நமது பேரண்டம் அணுக்களால் ஆனது என்று அறிவியல் பாடப்புத்தகத்தில் படித்திருப்போம். ஆனால், இன்றைய அறிவியல் சிந்தனையில் இது மிகவும் பழையாதாக, போதாத்தன்மை கொண்டதாகவே பார்க்கப்படுகிறது .
நமது கண்ணுக்கு புலப்படக் கூடிய பருப்பொருள் (அதாவது அணுக்களால் உருவான மரம், மனிதன், பூமி, சூரியக் குடும்பம், பால்வெளி) எண்ணிக்கை வெறும் 5 சத விகிதமாக பார்க்கப்படுகுகிறது. 25% விழுக்காடு பகுதி நாம் கண்ணுக்கு புலப்படாத ஆனால் ஈர்ப்பு விசை மூலம் மட்டுமே அறிந்துகொள்ள கூடிய இருள்பொருள் ஆக்கிரமித்துள்ளது (Dark Matter) . மீதமுள்ள 70 விழுக்காடு பகுதியை இருளாற்றல் என்ற விசை ஆக்கிரமித்து உள்ளது. அதாவது, இந்த பேரண்டத்தில் உள்ள 95% விழுக்காடு பகுதிகள் பற்றிய அறிவோ ! புரிதலோ! நம்மிடம் இல்லை.
பெருவெடிப்புக் கொள்கையின் படி (Big Bang theory), ஒரு சிறு புள்ளியிலிருந்து பேரண்டம் தோற்றம் பெற்றதாக இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். இந்த பேரண்டத்தில் உள்ள இரு பொருள்களுக்கு இடையே ஈர்ப்பு விசை செயல்படுகிறது. இந்த ஈர்ப்பு விசை தான் பூமி, சூரியன், மற்றும் பேரண்டத்தில் உள்ள பரவலான பொருட்கள் அப்படியே இருப்பதற்குப் பங்களிக்கிறது.
முன்னதாக, ஈர்ப்பு விசை தொடர்பான ஐன்ஸ்டீன் சமன்பாடுகள் (Equations) , நமது பேரண்டம் முழுவதுமாக விரிவடைந்து வருகிறது அல்லது சுருங்கி வருகிறது என்ற பொருண்மையை முன்வைத்தது. இருப்பினும், நிலையான பிரபஞ்ச இயக்கம் (Static Universe) என்பதில் உறுதியாக இருந்த அவர், தனது சமன்பாடுகளில் சிறிது மாற்றம் செய்தார். அவர், தனது சமன்பாட்டில், பேரண்டவியல் கான்ஸ்டன்ட் (Cosmological Constant) என்பதனை முன்மொழிந்தார். இந்த, கான்ஸ்டன்ட் ஈர்ப்பு விசைக்கு ஆதரவாக செயல்பட்டு பேரண்டத்தை சமநிலையான வைத்துக் கொள்ள உதவும் ஆற்றல் என்றும் குறிப்பிட்டார்.
இருப்பினும், பேரண்டம் விரிவடைந்து போகிறது என்பதை அடுத்து வந்த எட்வின் ஹபிள் தனது ஆய்வின் மூலம் நிறுவினார். இந்த முடிவை தெரிந்து கொண்ட எய்ன்ஸ்டின், அண்டவியல் கான்ஸ்டன்ட் என்ற முன்மொழிவு தனது வாழ்நாளின் மிக மோசமான தவறு என்று வெளிப்டையாக நொந்து கொண்டார்.
1990-களில் இரண்டு ஆய்வுக்குழுக்கள் வெகு தொலைவிலிருக்கும் சூப்பர் நோவாக்களின் வேகம் எவ்வாறு தணிகிறது என்பதைப் பற்றி ஆராய ஆரம்பித்தனர். அவர்களுக்கு வியப்பு தரும் வகையில் பேரண்டம் விரிவடைவது மட்டுமல்லாமல், விரிவாக்கத்தின் வேகம் தணியாமல் தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருவதும் தெரிய வந்தது. ஈர்ப்பு விசைக்கு எதிராக வேறு ஏதோ ஒன்று அங்கு செயல்படுகிறது என்று அவர்கள் கருதினர். இனம் புரியாத அந்த விசைக்கு இருளாற்றல் (Dark Energy) என்று அவர்கள் பெயர் வைத்தனர். ஐன்ஸ்டீனின் அண்டவியல் கான்ஸ்டன்ட் போன்றே பேரண்டம் முழுவதிலும் இருளாற்றல் விரவி இருக்கிறது. அந்த விசைதான் பேரண்டத்தை மேலும் மேலும் உந்தித் தள்ளி விரிவடையச் செய்கிறது என்று கருதினர்.
பேரண்டம் விரிவிடைந்தாலும், இருளாற்றலின் திடம் (Strength of Dark Energy) குறைவதில்லை என்று கருதப்பட்டு வந்தது. பேரண்டம் விரிவடைய, விரிவடைய இருளாற்றல் ஒரே மாதிரியான திடமாக விரவி வருவதாகவும் கூறப்பட்டது. அண்டம் முழுவதும் விரவி இருக்க இதன் மதிப்பு -1 ஆக இருக்க வேண்டும்.
இருளாற்றல் நிலையற்றது:
இந்நிலையில், இந்த இருளாற்றலின் திடம் எப்போதும் ஒரே மாதிரியாக சமநிலையில் இல்லை என்பதும் அது காலத்திற்கு ஏற்ப மாற்றம் அடையும் என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
1500க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கொண்ட பன்னாட்டுக்குழு 1,500க்கும் மேற்ப்பட்ட Type Ia சூப்பர்நோவாக்களை ஆராய்ந்தது. அவர்கள் ஆராய்ந்து வந்த Type Ia சூப்பர்நோவாக்களில் புறப்படும் ஒளியை வந்து ஆராய்ந்ததில், இருள் ஆற்றலே காரணம் இந்த சூப்பர்நோவாக்கள் நம்மில் இருந்து வெகு தூரமாக சென்று கொண்டிருப்பதும், விரிவடைந்து கொண்டே இருப்பதும் தெரிய வந்துள்ளது. இருப்பினும், இருளாற்றலின் திடம் –0.62 முதல் –0.98 வரை மட்டுமே இருந்துள்ளது.
இந்த ஆய்வு இருளாற்றலின் தன்மைகள் மேலும் சிக்கலானது என்பது உணர்த்தியுள்ளது. பேரண்டம் உருவாகிய காலத்தில் இருந்தே நமது கண்ணுக்குத் தெரியாக இருளாற்றல் விசை இயங்கி வருகிறது. இருப்பினும், பேரண்டத்தின் கால/வெளி எல்லைக்குள் அது நிலையற்றதாகவும், மாறுபாட்டுக்கு உட்பட்டதாகவும் விளங்குகிறது.
நாம் தனித்து விடப்படுவோமா?
இந்த இருளாற்றல், பேரண்டத்தில் உள்ள பொருள்கள் ஒன்றில் இருந்து மற்றொன்றை விளக்கித் தள்ளுகிறது. அப்படி தொடர்ந்து தள்ளுமாயின், நமது சூரிய மண்டலம் அமைந்துள்ள பால்வெளி மண்டலம் (MIilky way Galaxy) ஒரு கடத்தல் அருகில் இருக்கும் அந்திரொமேடா பேரடையை விட்டு வெகு தூரத்திற்கு சென்று விடும். பேரண்டத்தில் இருந்த மற்ற பொருட்கள் நம்மை விட்டு விலகிச் செல்லும். பிற அண்டத்திலிருந்து புறப்படும் ஒளி பூமியை வந்து அடைவதற்கு நீண்ட காலம் பிடிக்கும். உதாரணமாக, ஏழு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே புறப்பட்டு சென்ற அந்திரொமேடா பேரடையின் ஒளியை தான் பூமியில் இருந்து இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதாவது, ஏழு பில்லியன் ஆண்டுகளுக்கு பின்னோக்கிச் சென்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். எனவே, பேரண்டம் விரிவடைய, நாம் அண்டைய பேரடையின் ஒளியை கூட பெறமுடியாத சூழல் ஏற்படலாம். நாம் தனித்துவிடப்படும் சூழல் ஏற்படலாம்.