தெருவில் ஆய் போகும் நாய்களை கட்டுப்படுத்த டிஎன்ஏ சோதனை, உரிமையாளருக்கு அபராதம்
19 Jan,2024
இத்தாலியின் போல்சானோ நகரில் தெருக்களில் மல ஜலம் கழிக்கும் நாய்களை கட்டுப்படுத்த, நகரின் நாய்களுக்கு டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளவும், அசுத்தமாக்கும் நாயின் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் வரை அபதாரம் விதிக்கவும் வழி செய்யும் புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
சர்வதேச அளவில் சுற்றுல தலமாக விளங்குகிறது இத்தாலியின் போல்சானோ நகரம். நகரின் தெருக்களில் தூய்மை பராமரிக்கும் நோக்கில் முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தெருவில் மல ஜலம் கழிக்கும் நாய்களை கட்டுப்படுத்த, அதன் உரிமையாளருக்கு ரூ.1லட்சம் வரை அபராதம் விதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
நாய்களின் கழிவுகளை அடையாளம் காண்பதற்காக நவீன அறிவியலின் துணையை போல்சானியோ நகர நிர்வாகம் நாடியுள்ளது. இதன்படி அனைத்து நாய்களுக்கும் டிஎன்ஏ சோதனை கட்டாயமாக்கப்படுகிறது. இந்த மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் புதிய சட்டம், நகரத்தில் உள்ள சுமார் 45,000 நாய்களின் உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளின் மரபணு விவரங்களை போலீஸ் தரவுத்தளத்தில் பதிவு செய்தாக வேண்டும்.
தெருவின் கழிவுகளை அடையாளம் கண்டு ஆராய்வதற்கு என தனி ஆய்வகம் அடங்கிய வாகன வசதியுடனான ரோந்து படைகள் நியமிக்கப்படுகின்றன. இவை நகர தெருக்களில் எதிர்படும் கழிவுகளை ஆராய்ந்து அதன் பின்னால் இருக்கும் நாயையும், அந்த நாயின் பின்னால் இருக்கும் அதன் உரிமையாளரையும் சடுதியில் கண்டறியும்.
இதற்காக கழிவுகளிலிருந்து சேகரிக்கப்படும் டிஎன்ஏ சான்றுகள், நகர நிர்வாகத்தின் கணினியில் உள்ள தரவுத்தளத்துடன் பொருத்தி, ஆராய்ந்து முடிவு எட்டப்படும். இதன் நிறைவாக நகரின் தூய்மையில் பொறுப்பில்லாத குடிமகன் அடையாளம் காணப்பட்டு, அவருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக ரூ95,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
ஆனால் நடைமுறையில் இந்த ஏற்பாடு கடும் சவால்களை எதிர்கொள்கிறது. முன்னதாக டிசம்பர் 2023 காலக்கெடு விதிக்கப்பட்டதில் சுமார் 5,000 நாய்களின் டிஎன்ஏ தரவுகள் மட்டுமே சமர்பிக்கப்பட்டுள்ளன. இதில் நாய்களின் உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் செலவு, தவறான மற்றும் சுற்றுலா பயணிகளின் நாய்களைக் கையாள்வதில் எழும் நடைமுறைச் சிக்கல்கள், டிஎன்ஏ பரிசோதனைக்கு எதிராக விலங்கு ஆர்வலர்கள் எழுப்பும் தனியுரிமை குரல்கள் ஆகியவை புதிய தடைகளை ஏற்படுத்தி வருகின்றன.