இன்னொரு போரை இந்த உலகம் தாங்காது...,, ஐநா பொதுச் செயலாளர் அச்சம்!
14 Apr,2024
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியிருக்கும் நிலையில் இன்னொரு போரை இந்த உலகம் தாங்காது என்று ஐநா பொதுச் செயலாளர் அச்சம் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தருவதாக கூறி சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது அண்மையில் இஸ்ரேல் ஆளில்லா விமானம் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானிய முக்கிய தளபதிகள் கொல்லப்பட்ட நிலையில் இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்திருந்தது.
எந்த நேரமும் ஈரான் - இஸ்ரேல் போர் தொடங்கும் என்று உச்சகட்ட பரபரப்பு நிலவி வந்த நிலையில், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி இஸ்ரேல் மீது ஈரான் தனது தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 ட்ரோன்களை இஸ்ரேல் மீது நேற்று இரவு ஏவியுள்ள ஈரான், ஏவுகணைகளையும் வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து பல்வேறு நாடுகளும் தங்கள் கவலையை தெரிவித்துள்ளன. இந்தப்போரை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளன. ஐநா சபையும் தனது கவலையை தெரிவித்துள்ளது. ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியா குட்டெரஸ் இது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளார்.
இஸ்ரேல் மீது ஈரான் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியிருப்பதை தான் கண்டிப்பதாகவும், இந்த தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தவதாகவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இன்னொரு போரை அந்த பிராந்தியமோ, உலகமோ தாங்காது என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.