்யாவிற்கு வழங்கி வருவதாக யுக்ரேன் அரசாங்கம் மற்றும் மேற்கத்திய உளவுத்துறை அமைப்புகளும் கூறுகின்றன.
ஷாஹேத் ட்ரோன் அதன் முனையில் வெடிபொருட்களைக் கொண்டுள்ளது. அதோடு, தாக்குவதற்கான உத்தரவு வழங்கப்படும் வரை அது இலக்கைச் சுற்றியே வட்டமடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
யுக்ரேனின் வான் பாதுகாப்பை முறியடிக்க முயற்சி செய்ய இந்த ட்ரோன்களை அதிக எண்ணிக்கையில் ரஷ்ய படைகள் பயன்படுத்துகின்றன.
இந்த ட்ரோன்கள், அதிக வெடிபொருட்களைக் கொண்டு அதிக சேதங்களை ஏற்படுத்தும். இவை பெரும்பாலும், க்ரூஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிப்பது, யுக்ரேனின் வான் பாதுகாப்பை முறியடிப்பது ஆகியவற்றுக்காகப் பயன்படுகின்றன.
யுக்ரேன் - ரஷ்யா போர் தொடங்குவதற்கு முன்பு 'சிறிய எண்ணிக்கையில்' மட்டுமேரோன்களை வழங்கியதாக இரான் அரசு கூறுகிறது.
இருப்பினும், இரான் ரஷ்யாவுக்குத் தொடர்ச்சியாக ஆயுதங்களை வழங்கி வருவதாக, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் குற்றம் சாட்டின. ஐரோப்பிய ஒன்றியம் இதில் தொடர்புடைய மக்கள் மற்றும் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது.
வட கொரியா ரஷ்யாவிற்கு மூன்று மில்லியன் ஷெல் குண்டுகளை வழங்கியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புப் புலனாய்வு அமைப்பு (DIA) 2024ஆம் ஆண்டு மே மாதம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
ரஷ்யா - யுக்ரேன் போரில் முன்வரிசையில் இரு தரப்பினரும் பயன்படுத்தும் முக்கிய ஆயுதம் பீரங்கி. இது எதிரி நாட்டின் காலாட்படை முன்னேறித் தாக்குதல் நடத்துவதில் இருந்தும், அவர்களின் ஆயுதங்களிடம் இருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது.
சமீபத்திய மாதங்களில், யுக்ரேனைவிட ரஷ்யாவிடம் 5 மடங்கு அதிகமான ஷெல் குண்டுகளின் இருப்பு காணப்படுவதாக ராயல் யுனைடெட் சர்வீசஸ் நிறுவனம் எனப்படும் பிரிட்டனை சேர்ந்த ஒரு திட்டக் குழு கூறியுள்ளது.
கடந்த 2023அம் ஆண்டு கிழக்கு யுக்ரேனில் அதிக பகுதிகளை ரஷ்யா ஆக்கிரமித்ததற்கு இது ஒரு முக்கியக் காரணம் என்றும் அந்தத் திட்டக்குழு கூறியுள்ளது.
யுக்ரேனில் உள்ள கார்கிவ் பகுதியில் ரஷ்யா வான்வழித் தாக்குதல் நடத்தியதில் பயன்படுத்தப்பட்ட இரண்டு வகையான குறுகிய தூர இலக்குகளைத் தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் சிதைவைக் கண்டுபிடித்ததாகவும், அவை வட கொரியாவால் தயாரிக்கப்பட்டவை என்றும் யுக்ரேனிய உளவுத்துறை அதிகாரிகள் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தெரிவித்தனர்.
இது 400 கிலோமீட்டர் முதல் 690 கிலோமீட்டர் வரை தாக்கக்கூடிய குறுகிய தூரம் தாக்கும் ஒரு ஏவுகணை. இதனால் 500 கிலோ எடையுள்ள வெடிபொருட்களையும் சுமந்து செல்ல முடியும்.
கடந்த 2006ஆம் ஆண்டு முதல் வட கொரியாவுடன் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தொடர்பான வர்த்தகத்திற்கு ரஷ்யாவுக்கு ஐ.நா அனுமதி அளித்துள்ளது. வடகொரியா ரஷ்யாவிற்கு 50 ஏவுகணைகளை அனுப்பியுள்ளதாக யுக்ரேன் உளவுத்துறை கூறுகிறது.
கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த ஐ.நா பாதுகாப்பு சபையின் கூட்டத்தில், யுக்ரேன் மீது நடத்தப்பட்ட குறைந்தது 9 வான் தாக்குதல்களில் வட கொரிய ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.
ரஷ்ய படையில் வட கொரிய வீரர்களா?
கடந்த 2022ஆம் ஆண்டில் இருந்து ரஷ்யாவும் வடகொரியாவும் ஆயுத விற்பனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்ததாகவும், 2023ஆம் ஆண்டு வட கொரியா ரஷ்யாவிற்கு சோதனைக்காக ஆயுதங்களை அனுப்பியதாகவும் அமெரிக்க பாதுகாப்புப் புலனாய்வு அமைப்பு கூறுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி யுக்ரேன் மீது ரஷ்யா தாக்கத் தொடங்கியதாகவும் அது கூறுகிறது.
"இஸ்கண்டர் போன்ற குறுகிய தூரம் தாக்கும் ஏவுகணைகளைவிட ஹ்வாசாங்-11 ஏவுகணைகள் ரஷ்யாவிற்கு மலிவானவை. செலவுகளைக் கணக்கிட்டு ரஷ்யா இதைச் செய்துள்ளது" என்கிறார் முனைவர் மெரினா மிரோன்.
மேலும், இரான் மற்றும் வட கொரியா போன்ற நாடுகளுடன் ஆயுத ஒப்பந்தங்கள் மேற்கொள்வது மூலம் ரஷ்யா தனக்கு நட்பு நாடுகள் இருப்பதையும், அது தனிமைப்படுத்தப்படவில்லை என்பதையும் மேற்குலகுக்கு காட்டுகிறது.
ஹ்வாசாங்-11 போன்ற பாலிஸ்டிக் ஏவுகணைகள் அவற்றின் இலக்கை நோக்கி மிக அதிக வேகத்தில் செல்வதால் அதை இடைமறிப்பது கடினம். ஆனால் வட கொரியாவில் இருந்து பெறப்பட்ட இந்த ஏவுகணைகளைக் கொண்டு யுக்ரேன் இலக்குகளைத் தாக்க ரஷ்யா தவறிவிட்டது. ஏனெனில் அவை மின்னணு பிழைகள் காரணமாகத் திட்டமிடப்பட்ட பாதைகளில் செல்லவில்லை என்று யுக்ரேனின் உளவுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
ரஷ்யாவிற்கு ஆயுதங்களை அனுப்பவில்லை என்று வடகொரியா கூறுகிறது, வடகொரியாவில் இருந்து ஆயுதங்கள் எதையும் பெறவில்லை என்று ரஷ்யா கூறுகிறது.
ரஷ்ய படைகளுடன் வடகொரிய வீரர்கள் இருப்பதைக் கண்டதாக யுக்ரேனிய உளவுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். கிழக்குப் பகுதியில் ரஷ்ய ராணுவ பயிற்சித் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ஆறு வட கொரிய அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும் மூவர் காயமடைந்ததாகவும் யுக்ரேன் உளவுத்துறை அதிகாரிகள் கூறியதாக கடந்த அக்டோபர் 3ஆம் தேதியன்று யுக்ரேனின் செய்தித்தாள்களில் வெளியான செய்திகள் கூறுகின்றன.
யுக்ரேனில், ரஷ்ய படையில் வட கொரிய வீரர்கள் சண்டையிடுவதாக ஏற்கெனவே 2023ஆம் ஆண்டு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் "முழுமையான முட்டாள்தனம்" என்று கூறி மறுப்பு தெரிவித்தார்.
ரஷ்யாவுக்கு அதிகளவிலான ஆயுதங்களை வழங்கி, அதன் ராணுவ நடவடிக்கைகளுக்கு சீனா உதவி வருவதாக, நேட்டோ உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஒருமித்த குரலில் குற்றம் சாட்டுகின்றனர்.
பொதுமக்கள் பயன்பாடுகளைக் கொண்ட, அதேவேளையில் ஆயுதங்களை உருவாக்கவும் பயன்படுத்தவல்ல, கணினி சிப்கள் போன்ற ‘இரட்டைப் பயன்பாடுள்ள’ பொருட்களை சீனா வழங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏவுகணைகள், டிரோன்கள், ராக்கெட்டுகள் போன்ற ஆயுதங்களைத் தயாரிக்கப் பயன்படும் ‘உயர் முன்னுரிமை’ கொண்ட இரட்டை பயன்பாட்டுத் தயாரிப்புகளை ஒவ்வொரு மாதமும் சீனா ரஷ்யாவிற்கு அனுப்பி வருவதாக அமெரிக்காவில் இருந்து இயங்கும் சர்வதேச அமைதிக்கான கார்னெகி எண்டோவ்மென்ட் கூறுகிறது.
தனது மொத்த இயந்திரக் கருவிகளில் 70% (ஆயுத உறைகள் தயாரிக்கப் பயன்படுத்தலாம்), மைக்ரோ மின்னணு தயாரிப்புகளான சிப்கள், செமி கண்டக்டர்களில் 90% ஆகியவற்றை ரஷ்யாவிற்கு விற்பனை செய்வதாக கார்னெகி எண்டோவ்மென்ட் கூறுகிறது.
அந்த அமைப்பு 2023இல், ரஷ்யா அதன் அனைத்து உயர் முன்னுரிமை வாய்ந்த இரட்டைப் பயன்பாட்டுப் பொருட்களில் 89 சதவிகிதத்தை சீனாவில் இருந்து இறக்குமதி செய்ததாகக் கூறுகிறது. போருக்கு முன்பாக, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகள் அவற்றில் பெரும்பாலானவற்றை வழங்கி வந்ததாகவும் கார்னெகி அமைப்பு குறிப்பிடுகிறது.
யுக்ரேன் போர் விவகாரத்தில் தாம் நடுநிலை வகித்ததாகக் கூறி, ஆயுதங்களை உருவாக்க ரஷ்யாவுக்கு உதவுவதை சீனா மறுத்துள்ளது. சீனா ரஷ்யாவிற்கு ஆபத்தான உபகரணங்களை வழங்கவில்லை எனவும், தான் விற்கும் உதிரிபாகங்களில் கவனமாக இருந்ததாகவும் சீனா கூறியுள்ளது.
இதற்கிடையே, கார்பியா-3 என்ற புதிய வகை நீண்ட ஆளில்லா விமானத்தைத் தயாரிப்பதற்காக ரஷ்யா சீனாவில் ஒரு தொழிற்சாலையை அமைத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.
ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, அப்படி எந்தவொரு திட்டத்தைப் பற்றியும் தான் அறிந்திருக்கவில்லை என்றும் டிரோன் ஏற்றுமதியில் கடுமையான கட்டுப்பாடுகளைத் தனது அரசு கொண்டுள்ளதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.
வடகொரியர்களை உள்ளடக்கிய சுமார் 3,000 பேர் கொண்ட ஒரு படைப்பிரிவை ரஷ்ய ராணுவம் உருவாக்கி வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. யுக்ரேன் ராணுவத்தின் உளவுத்துறை வட்டாரங்கள் இந்தத் தகவலை பிபிசி-யிடம் தெரிவித்துள்ளனர்.
யுக்ரேன் ராணுவத்தின் சமீபத்திய உளவுத்துறை அறிக்கைகள், ரஷ்யாவுடன் வடகொரியா நெருக்கமான ராணுவக் கூட்டணியை உருவாக்கி வருவதாகக் கூறுகிறது. இருப்பினும், ரஷ்யாவில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் கிழக்கு பகுதியில், இவ்வளவு பெரிய படைப் பிரிவு உருவாகி வருகிறது என்பதற்கான எந்த உறுதியான தகவலும் இன்னும் பிபிசிக்கு கிடைக்கவில்லை.
ஆனால், ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ரஷ்யா- யுக்ரேன் போரில் வடகொரியா ஈடுபடுவது குறித்து வெளியான செய்திகளை நிராகரித்துள்ளார்.
பெஸ்கோவின் கூற்றுபடி, "பிரிட்டிஷ் புலனாய்வு அமைப்பு மட்டுமல்ல, அமெரிக்க உளவு நிறுவனமும் இதுபோன்ற செய்தி அறிக்கைகளை வெளியிடுகிறது. இது போன்ற தகவல்களை வழங்குவதே இந்த அமைப்புகளின் வேலை. ஆனால் இதுகுறித்து எந்த ஆதாரத்தையும் அவர்கள் முன்வைப்பதில்லை," என்றார்.
இருப்பினும், சமீபத்திய மாதங்களில் ரஷ்யாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை.
ரஷ்யா - வட கொரியா இடையே அதிகரிக்கும் ஒத்துழைப்பு
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் கடந்த வாரம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியதோடு, அவரை 'நெருங்கிய தோழர்' என்றும் குறிப்பிட்டார்.
ரஷ்யா-யுக்ரேன் போரில் வடகொரியா தலையிடுவது குறித்து யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கி ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும், தென்கொரியாவின் பாதுகாப்பு அமைச்சரும் இந்த மாதம், யுக்ரேனில் வடகொரிய படைகள் நிலைநிறுத்தப்பட்டிருப்பதறகான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறினார்.
ஆனால், இந்தப் படையில் எத்தனை வீரர்கள் இருக்கிறார்கள் என்பது தான் மிகப் பெரிய கேள்வி. ரஷ்யாவின் கிழக்குக் கோடியில் இருந்து ஒரு ராணுவ தொடர்பான பிரமுகர் பிபிசி-யின் ரஷ்ய சேவையிடம், "பல வடகொரிய வீரர்கள் விளாடிவோஸ்டாக் (Vladivostok) நகரத்திற்கு வடக்கே உசுரிஸ்க் அருகே உள்ள ராணுவத் தளங்களுக்கு வந்துள்ளனர்," என்று கூறினார்.
ஆனால் உண்மையில் எத்தனை வீரர்கள் உள்ளனர் என்பதை நமக்கு தகவல் கொடுத்த நபர் கூறவில்லை. "இந்த எண்ணிக்கை நிச்சயமாக 3,000 ஆக இருக்காது," என்று அவர் கூறினார்.
ஒரு ராணுவ ஆய்வாளர், ரஷ்ய ராணுவம் ஆயிரக்கணக்கான வடகொரிய வீரர்களைத் தங்கள் ராணுவத்திற்குள் வெற்றிகரமாகப் பணியமர்த்த வைக்க முடியுமா என்று சந்தேகிப்பதாகக் கூறினார்.
வட கொரிய வீரர்களை ரஷ்யா எப்படி கையாளும்?
ரஷ்யாவில் உள்ள ஆய்வாளர் ஒருவர், (பெயர் கூற விரும்பாமல்) பிபிசி-யிடம் பேசுகையில், "ஆரம்பத்தில், நூற்றுக்கணக்கான ரஷ்யக் கைதிகளை ராணுவத்தில் சேர்ப்பதே ரஷ்ய ராணுவத்திற்குக் கடினமாக இருந்தது. இத்தனைக்கும் அந்த கைதிகள் அனைவரும் ரஷ்ய மொழி பேசுபவர்கள்," என்றார்.
அதாவது, வடகொரியப் படைகளை நிர்வகிக்கும் பணி அவ்வளவு எளிதானது அல்ல.
ஒருவேளை அவர்கள் 3,000 வடகொரிய வீரர்களைச் சேர்த்திருந்தாலும் கூட, அது போர்க்களத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. ஆனால் யுக்ரேனைப் போலவே அமெரிக்காவும் இதைப் பற்றி கவலைப்படுவதாகத் தெரிகிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், "ரஷ்யா, வடகொரிய வீரர்களைச் சேர்த்திருப்பது ரஷ்யாவிற்கும் வடகொரியாவிற்கும் இடையேயான உறவுகள் கணிசமாக மேம்பட்டுள்ளதைக் காட்டுகிறது," என்றார்.
இருப்பினும், மில்லரின் பார்வையில், இந்தச் செயல்பாடு, ரஷ்யா போர்க்களத்தில் இழப்புகளைச் சந்தித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மையை பிரதிபலிக்கிறது.
இந்த ஆண்டு ஜூன் மாதம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கிம் ஜாங் உன்-உடன் ரஷ்யா மற்றும் வடகொரியா இடையே பாதுகாப்பு மற்றும் பிற துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டார்.
இதைத் தொடர்ந்து, வட கொரியா ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கியதற்கான ஆதாரங்கள் வெளிவந்தன. யுக்ரேனின் பொல்டாவா பிராந்தியத்தில் அண்மையில் மீட்கப்பட்ட ஏவுகணை மூலம் நிரூபிக்கப்பட்டது.
2023-ஆம் ஆண்டு டிசம்பரில் வட கொரியாவிடமிருந்து ரஷ்யா வெடிபொருட்கள் மற்றும் குண்டுகள் வாங்கியதற்கான ஆதாரங்கள் வெளியே கசிந்தது. இந்தத் தகவல்கள் ரஷ்ய ராணுவத்தில் இருக்கும் ஊழியர்களிடையே நடந்த டெலிகிராம் சேட் மூலமாகக் கசிந்தது.
தரமற்ற வடகொரிய ஆயுதங்கள்
யுக்ரேனில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ரஷ்ய வீரர்கள் இந்த ஆயுதங்களின் தரம் குறித்து அடிக்கடி புகார் கூறினர். இந்த ஆயுதங்களால் தங்களது ராணுவ வீரர்கள் பலர் காயம் அடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
குர்ஸ்க் மாகாணத்தில் ரஷ்யாவை நிலைநிறுத்துவதற்கு முன்னதாக, மங்கோலிய எல்லைக்கு அருகில் உள்ள உலன்-உடே பகுதியில் வடகொரியப் படைகள் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக யுக்ரைன் சந்தேகித்துள்ளது.
சமீபத்தில் ரஷ்யாவின் குர்ஸ்க் மாகாணத்தில் யுக்ரேன் ராணுவம் தாக்குதல் நடத்தியது. யுக்ரேனிய ஊடகமான 'டிஃபென்ஸ் எக்ஸ்பிரஸின்’ ஆசிரியர் வலேரி ரெபெக் கூறுகையில், "இந்த வடகொரிய வீரர்கள் ரஷ்யா-யுக்ரேன் எல்லையின் சில பகுதியைப் பாதுகாக்க அனுப்பப்படலாம். வட கொரிய வீரர்கள் இவ்வளவு சீக்கிரமாக முன் வரிசையில் நிறுத்தப்பட மாட்டார்கள்,” என்றார்.
மொழி தெரியாத வீரர்களால் என்ன பயன்?
வடகொரியாவில் 12.8 லட்சம் வீரர்கள் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரஷ்யாவைப் போன்று வடகொரிய ராணுவத்திற்குச் சமீபத்திய போர் நடவடிக்கைகளில் அனுபவம் இல்லை.
வடகொரியா தனது ஆயுதப் படைகளில் பழைய சோவியத் மாதிரியைப் பின்பற்றி வருகிறது, ஆனால் அதன் முக்கியப் படையான காலாட்படை பிரிவுகள் யுக்ரேன் உடனான போருக்கு எவ்வாறு பொருந்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ரஷ்யா-வடகொரியா படைகள் இடையே மொழித் தடையும் இருக்கும். வட கொரிய வீரர்களும் ரஷ்ய அமைப்பைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். இது தற்போதைய போரில் ரஷ்யாவிற்கு சிக்கல்களையே உருவாக்கும்.
ஆனால் இந்த விஷயங்கள் ரஷ்யா-யுக்ரேன் போரில் வட கொரிய வீரர்கள் பங்கேற்பதைத் தடுக்க வாய்ப்பில்லை.
அதே சமயம், வடகொரியர்கள் பொறியியல் மற்றும் கட்டுமான திறன்களுக்கு பெயர் பெற்றவர்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் போரில் திறன் பெற்றவர்கள் அல்ல என்பது தான் பிரச்னை.
வடகொரியாவுக்கு பணமும் தொழில்நுட்பமும் தேவை. ரஷ்யாவிற்கு ராணுவ வீரர்களும் ஆயுதங்களும் தேவை.
வடகொரியாவுக்கு என்ன ஆதாயம்?
கொரியா ரிஸ்க் குழுமத்தின் இயக்குநர் ஆண்ட்ரே லாங்கோவ், "வட கொரியா ரஷ்யாவிடமிருந்து நல்ல வருவாய் பெறலாம், ஒருவேளை அவர்கள் ரஷ்ய ராணுவ தொழில்நுட்பத்திற்கான அணுகலையும் பெறலாம். வடகொரியாவிடம் ராணுவ உதவிகளைப் பெறவில்லை எனில், ரஷ்யா இந்த தொழில்நுட்பத்தை வழங்கத் தயங்கும்,” என்றார்.
"இது வடகொரியாவுக்கு உண்மையான போர் அனுபவத்தைத் தரும். அதே சமயம் வடகொரியாவை விட வளமான மேற்கத்திய நாடுகளில் வாழ்வதன் நன்மையை அவர்களது வீரர்கள் பெறுவார்கள்," என்றார்.
அதேசமயம், கடந்த இரண்டரை ஆண்டுகாலப் போரில் ரஷ்யா இழந்தவைகளுக்கு விரைவில் ஈடு செய்ய வேண்டும் என்று புதின் விரும்புகிறார்.
பிரிட்டனைத் தளமாகக் கொண்ட 'Conflict Studies’ ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த வலேரி அகிமென்கோ, வடகொரியப் படைகள் நிலைநிறுத்தப்படுவது புதினுக்கு உதவும், என்கிறார். "இதற்கு முன்னர் அவர் முன்னெடுத்தக் கட்டாய ராணுவ அணி சேர்க்கை தோல்வியில் முடிந்தது. எனவே இம்முறை அவரது முயற்சிகளுக்கு வடகொரிய வீரர்க உதவுவார்கள்,” என்று நம்புகிறார்.
"யுக்ரேன் ராணுவ வீரர்களுடன் ஒப்பிடும்போது ரஷ்ய வீரர்கள் எண்ணிக்கையில் குறைந்து வருகிறார்கள் என்று புதின் நினைக்கிறார். எனவே, வடகொரிய வீரர்களை போரில் ஈடுபடுத்துவது சிறந்த வழியாக கருதுகிறார்,” என்றார்.
ஆனால், யுக்ரேன் அதிபர் இரு நாட்டின் கூட்டணி பற்றி கவலையை வெளிப்படுத்தியுள்ளார். ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையிலான மோதல் களத்தில் இதுவரை மேற்கத்திய நாடுகளின் வீரர்கள் களமிறங்கவில்லை.
ரஷ்யாவுக்காக நூற்றுக்கணக்கான வடகொரியப் படைகள் நிலைநிறுத்தப்பட்டதற்கான சான்றுகள் வெளிப்படும் நிலையில், போர்க்களத்தில் நுழையும் வெளிநாட்டு (மேற்கத்திய) வீரர்கள் பற்றி புதின் அதிகமாகக் கவலைப்பட வாய்ப்பில்லை.