
குந்தவியின் கலக்கம்.8
புஷ்பேஷு ஜாதி புருஷேஷு விஷ்ணு; நாரீஷுரம்பா நகரேஷு காஞ்சி" என்று வடமொழிப் புலவர்களால் போற்றப்பட்ட காஞ்சிமா நகரின் மாடவீதியிலே குந்தவிதேவி பல்லக்கில் சென்று கொண்டிருந்தாள். திருக்கோயில்களுக்குச் சென்று உச்சிகால பூஜை நடக்கும்போது சுவாமி தரிசனம் செய்து விட்டு வரும் நோக்கத்துடன் அவள் சென்றாள். ஆனால் அவளுடைய உள்ளம் மட்டும் ஒரு வாரத்துக்கு முன்பு மாமல்லபுரத்தில் விஜயதசமியன்று கண்ட கோலாகலக் காட்சியிலேயே ஈடுபட்டிருந்தது.
அன்று ஆரம்பித்த திருப்பணிகளில் உலகம் உள்ள வரையில் தன் தந்தையின் புகழ் குன்றாதிருக்குமல்லவா? என்று அவள் எண்ணமிட்டாள். இப்படிப்பட்ட தந்தைக்குப் புதல்வியாய்ப் பிறக்கத் தான் பாக்கியம் செய்திருக்க வேண்டுமென்று நினைத்தாள். இத்தகைய சக்கரவர்த்தியின் ஆட்சியில் வாழும் பிரஜைகள்தாம் எவ்வளவு பாக்கியம் பண்ணியவர்கள் என்ற எண்ணமும் தோன்றியது. இப்படிப்பட்ட சிந்தனைகளில் ஆழ்ந்தவளாய்ப் பல்லக்கிலே போய்க்கொண்டிருக்கையில், திடீரென்று வீதியில் ஒருமதில் சுவரின் திருப்பத்தில் அபூர்வமான காட்சி ஒன்றைக் கண்டாள். சகல இராஜ லட்சணங்களும் பொருந்திக் களை ததும்பும் முகத்தினனான ஓர் இளங்குமரன் ஒரு குதிரைமீது வந்து கொண்டிருந்தான். அவனுடைய உடம்பையும் கைகளையும் குறுக்கும் நெடுக்குமாய் இரும்புச் சங்கிலியினால் பிணைத்திருந்தார்கள். குதிரையின் இரு பக்கத்திலும் முன்னாலும் பின்னாலும் அந்தச் சங்கிலிகளைப் பிடித்துக் கொண்டு போர் வீரர்கள் சிலர் விரைந்து நடந்து வந்தார்கள்.
அந்த இளங்குமரன் மிகவும் களைத்துப்போன தோற்றமுடையவனாயிருந்தாலும், அவனுடைய முகத்தில் கொஞ்சமாவது அதைரியத்தின் அறிகுறி காணப்படவில்லை. அஞ்சா நெஞ்சங் கொண்ட தீர புருஷனாகவே தோன்றினான். "என் உடம்பைத்தானே சங்கிலிகளால் பிணைக்க முடியும்? என் உள்ளத்தை யாராலும் சிறைப்படுத்த முடியாதல்லவா?" என்று அலட்சியத்துடன் கேட்பதுபோல் இருந்தது அவனுடைய திருமுகத்தின் தோற்றம்.
இந்தக் காட்சியைக் கண்டதும் குந்தவி தேவியின் விசாலமான நயனங்கள் ஆச்சரியத்துடன் இன்னும் அதிகமாக விரிந்தன. அதே சமயத்தில் அந்த இளைஞனும் சக்கரவர்த்தியின் குமாரியைப் பார்த்தான். சொல்லுக் கெட்டாத அவளுடைய திவ்ய சௌந்தரியம் ஒரு கணநேரம் அவனைத் திகைப்படைந்து நிற்கும்படி செய்திருக்க வேண்டும். அடுத்த நிமிஷத்தில் பல்லக்கும் குதிரையும் ஒன்றையொன்று தாண்டிச் சென்று விட்டன. குந்தவி பல்லக்கிலிருந்த வண்ணம் இரண்டொரு தடவை திரும்பித் திரும்பிப் பார்த்தாள். குதிரைமீது சங்கிலியால் கட்டுண்டிருந்த அந்த இளங்குமரனும் தன்னைப் போலவே ஆவல் கொண்டவனாய்த் திரும்பிப் பார்ப்பான் என்று அவள் எதிர்பார்த்தாளோ என்னவோ, தெரியாது. ஆனால் அந்தக் குமரன் மட்டும் தலையை ஓர் அணுவளவு கூடப் பின்புறமாகத் திருப்பவில்லை. திருப்ப முடியாதபடி அவனைப் பிணித்திருந்த சங்கிலிகள்தான் தடுத்தனவோ, அல்லது அவனுடைய மனத்தின் திட சங்கற்பந்தான் அவ்விதம் திரும்பிப் பார்க்காத வண்ணம் தடை செய்ததோ அதுவும் நமக்குத் தெரியாது.
குந்தி தேவியின் திவ்ய சௌந்தரியத்தைப் போலவே அந்தச் சக்கரவர்த்தி திருமகளின் தெய்வ பக்தியும் அந்நாளில் தேசப் பிரசித்தமாயிருந்தது. சாதாரணமாய் அவள் சிவன் கோயிலுக்குப் போனாலும், பெருமாள் கோயிலுக்குப் போனாலும் பராசக்தியின் சந்நிதிக்குச் சென்றாலும், அந்தந்தத் தெய்வங்களின் தியானத்திலே ஈடுபட்டுத் தன்னை மறந்துவிடுவது வழக்கம். ஆனால் இன்றைய தினம் குந்தவியின் மனம் அவ்விதம் சலனமற்ற தியானத்தில் ஈடுபடவில்லை. தெய்வ சந்நிதானத்தில் நின்றபோது கூட, கட்டுண்டு குதிரை மேல் வீற்றிருந்த இளங்குமரனுடைய முகம் வந்து நின்றது. அவள் எவ்வளவோ முயன்றும் அந்த முகத்தை மறக்க முடியவில்லை. இது வரையில் அவள் அனுபவித்தறியாத இந்தப் புதிய அனுபவமானது அவளுக்கு ஒருவித அபூர்வ இன்பக் கிளர்ச்சியையும் அதே சமயத்தில் பயத்தையும் உண்டு பண்ணிற்று!
ஒருவாறு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு குந்தவி தேவி அரண்மனைக்குத் திரும்பினாள். திரும்புங் காலையில் மனத்தை அந்த இளங்குமரன் மேல் செல்லாமல் வேறு நினைவில் செலுத்தும் முயற்சியையே அவள் விட்டு விட்டாள். "அவ்வளவு ராஜ லக்ஷணங்கள் பொருந்திய இளங்குமரன் யாராயிருக்கலாம்? அவனை எதற்காகச் சங்கிலியால் பிணைத்திருக்கிறார்கள்? எங்கே அழைத்துச் செல்கிறார்கள்? அவன் அத்தகைய குற்றம் என்னதான் செய்திருப்பான்?" என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கினாள். திடீரென்று ஒரு ஞாபகம் வந்தது. "உறையூர் இளங்குமாரன் ஏதோ சக்கரவர்த்திக்கு விரோதமாகக் கலகம் செய்யப் போகிறான் என்று மாமல்லபுரத்துக்கு ஓலை வந்ததல்லவா? அது விஷயமாக முன்னமே ஏற்பாடு செய்தாகிவிட்டது என்று சக்கரவர்த்தி மறுமொழி தந்தாரல்லவா? அந்தச் சோழ இராஜ குமாரன்தானோ என்னவோ இவன்?" இந்த எண்ணம் தோன்றியதும் குந்தவிக்கு அக்குமரன் மேல் கோபம் உண்டாயிற்று. `என்ன அகந்தை, என்ன இறுமாப்பு அவனுக்கு? எவ்வளவு பெரிய துரோகமான காரியத்தைச் செய்துவிட்டு, எவ்வளவு அலட்சியமாய்க் கொஞ்சங்கூடப் பயப்படாமலும் வெட்கப்படாமலும் இறுமாந்து உட்கார்ந்திருக்கிறான்! நரசிம்ம பல்லவேந்திரருக்கு எதிராகக் கலகம் செய்யும்படி அவ்வளவு வந்துவிட்டதா அவனுக்கு? எத்தனையோ தூர தூர தேசங்களில் உள்ள ஜனங்கள் எல்லாரும், நரசிம்ம சக்கரவர்த்தியின் வெண்கொற்றக் குடையின் நிழலில் வாழ்வதற்குத் தவஞ் செய்கிறார்களே! செண்பகத் தீவின் வாசிகள் இதற்காகத் தூது அனுப்பியிருக்கிறார்களே! இந்த அற்பச் சோழநாட்டு இளவரசனுக்கு என்ன வந்துவிட்டது? ஆமாம், இவன் மட்டும் கலகம் செய்த இளவரசனாயிருந்தால் தந்தையிடம் சொல்லிக் கடுமையான தண்டனை விதிக்கச் செய்ய வேண்டும்! அப்போது தான் புத்தி வரும்.'
இவ்வாறு எண்ணிய குந்தவியின் மனம் மறுபடியும் சஞ்சலம் அடைந்தது. "ஐயோ பாவம்! முகத்தைப் பார்த்தால் அப்படியொன்றும் கெட்டவனாகத் தோன்றவில்லையே! அவன் தானாக ஒன்றும் செய்திருக்க மாட்டான். ஒருவேளை யாராவது கெட்ட மனிதர்கள் பக்கத்தில் இருந்து தூண்டி விட்டிருப்பார்கள். அவர்களைப் பிடித்துத் தண்டிக்க வேண்டுமேயன்றி, இந்தச் சுகுமாரனைக் கடுமையாகத் தண்டிப்பதில் என்ன பயன்? அவனுடைய மார்பையும், தோள்களையும், கைகளையும் பிணித்திருக்கும் இரும்புச் சங்கிலிகள் அந்த மிருதுவான தேகத்தை எப்படித் துன்புறுத்துகின்றனவோ? நல்ல புத்தி சொல்லி, எச்சரிக்கை செய்து; அவனை விட்டுவிட்டால் என்ன? - அப்பாவிடம் இராத்திரி சொல்ல வேண்டும். ஆனால் அவருக்குத் தெரியாத விஷயமா? "தர்ம ராஜாதி ராஜன்" என்று புகழ் பெற்றவராயிற்றே? நியாயமும் தர்மமும் தவறி அவர் ஒன்றும் செய்யமாட்டார். இந்த இளங்குமரனை மன்னித்துத்தான் விடுவார்...." இப்படியெல்லாம் கொந்தளித்துக் கொண்டிருந்த உள்ளத்துடன் குந்தவி தேவி அரண்மனையை அடைந்தாள். சூரியன் எப்போது அஸ்தமிக்கும்? தகப்பனார் எப்போது ராஜசபையிலிருந்து அரண்மனைக்குத் திரும்பி வருவார் என்று எதிர்பார்த்த வண்ணம் ஒவ்வொரு வினாடியையும் ஒவ்வொரு யுகமாகக் கழித்துக் கொண்டிருந்தாள்.
தந்தையும் மகளும்!.9
குந்தவி தாயில்லாப் பெண். அவளுடைய அன்னையும் பாண்டிய ராஜகுமாரியும் நரசிம்மவர்மரின் பட்ட மகிஷியுமான வானமாதேவி, குந்தவி ஏழு வயதுக் குழந்தையாயிருந்தபோதே சுவர்க்கமடைந்தாள். இந்தத் துக்கத்தை அவள் அதிகமாக அறியாத வண்ணம் சில காலம் சிவகாமி அம்மை அவளைச் செல்லமாய் வளர்த்து வந்தாள். இந்தச் சிவகாமி பிரசித்தி பெற்ற ஆயனச் சிற்பியின் மகள். நரசிம்மவர்மரால் வாதாபியிலிருந்து சிறை மீட்டு வரப்பட்டவள், பட்ட மகிஷியின் மரணத்துக்குப் பிறகு நரசிம்மவர்மர் சிவகாமியை மணம் புரிந்து கொள்வாரென்று சில காலம் பேச்சாயிருந்தது, ஆனால் அவ்விதம் நடக்கவில்லை. சில வருஷகாலத்துக்கெல்லாம் சிவகாமி தேவியும் சொர்க்கம் புகுந்து விட்டாள்.
பிறகு, சக்கரவர்த்தியே குந்தவிக்குத் தாயும் தகப்பனுமாயிருந்து அவளை வளர்க்க வேண்டியதாயிற்று. அந்தப்புரத்தில் குந்தவிக்குப் பாட்டிமார்கள்- மகேந்திரவர்மருடைய பத்தினிகள் சிலர் இருந்தனர். ஆனால் அவர்களுக்கும் குந்தவிக்கும் அவ்வளவாக மனப் பொருத்தம் ஏற்படவில்லை. குந்தவி தாயாரைக் குறித்து "தெற்கத்தியாள்" என்று அவர்கள் குறை கூறியதையும் சிவகாமி தேவியைப் பலவிதமான நிந்தை செய்ததையும் குந்தவி குழந்தைப் பருவத்தில் கேட்டிருந்தாள். இதனாலேயே பாட்டிமார்களிடத்தில் அவளுக்குப் பற்றுதல் உண்டாகவில்லை. குந்தவியின் நடை உடை பாவனைகளும், அவள் எதேச்சையாகச் செய்த காரியங்களும் அந்தப் பாட்டிமார்களுக்குப் பிடிக்கவில்லை. நரசிம்மவர்மர் இந்தப் பெண்ணுக்கு ரொம்பவும் இடங்கொடுத்துக் கெடுத்து வருகிறார் என்ற குறையும் அவர்களுக்கு உண்டு.
இக்காரணங்களினால் குந்தவிக்குத் தன் தந்தையிடமுள்ள இயற்கையான பாசம் பன்மடங்கு வளர்ந்திருந்தது. அப்பாவுடன் இருக்கும்போதுதான் அவளுக்குக் குதூகலம்; அவருடன் வார்த்தையாடுவதில்தான் அவளுக்கு உற்சாகம். அவருடன் சண்டை பிடிப்பதில்தான் அவளுக்கு ஆனந்தம். அவர் தன்னை உடன் அழைத்துப் போகாமல் ராஜரீகக் காரியங்களுக்காக வெளியூர்களுக்குப் போயிருந்தால், அவளுக்கு ஒரு நாள் போவது ஒரு யுகம் போவது போலிருக்கும்.
சக்கரவர்த்திக்கோ என்றால், - ஏன்? - அவருடைய பிராணனே குந்தவியாக உருக்கொண்டு வெளியில் நடமாடுகிறது என்று கருதும்படி இருந்தது. அவருடைய விசால இருதயமானது ஓரானொரு காரணத்தினால் பல ஆண்டுக் காலம் வறண்டு பசையற்றுப் பாலைவனமாயிருந்தது. அப்படிப்பட்ட இருதயத்தில் குந்தவியின் காரணமாக மீண்டும் அன்பு தளிர்த்து ஆனந்தம் பொங்கத் தொடங்கியது. குந்தவியின் ஒவ்வொரு சொல்லும், செயலும், நோக்கும், சமிக்ஞையும் சக்கரவர்த்திக்குப் புளகாகிதம் உண்டாக்கின.
தந்தையின் வரவை எதிர்நோக்கிக் குந்தவி தேவி அரண்மனை உப்பரிகையில் நிலா மாடத்தில் உட்கார்ந்திருந்தாள். பௌர்ணமிக்குப் பிறகு மூன்று நாள் ஆகியிருக்கலாம். கிழக்கு அடிவானத்தில் வரிசையாக உயர்ந்திருந்த பனை மரங்களுக்கு நடுவில், சிறிது குறைந்த சந்திரன், இரத்தச் சிவப்பு ஒளியுடன் உதயமாகிக் கொண்டிருந்தான். மற்ற நாட்களாயிருந்தால் அழகு மிகுந்த இந்த வானக் காட்சியின் வனப்பில் ஈடுபட்டு மெய்ம்மறந்திருப்பாள். ஆனால், இன்று இரவு அவளுக்கு எதிலுமே மனம் செல்லவில்லை. வீதியில் குதிரைமீது வைத்துச் சங்கிலியால் பிணைத்துக் கொண்டு போகப்பட்ட இராஜகுமாரனுடைய ஞாபகமாகவே அவள் இருந்தாள். அவனைப் பற்றி விசாரிப்பதற்காகவே தந்தையின் வருகையை வழக்கத்தைவிட அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.
கடைசியாக, நரசிம்மவர்மரும் வந்து சேர்ந்தார். குந்தவி அவரை ஓடி வரவேற்று, அவருடைய விசாலமான இரும்புத் தோள்களைத் தன் இளங் கரங்களினால் கட்டிக் கொண்டு தொங்கினாள். "ஏன் அப்பா, இன்றைக்கு இத்தனை நேரம்?" என்று கேட்டாள். என்றுமில்லாத அவளுடைய பரபரப்பையும் ஆர்வத்தையும் பார்த்து நரசிம்மவர்மர் ஆச்சரியப்பட்டுப் போனார். அப்படியொன்றும் நேரமாகிவிடவில்லை அம்மா! தினம் போலத் தானே வந்திருக்கிறேன். ஏதாவது விசேஷம் உண்டா?" என்று கேட்டார்.
குந்தவி ஏதோ சொல்ல ஆரம்பித்தவள் சட்டென்று நிறுத்திக் கொண்டாள். "ஒரு விசேஷம் இருக்கிறது அப்பா! ஆனால் இப்போது சொல்லமாட்டேன். நீங்கள் முதலில் சொல்லுங்கள், சபையில் ஏதாவது விசேஷம் உண்டா?" என்று கேட்டாள்.
"ஆமாம்; உண்டு இலங்கையிலிருந்து இன்றைக்குச் செய்தி வந்தது; அங்கே நடந்த பெரும் போரில் நமது சைன்யங்கள் மகத்தான வெற்றியடைந்தனவாம். `இலங்கை மன்னன் சமாதானத்தைக் கோருகிறான்; என்ன செய்யட்டும்?' என்று உன் தமையன் ஓலை அனுப்பியிருக்கிறான்." "ரொம்ப சந்தோஷம், அப்பா! அப்படியானால் அண்ணா சீக்கிரம் திரும்பி வந்து விடுவானோ இல்லையோ?" "கொஞ்ச காலம் கழித்துத்தான் வருவான். மதுரையில் உன் மாமாவுக்குக் கொஞ்ச நாளாகத் தேக அசௌகர்யமாயிருக்கிறதாம்; அங்கே போய்க் கொஞ்ச காலம் இருந்து விட்டு வரச் சொல்லியிருக்கிறேன். நீயும் வேணுமானால் மதுரைக்குப் போய் வருகிறாயா, குழந்தாய்! உன் மாமா உன்னைப் பார்க்க வேணுமென்று எவ்வளவோ ஆசைப்படுகிறாராம்." "அதெல்லாம் முடியாது; நான் உங்களை விட்டுப் போகமாட்டேன். இருக்கட்டும். இன்னும் ஏதாவது விசேஷம் உண்டா, அப்பா!" "உண்டு; சோழ நாட்டில்" "சோழநாட்டில்" என்றதும் குந்தவியின் உடம்பில் படபடப்பு உண்டாயிற்று. இதைக் பார்த்த சக்கரவர்த்தி மிகவும் வியப்படைந்தவராய் "என்ன குந்தவி! உனக்கு என்ன உடம்பு?" என்று கேட்டார். "ஒன்றுமில்லை, அப்பா! சோழ நாட்டில் என்ன விசேஷம்! சொல்லுங்கள்" என்றாள் குந்தவி.
--- "சோழ நாட்டில் காழி என்னும் ஊரில் ஒரு இளம் பிள்ளை தெய்வ சாந்நித்யம் பெற்று மகா ஞானியாய் விளங்குகிறாராம். சிவபெருமான் பேரில் தீந்தமிழ்ப் பாடல்களைத் தேனிசையாய்ப் பொழிகிறாராம். தீராத வியாதிகள் எல்லாம் அவர் கையினால் திருநீறு வாங்கி இட்டுக் கொண்டால் தீர்ந்து விடுகிறதாம். ஞானசம்பந்தர் என்று பெயராம்!"
"நன்றாயிருக்கிறது போங்கள். யமனுக்கு அப்படி ஒரு விரோதி கிளம்பியிருக்கிறாரா? அந்தப் பிள்ளை திருநீறு கொடுத்து வியாதிகள் எல்லாவற்றையும் தீர்த்துக் கொண்டு போனால், யமலோகமல்லவா சூனியமாய்ப் போய்விடும்? நீங்களுந்தான் இப்போதெல்லாம் யுத்தம் செய்வதையே நிறுத்திவிட்டீர்கள்!" என்றாள் குந்தவி. "எல்லாம் உன்னாலேதான்! நீ என் கழுத்தைக்கட்டிக் கொண்டு விடமாட்டேனென்றால், நான் யுத்தத்துக்குப் போவது எப்படி? உன்னை வேறொருவன் கழுத்தில் கட்டிவிட்டால், அப்புறம்...." "அப்புறம் அவன் பாடு அதோ கதிதான்! அது கிடக்கட்டும், அப்பா! இன்றைக்கு வேறு விசேஷம் ஒன்றுமில்லையா!" என்றாள் குந்தவி. "ஆமாம், இன்னும் ஒரே ஒரு விசேஷம் இருக்கிறது. கடல் மல்லைக்கு நாம் போயிருந்தபோது உறையூரிலிருந்து ஒரு தூதன் வந்தானே, ஞாபகம் இருக்கிறதா? நீ கூட விஷயத்தைக் கேட்டு விட்டு, `அந்தச் சோழ ராஜகுமாரனை நன்றாய்த் தண்டிக்க வேண்டும்' என்று சொன்னாயே? அவனைச் சிறைப்பிடித்து இன்றைக்கே கொண்டு வந்துசேர்த்தார்கள்..." "அப்பா! அவனைச் சங்கிலிகளால் கட்டிக் குதிரை மேல் வைத்துக் கொண்டு வந்தார்களா?" என்று குந்தவி கேட்டாள். "ஆமாம்; உனக்கு எப்படித் தெரிந்தது" என்றார் சக்கரவர்த்தி. "மத்தியானம் கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்தபோது வீதியில் பார்த்தேன்." குந்தவியிடம் வழக்கமில்லாத படபடப்பு அன்று ஏற்பட்டிருந்ததின் காரணத்தை நரசிம்மவர்மர் அப்போது அறிந்து கொண்டார். "ஒருவேளை அவனாய்த்தானிருக்கும். அது போகட்டும். குழந்தாய்! நமது அப்பர் பெருமானின் பதிகம் ஒன்றைப் பாடு பார்க்கலாம்!" என்றார் சக்கரவர்த்தி. "அப்பா இந்த இராஜ குமாரனை இராத்திரி எங்கே வைத்திருப்பார்கள்?" என்று குந்தவி கேட்டாள். "வேறு எங்கே வைத்திருப்பார்கள்? காராக்கிரகத்தில் வைத்திருப்பார்கள்!" "ஐயையோ!" "என்ன குழந்தாய்! எதைக் கண்டு பயப்படுகிறாய்?" என்று நரசிம்மவர்மர் தூக்கி வாரிப் போட்டாற்போல் எழுந்து நாலாபுறமும் பார்த்தார். குந்தவி அவரைக் கீழே அமர்த்தி, "ஒன்றுமில்லை, அப்பா! காராக்கிரகத்திலிருந்து அந்த ராஜ குமாரன் தப்பித்துக் கொண்டு போய்விட்டால் என்ன செய்கிறது என்று பயந்தேன்!" என்றாள். "இவ்வளவுதானே!" என்று சக்கரவர்த்தி புன்னகை செய்து "அந்த மாதிரியெல்லாம் பயப்படாதே! பல்லவ ராஜ்யாதிகாரம் இன்னும் அவ்வளவு கேவலமாய்ப் போய்விடவில்லை. விக்கிரமன் தப்ப முயன்றானானால் அந்த க்ஷணமே பல்லவ வீரர்களின் பன்னிரண்டு ஈட்டி முனைகள் அவன் மீது ஏக காலத்தில் பாய்ந்து விடும்!" என்று சொன்னார்.
இந்தக் கடூரமான வார்த்தைகளைக் கேட்டு, குந்தவியின் உடம்பு இன்னும் அதிகமாகப் பதறிற்று. "அப்பா! நான் ஒன்று சொல்கிறேன், கேட்கிறீர்களா?" என்றாள் குந்தவி. "நான் கேட்காவிட்டால் நீ என்னை விடத்தான் போகிறாயா?" என்றார் சக்கரவர்த்தி. "அந்த இராஜ குமாரனுடைய முகத்தைப் பார்த்தால் அப்படியொன்றும் பொல்லாதவனாகத் தோன்றவில்லை. அப்பா! யாரோ துஷ்ட மனிதர்கள் அவனுக்குத் துர்ப்போதனை செய்து இப்படி அவனை உங்களுக்கு விரோதமாய்க் கிளப்பி விட்டிருக்க வேண்டும்."
"நீ சொல்லுவது ரொம்ப வாஸ்தவம். நான் கூட அவ்வாறு தான் கேள்விப்பட்டேன். யாரோ ஒரு சிவனடியார் அடிக்கடி இந்த விக்கிரமனையும் அவனுடைய தாயாரையும் போய்ப் பார்ப்பதுண்டாம். அந்த வேஷதாரி தான் விக்கிரமனை இப்படிக் கெடுத்திருக்க வேண்டுமென்று தகவல் கிடைத்திருக்கிறது." "பார்த்தீர்களா? நான் எண்ணியது சரியாய்ப் போயிற்றே! உறையூரில் என்னதான் நடந்ததாம்? பெரிய சண்டை நடந்ததோ? ரொம்பப் பேர் செத்துப் போனார்களோ?"
"பெரிய சண்டையுமில்லை; சின்னச் சண்டையுமில்லை; இந்த அசட்டுப் பிள்ளை ஏமாந்து அகப்பட்டுக் கொண்டதுதான் லாபம். மாரப்ப பூபதி என்று இவனுக்கு ஒரு சித்தப்பன் இருக்கிறான். அவன் பெரிய படைகளைத் திரட்டிக்கொண்டு வருகிறேன் என்று இந்த பிள்ளையிடம் ஆசை காட்டியிருக்கிறான். அவன் அன்றைக்குக் கிட்டவே வரவில்லை. அதோடு நமது தளபதி அச்சுதவர்மரிடம் சமாசாரத்தையும் தெரியப்படுத்தி விட்டான். அன்று பல்லவ வீரர்கள் ஆயத்தமாய் இருந்தார்கள். வெளியூர்களிலிருந்து வந்த சில ஜனங்களை ஊருக்கு வெளியிலேயே வளைத்துக் கொண்டு விரட்டி விட்டார்கள். விக்கிரமனோடு கடைசியில் சேர்ந்தவர்கள் ஒரு கிழக் கொல்லனும், ஒரு படகோட்டியும் இன்னும் நாலைந்து பேருந்தான். கிழவன் அங்கேயே செத்து விழுந்து விட்டான். மற்றவர்களையெல்லாம் சிறைப்படுத்தி விக்கிரமனை மட்டும் என் கட்டளைப்படி இங்கே அனுப்பினார்கள்.
"ஐயோ பாவம்!" என்றாள் குந்தவி. "எதற்காகப் பரிதாப்படுகிறாய், அம்மா! இராஜத் துரோகம் ஜயிக்கவில்லையே என்று பரிதாபப்படுகிறாயா?" "இல்லை, இல்லை, இந்த இராஜ குமாரன் இப்படி ஏமாந்து போய்விட்டானே என்றுதான். ஆமாம் அப்பா! இந்த மாதிரி நடக்கப்போகிறதென்று உங்களுக்கு முன்னாலேயே தெரிந்திருக்கிறதே அது எப்படி?" "என்னிடந்தான் மந்திர சக்தி இருக்கிறது என்று உனக்குத் தெரியுமே? ஆமாம், அப்பர் பெருமானின் பதிகம் பாடப் போகிறாயா, இல்லையா?" என்று மீண்டும் சக்கரவர்த்தி கேட்டுப் பேச்சை மாற்ற முயன்றார். "அப்பா எனக்கு ஒன்று தோன்றுகிறது. இந்தத் தடவை மட்டும் அந்த இராஜகுமாரனை நீங்கள் மன்னித்து விட்டால்...."
"என்ன சொன்னாய் குந்தவி! பெண்புத்தி என்பது கடைசியில் சரியாய்ப் போய்விட்டதே! அன்றைக்கு அவனைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றாயே! அதனால்தான் பெண்களுக்கு இராஜ்ய உரிமை கிடையாதென்று பெரியவர்கள் வைத்திருக்கிறார்கள்..." "சுத்தப் பிசகு! பெண்களுக்கு இராஜ்ய உரிமை இருந்தால் உலகத்தில் சண்டேயேயிராது. அந்த இராஜ குமாரனை மட்டும் நான் சந்தித்துப் பேசினேனானால் அவனுடைய மனத்தை மாற்றி விடுவேன். முடியுமா முடியாதா என்று பார்க்கலாமா, அப்பா?" "முடியலாம்! குழந்தாய் முடியலாம். அவனுடைய மனத்தை மாற்றுவது உன்னால் முடியாத காரியம் என்று நான் சொல்லவில்லை. உனக்கு முன்னால் எத்தனையோ ஸ்திரீகள் புத்திசாலிகளை அசடுகளாக்கியிருக்கிறார்கள். வைராக்கிய சீலர்களைப் பைத்தியமாக்கியிருக்கிறார்கள். வீரர்களைக் கோழைகளாக்கியிருக்கிறார்கள். இதற்கு மாறாக சாதாரண மனுஷ்யர்களைப் புத்திசாலிகளாகவும், வைராக்கிய புருஷர்களாகவும், வீரர்களாகவும் செய்த ஸ்திரீகளும் இருந்திருக்கிறார்கள். பெண் குலத்துக்கு இந்தச் சக்தி உண்டு. உண்மைதான் நீ நினைத்தாயானால், விக்கிரமனைச் சுதந்திரம் என்ற பேச்சையே மறந்துவிடும்படி செய்து விடலாம். ஆனால் உன்னுடைய சாமர்த்தியத்தை நீ கொஞ்சம் முன்னாலேயே காட்டியிருக்க வேண்டும். அவன் குற்றம் செய்வதற்கு முன் உன் பிரயத்தனத்தைச் செய்திருக்க வேண்டும். இனிமேல் பிரயோஜனமில்லை அம்மா! குற்றவாளியைத் தண்டித்தே தீரவேண்டும். இன்று விக்கிரமனைச் சும்மா விட்டு விட்டால் நாளைக்கு ஒவ்வொரு ஊரிலும் ஒருவன் கலகம் செய்யக் கிளம்புவான். அப்புறம் இராஜ்யம் போகிற வழி என்ன?" இந்த வார்த்தைப் புயலில் அகப்பட்ட குந்தவி பதில் சொல்லத் தெரியாமல் திகைத்து நின்றாள். சற்று நேரம் பொறுத்து, "அப்பா! அவனுக்கு என்ன தண்டனை விதிப்பீர்கள்?" என்று கேட்டாள். "இப்போது சொல்ல முடியாது குந்தவி! நாளைக்கு தர்மாசனத்தில் உட்கார்ந்து விசாரணை செய்யும் போது என்ன தண்டனை நியாயமென்று தோன்றுகிறதோ, அதைத் தான் அளிப்பேன். நியாயத்திலிருந்து ஒரு அணுவளவேனும் தவறினார்கள் என்ற அவச்சொல் இதுவரையில் பல்லவ வம்சத்துக்கு ஏற்பட்டதில்லை; இனிமேலும் ஏற்படாது" என்றார் சக்கரவர்த்தி.
துறைமுகத்தில்.10
அன்றிரவு குந்தவி சரியாகத் தூங்கவில்லை. சோழ ராஜகுமாரனுடைய சோகமும் கம்பீரமும் பொருந்திய முகம் அவள் மனக்கண்ணின் முன்னால் இடைவிடாமல் தோன்றி அவளுக்குத் தூக்கம் வராமல் செய்தது. நள்ளிரவுக்குப் பிறகு சற்றுக் கண்ணயர்ந்த போது, என்னவெல்லாமோ பயங்கரமான கனவுகள் தோன்றியதால் அவள் திடுக்கிட்டு கண் விழிக்க வேண்டியதாயிற்று. சோழ ராஜகுமாரனைக் கழுத்து வரையில் பூமியில் புதைந்திருக்கிறது. அவனை நோக்கி ஒரு மத யானை அதிவேகமாக ஓடி வருகிறது. அடுத்த நிமிஷம் ஐயோ! யானையின் கால்கள்- தூணையொத்த கால்கள், அந்தச் சுகுமாரனுடைய தலையை இடறிவிடப்போகின்றன! குந்தவி பதைபதைப்புடன் ஓடி வந்து யானை வரும் வழியில் நிற்கிறாள். யானை தன் துதிக்கையினால் அவளை லாவகமாகத் தூக்கித் தன் முதுகின்மேல் வைத்துக் கொண்டு மேலும் ஓடுகிறது. குந்தவி பயங்கரத்துடன் எதிரே பூமியில் புதைந்து நிற்கும் ராஜகுமாரனுடைய முகத்தைப் பார்க்கிறாள்! அந்தச் சமயத்திலும் அந்த முகத்தில் அலட்சியமும் அவமதிப்பும் கலந்து புன்னகை குடிகொண்டிருப்பதைக் காண்கிறாள். கண்டதெல்லாம் கனவென்று தெரிகிறது. ஆனாலும் அவள் உடம்பு வெகுநேரம் நடுங்கிக் கொண்டிருக்கிறது.
சற்று நேரத்துக்கெல்லாம் மறுபடியும் கண்ணயர்ந்து வருகிறது. அரைத் தூக்கத்தில் மீண்டும் பயங்கரமான கனவு. கழு மரங்கள் வரிசையாக நட்டிருக்கின்றன. சோழ ராஜகுமாரனைக் கழுவேற்றுவதற்காகக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். குந்தவி அவ்விடத்துக்கு ஓடோடியும் வருகிறாள். துர்க்கை அம்மனை மனத்தில் தியானித்துக் கொண்டு அந்தக் கழு மரங்கள் பற்றி எரிய வேண்டுமென்று பிராத்திக்கிறாள். அவையெல்லாம் தீப்பற்றி எரிகின்றன. குந்தவி அளவில்லாத மகிழ்ச்சியுடன் ராஜகுமாரன் நின்ற இடத்தை நோக்குகிறாள். அந்தோ! அவனைச் சுற்றிலும் பன்னிரண்டு பல்லவ வீரர்கள் நின்று பன்னிரண்டு ஈட்டிகளை அவன் மீது செலுத்தச் சித்தமாயிருக்கிறார்கள். அடுத்த கணத்தில் ஈட்டிகள் அந்த அரசிளங் குமாரனுடைய மிருதுவான தேகத்தில் பாயப் போகின்றன. குந்தவி "ஐயோ!" என்று கதறிக் கொண்டு கீழே விழுகிறாள். கண் விழித்துப் பார்த்தால், மஞ்சத்திலிருந்து கீழே விழுந்திருப்பதாகத் தெரிகிறது.
இதன் பிறகு குந்தவி தூங்குவதற்குப் பிரயத்தனம் செய்யவில்லை. யானையின் காலில் வைத்து இடறுதல், கழுவேற்றுதல் முதலிய கொடூரமான தண்டனைகளெல்லாம் தன் தகப்பனாரின் தர்ம ராஜ்யத்தில் இல்லையென்பதை ஞாபகப்படுத்திக் கொண்டு தைரியமடைந்தாள். ஒருவாறு இரவு கழிந்து பொழுது விடிந்தது. சக்கரவர்த்தி சபைக்குப் புறப்படும் நேரமும் வந்தது. அவரிடம் மறுபடியும் சோழ ராஜகுமாரனைப் பற்றிப் பேச வேண்டும் என்று குந்தவி துடித்தாள். ஆனால் சக்கரவர்த்தியைப் பரிவாரங்கள் சூழ்ந்திருந்தபடியால் அது சாத்தியமில்லை. அவர் விடை பெற்றுக் கொண்டு கொஞ்சதூரம் சென்றுவிட்டார். ஏதாவது சொல்லாவிட்டால் குந்தவிக்கு நெஞ்சு வெடித்து விடும் போலிருந்தது. "அப்பா! நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும்" என்றாள். நரசிம்மவர்மர் அவளைத் திரும்பிப் பார்த்து, "எதைச் சொல்லுகிறாய், குந்தவி! ஓகோ! சோழ ராஜகுமாரனைக் கடுமையாய்த் தண்டிக்க வேண்டுமென்று சொன்னாயே, அதுதானே! ஞாபகம் இருக்கிறது!" என்று சொல்லிவிட்டுப் பின்னர் திரும்பிப் பார்க்காமலேயே சென்று விட்டார்.
"குந்தவிக்குச் சொல்ல முடியாத ஆத்திரமும் துக்கமும் பொங்கிக் கொண்டு வந்தன. விரைந்து பள்ளியறைக்குச் சென்று மஞ்சத்தில் குப்புறப் படுத்துக் கொண்டு கொஞ்ச நேரம் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள். தன்னாலே தான் ராஜ குமாரன் கடுந்தண்டனை அடையப் போகிறான் என்ற எண்ணம் அவள் மனத்தில் வேரூன்றி விட்டது. இது அவனுக்குத் தெரியும் போது எவ்வளவு தூரம் தன்னை வெறுப்பானென்ற எண்ணம் அவளைப் பெருவேதனைக்கு உள்ளாக்கியது. தான் ஏதாவது செய்துதான் ஆகவேண்டுமென்று அவள் பதைபதைத்தாள். சற்று நேரத்துக்கெல்லாம் அரண்மனை அதிகாரியை அழைத்து வரச் செய்து, "உதயவர்மரே! இன்று சக்கரவர்த்தியின் சபையில் சோழ ராஜகுமாரனுடைய விசாரணை முடிந்ததும் அதன் விவரத்தை உடனே எனக்கு வந்து தெரியப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். ஒரு கண நேரங்கூட இதில் தாமதம் கூடாது" என்றாள். அரண்மனை அதிகாரி "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லிச் சபைக்கு ஆளையும் அனுப்பி வைத்தார்.
குந்தவி அன்று வழக்கமான காரியங்கள் ஒன்றும் செய்யவில்லை. நந்தவனம் சென்று மலர் எடுக்கவில்லை. ஆலயங்களுக்கும் போகவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு இராஜசபையிலிருந்து எப்போது ஆள் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். கடைசியாக அந்த ஆளும் வந்து சேர்ந்தான். விசாரணையையும் முடிவையும் பற்றி விவரமாகக் கூறினான்.
சக்கரவர்த்தி ரொம்பவும் கருணை காட்டினாராம் இப்போதாவது பல்லவ சாம்ராஜ்யத்துக்குப் பணிந்து கப்பம் செலுத்துவதாக ஒப்புக் கொண்டாயானால் உன்னுடைய குற்றத்தை மன்னித்து சோழ ராஜ்யத்துக்கும் முடிசூட்டி வைக்கிறேன்' என்றாராம். அதைச் சோழ ராஜகுமாரன் ஒரே பிடிவாதமாக மறுத்து விட்டானாம். அதோடு நில்லாமல், சக்கரவர்த்தியைத் தன்னுடன் வாட்போர் செய்யும்படி அழைத்தானாம்! அதன்மேல் சக்கரவர்த்தி தீர்ப்பு கூறினாராம்! அவனுடைய இளம்பிராயத்தை முன்னிட்டு அவனுக்கு மரண தண்டனை விதிக்காமல் தேசப் பிரஷ்டதண்டனை விதிப்பதாகவும் மறுபடியும் சோழ நாட்டிற்குள் அவன் பிரவேசித்தால் சிரசாக்கினைக்குள்ளாக வேண்டுமென்றும் சொல்லி உடனே அவனைக் கப்பலேற்றித் தீவாந்திரத்துக்கு அனுப்பிவிடும்படி கட்டளையிட்டாராம். அதன்படி அவனை உடனே மாமல்லபுரம் துறைமுகத்துக்குக் கொண்டுபோய் விட்டார்கள் என்பதையும் இராஜசபையிலிருந்து வந்த ஆள் தெரிவித்தான்.
விக்கிரமனுக்கு மரண தண்டனை விதிக்கப்படவில்லை என்ற செய்தி குந்தவிக்குச் சிறிது ஆறுதல் அளித்தது. ஆனால் அவனைக் கப்பல் ஏற்றி அனுப்பப் போகிறார்கள்; இனிமேல் என்றென்றைக்கும் அவனைத் தான் பார்க்க முடியாமற் போகலாம் என்ற எண்ணம் மிகுந்த துன்பத்தை உண்டாக்கியது. அந்த அரசிளங்குமரன் கப்பலேறிப் போவதற்கு முன் ஒரு தடவை அவனைப் பார்த்துவிட வேண்டுமென்ற ஆவல் பொங்கி எழுந்தது. அவளுடைய உடம்பையும், மனத்தையும், ஆத்மாவையுமே இந்த ஆவல் கவர்ந்து கொண்டது. அந்த இராஜகுமாரனை உடனே பார்க்க வேண்டுமென்று அவளுடைய தேகத்தின் ஒவ்வொரு அணுவும் துடித்தது. அவனைத் தான் நேரில் பார்த்துப் பேசினால் அவனுடைய மனத்தை ஒரு வேளை மாற்றித் தன் தந்தையின் கீழ் சிற்றரசனாயிருக்கச் சம்மதிக்கும்படி செய்யலாம் என்ற ஆசை உள்ளத்தின் ஒரு மூலையில் கிடந்தது.
குந்தவி அக்கணமே தன் தந்தையைப் பார்க்க விரும்பினாள். விக்கிரமனுடைய விசாரணை முடிந்ததும் சக்கரவர்த்தி குதிரை மீதேறி எங்கேயோ போய்விட்டார் என்றும், போன இடந்தெரியாது என்றும் தெரிய வந்தபோது அவளுக்குப் பெரிதும் ஏமாற்றமுண்டாயிற்று. சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். பிறகு அரண்மனை அதிகாரியை அழைத்து, "உதயவர்மரே, மல்லைத் துறைமுகத்துக்கு நான் உடனே போக வேண்டும்! என் தாயாரின் நவரத்தின மாலையைக் காணவில்லை. மாமல்லபுரத்து அரண்மனையில் போட்டுவிட்டு வந்து விட்டேன் போலிருக்கிறது. நானே போய்தான் தேடி எடுக்க வேண்டும்" என்றாள்.
உதயவர்மர் சற்றுத் தயங்கி "சக்கரவர்த்தி வந்தவுடன் போகலாமே!" என்றதும் குந்தவிக்கு வந்த கடுங் கோபத்தைக் கண்டு அவர் மிரண்டு விட்டார். குந்தவி தேவியின் கட்டளைக்கு மறுமொழி சொல்லும் வழக்கம் இதுவரை இல்லையாதலால், மாமல்லபுரத்துக்கு அவ்வளவு அவசரமாகவும் தனியாகவும் அவள் போகும் யோசனை ஆச்சரியம் அளித்தாலும் அரண்மனை அதிகாரி உடனே அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார். சற்று நேரத்துக்கெல்லாம் குந்தவி பரிவாரங்களுடன் பல்லக்கில் மாமல்லபுரத்துக்குப் பிரயாணமானாள். இதுவரையும் இல்லாத வழக்கமாக விரைந்து செல்லுமாறு ஆக்ஞாபித்தாள். கடைசியாக மாமல்லபுரத்தை அடைந்ததும், விக்கிரமனை ஏற்றிக் கொண்ட கப்பலானது துறைமுகத்திலிருந்து அப்போதுதான் பாய் விரித்துக் கிளம்பிக் கொண்டிருந்தது என்று தெரிய வந்தது.
குந்தவியின் பல்லக்கு கடற்கரையை அடைந்த போது அவளுடைய கண் முன்னால் தோன்றிய காட்சி இருதயத்தைப் பிளப்பதாயிருந்தது. சிங்கக் கொடி பறந்த பாய் விரித்த கப்பல் கிளம்பிக் கடலோரமாகப் போய்க் கொண்டிருந்தது. அதில் நேற்று அவள் வீதியில் பார்த்த இராஜகுமாரன் கயிற்றினால் பிணிப்புண்ட கைகளைக் கூப்பிய வண்ணம் நின்று கொண்டிருந்தான். அச்சமயம் அவனுடைய பார்வை கரைமீதுதான் இருந்தது. அவ்வளவு பக்தி விசுவாசத்துடன் யாரைப் பார்க்கிறான் என்று குந்தவி தெரிந்து கொள்ள விரும்பி, கரையில் அவனுடைய பார்வை சென்ற திசையை நோக்கினாள். ஜடாமுடி தரித்த கம்பீரத் தோற்றமுடைய சிவனடியார் ஒருவர் அங்கே நின்று கொண்டிருந்தார். அவர் தமது வலது கரத்தைத் தூக்கி விக்கிரமனை ஆசீர்வதிக்கும் நிலையில் காணப்பட்டார்.
மறுபடியும் குந்தவி விக்கிரமனை நோக்கினாள். ஒரு கணநேரம் அவனுடைய பார்வை இவள் பக்கம் திரும்புவது போலிருந்தது. "இது நிஜந்தானா? அல்லது பிரமையா?" என்று நிச்சயமாய்த் தெரிவதற்குள்ளே, விக்கிரமன் முகத்தைத் திருப்பிக் கொண்டு மீண்டும் சிவனடியார் இருந்த திசையை நோக்கினான். குந்தவிக்கு அப்போது சட்டென்று ஒரு ஞாபகம் வந்தது. சோழ ராஜகுமாரனுக்கு துர்ப்போதனை செய்து அவன் புத்தியைக் கெடுப்