திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தின் விலை உயர்கிறதா?
26 Jun,2024
திருமலை திருப்பதி தேவஸ்தானம் லட்டின் விலையையும் சிறப்பு தரிசன கட்டணத்தையும் உயர்த்துகிறதா என்ற குழப்பம் பக்தர்கள் மத்தியில் உழன்று வருகிறது. இதுகுறித்து தேவஸ்தானமே விளக்கமளித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபாதையில் செல்லும் திவ்ய தரிசனம், இலவச தரிசனம், ரூ 300 சிறப்பு தரிசனம் உள்ளிட்டவைகளின் மூலம் வெங்கடாஜலபதியை தரிசிக்கலாம். ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் 3 மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் கிடைக்கிறது.
1990 களில் எல்லாம் ரூ 50 கட்டண தரிசனம் நடைமுறையில் இருந்தது. இது பின்னர் நீக்கப்பட்டு ரூ 300 ஆக மாற்றப்பட்டது. இந்த ரூ 50 தரிசன டிக்கெட்டை திநகர் வெங்கட்நாராயணா சாலையில் எடுக்கலாம். இல்லாவிட்டால் மேல் திருப்பதி, கீழ் திருப்பதியிலேயே சில இடங்களில் விற்பனை செய்யப்பட்டு கைகளில் டேக் ஒட்டப்படும். அதில் குறிப்பிட்ட தேதி, நேரத்தில் நாம் வரிசையில் நின்று ஏழுமலையானை தரிசிக்கலாம். இந்த நிலையில் ரூ 300 தரிசனத்திற்காக ஒவ்வொரு மாதமும் 23 ஆம் தேதி தேவஸ்தான நிர்வாகம் முன்பதிவு டிக்கெட்டுகளை வெளியிடுகிறது. இதில் தரிசனம் செய்தால் 2 லட்டுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதல் லட்டு வேண்டும் என்றால் லட்டு கவுன்ட்டர்களில் ரூ 50 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இந்த நிலையில் திருப்பதியில்
ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட் விலையையும் லட்டு பிரசாதத்தின் விலையையும் ஆந்திராவில் புதிதாக பொறுப்பேற்ற சந்திரபாபு நாயுடு அரசு உயர்த்தியதாக தகவல்கள வெளியாகின. இதை நம்பிய பக்தர்கள் கவலைத் தெரிவித்தனர். இதையடுத்துதான் இது போலியான தகவல் என தெரியவந்தது. இது போன்ற செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. சில இடைத்தரகர்கள், சுற்றுலாத் துறையின் இணையதளங்களை பயன்படுத்தி அதன் மூலம் டிக்கெட்டுகளை பெற்று தருவதாக ஏமாற்றி பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூலித்து வருவதாக புகார்கள் எழுந்தன.
இது போன்ற செயல்களில் ஈடுபட்டு அப்பாவி பக்தர்களை ஏமாற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் லட்டு பிரசாத விலையிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. https://ttdevasthanams.ap.gov.in என்ற தேவஸ்தானத்தின் இணையத்தில் மட்டுமே தரிசன டிக்கெட்டுகளை பக்தர்கள் முன்பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம். பல்வேறு மாநில சுற்றுலாத் துறைக்காக குறிப்பிட்ட அளவிலான தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் பக்தர்கள் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்துக் கொள்ளலாம்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஸ்ரீவாரி மெட்டுவில் திவ்ய தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் 1200 ஆவது படியில் ஸ்கேன் செய்ய வேண்டும். அப்படி ஸ்கேன் செய்யும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்யலாம். திவ்ய தரிசன டோக்கன்களை ஸ்கேன் செய்யாத பக்தர்கள், திருமலையை அடைந்ததும், தரிசன வரிசையில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே பக்தர்கள் இந்த நடைமுறையை கவனித்து அதன்படி சுவாமி தரிசனத்திற்கு வர வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.