கனடாவில் ரூ.137 கோடி தங்கம் திருட்டு 2 இந்தியர்கள் உட்பட 6 பேர் கைது
19 Apr,2024
கனடா வரலாற்றில் இல்லாத வகையில் நடந்த ரூ.137 கோடி தங்கம்,டாலர்கள் திருட்டு வழக்கில் 2 இந்தியர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ம் தேதி சுவிட்சர்லாந்தில் இருந்து கனடாவின் டொரான்டோவுக்கு விமானத்தில் இரண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன.டொரான்டோ விமான நிலைய சரக்குகள் சேமிப்பு கிடங்கில் பார்சல்கள் வைக்கப்பட்டிருந்தன.
பார்சல்கள் வந்திறங்கிய சிறிது நேரத்தில் ஒருவர் போலியான ஆவணங்களை காட்டி அந்த பார்சல்களை எடுத்து சென்றுள்ளார். அதன்பிறகு இரவில் பார்சல்களை பெற்று கொள்ள சிலர் வந்துள்ளனர். அவர்கள் பார்சல்களுக்கான ஆவணங்களை கொடுத்த போதுதான் ஏற்கனவே எடுத்து சென்றது மோசடி நபர் என தெரியவந்தது. அந்த பார்சலில் 6,600 தங்க கட்டிகள் இருந்துள்ளன. 400 கிலோ எடையுள்ளது. பல கோடி மதிப்புள்ள டாலர்களும் இருந்துள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.137 கோடி. கனடா வரலாற்றில் மிக பெரிய திருட்டு சம்பவமான இதுகுறித்து கனடா போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், தங்கம்,டாலர் திருட்டு வழக்கில் பரம்பால் சித்து(54), அமித் ஜலோட்டா(40), அம்மத் சவுத்ரி(43), அலி ராஸா(37), பிரசாத் பரமலிங்கம்(35) உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் ஒரு நபர் அமெரிக்காவில் ஆயுத கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் பரம்பால் சித்து, அமித் ஜலோட்டோ ஆகியோர் இந்திய வம்சாளியை சேர்ந்தவர்கள்.