அமெரிக்காவில் போலி ஆவணங்களை அளித்து, முதலீட்டாளர்களை ஏமாற்றி 1 பில்லியன் டாலர் (ரூ.8,300 கோடி) மோசடி செய்த மருத்துவரின் மகனான இந்திய வம்சாவளி தொழிலதிபர் ரிஷி ஷாவுக்கு ஏழரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளி தொழிலதிபரான ரிஷி ஷா(38) அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோவில் வசித்து வந்தார். தனது அவுட்கம் ஹெல்த் நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர்( ரூ 8,300 கோடி) மோசடித் திட்டத்தால் தற்போது ஏழரை ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளார்.
இவரின் அவுட்கம் ஹெல்த் நிறுவனம் புதுமையான முறையில் விளம்பரம் செய்வதன் வாயிலாக நோயாளிகள் மற்றும் மருந்து நிறுவனங்களுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தி மருந்து நிறுவனங்களின் வருவாயை அதிகரிக்க முடியும் என்று கூறியது. இதற்காக மருத்துவமனைகள் மற்றும் டாக்டர்களின் அறையில் மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகளை விளம்பரங்களாக ஒளிபரப்பி வந்தது. இதையடுத்து பிரபலமான பல மருத்துவ நிறுவனங்கள் விளம்பரங்களுக்கு பணம் தந்தனர். நிறுவனத்தின் வளர்ச்சியை கண்டு முன்னணி முதலீட்டு நிறுவனங்கள் அவுட்கம் ஹெல்த்தில் முதலீடு செய்தன.
இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு அவுட்கம் ஹெல்த் நிறுவனம் போலி ஆவணங்களைத் தயாரித்து, 1 பில்லியன் டாலர்( ரூ 8,300 கோடி) அளவுக்கு முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்துள்ளதை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் அம்பலப்படுத்தியது. இந்நிறுவனத்தின் முதலீட்டாளர்களான கோல்டுமேன் சாக்ஸ், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் உள்ளிட்டவையும் இந்த மோசடியில் பணத்தை இழந்துள்ளன.
இதையடுத்து, அந்நிறுவனத்தின் நிறுவனர் ரிஷி ஷா, இணை நிறுவனர்களான பிராட் பர்டி, ஷ்ரதா அகர்வால் ஆகியோர் மீது அமெரிக்கா நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கின் சாட்சியங்களை விசாரித்த நீதிபதி தாமஸ் டர்கின், குற்றம் சாட்டப்பட்டவர்களின் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தினார்.
இதையடுத்து, ரிஷி ஷாவுக்கு ஏழரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன் நிறுவனத்தின் இணை நிறுவனர்களான பிராட் பர்டிக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்களும், ஷ்ரதா அகர்வாலுக்கு மூன்று ஆண்டுகளும் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
மருத்துவரின் மகனான ரிஷி ஷா 2005-ம் ஆண்டு ஹார்வர்டின் கோடைகால பொருளாதாரத் திட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பின் தனது சொந்தத் தொழிலைத் தொடங்குவதற்கு முன் வடமேற்கு பல்கலைக்கழகத்தில் ஒரு வருடம் படித்தார். 2006-ம் ஆண்டு , அவர் அவுட்கம் ஹெல்த் நிறுவனத்தை நிறுவினார், இது முன்பு சூழல் மீடியா ஹெல்த் என்று அறியப்பட்டது.
அடுத்த ஆண்டில், ஷ்ரதா அகர்வால் இந்த முயற்சியில் அவருடன் இணைந்தார், மேலும் அவர்கள் இருவரும் கணிசமான முதலீடுகள் மற்றும் வாடிக்கையாளர்களை ஈர்த்து, அவுட்கம் ஹெல்த் சாதனையை பதிவு செய்தனர்