இந்திய விண்வெளி வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்காவின் ’ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் வாயிலாக
03 Jan,2024
இந்திய விண்வெளி வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்காவின் ’ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் வாயிலாக தனது கனரக செயற்கைக்கோளை ஏவ இஸ்ரோ முடிவு செய்துள்ளது.
விண்வெளி ஆய்வில் இதர வல்லரசு தேசங்களுக்கு இணையாகவும், சிலவற்றில் மிஞ்சியும் இந்தியாவின் இஸ்ரோ பாய்ச்சல் காட்டி வருகிறது. சூரியக் குடும்பத்தின் கிரகங்கள் மற்றும் சூரியன் ஆகியவற்றோடு, அதற்கு அப்பால் கருந்துளை வரையிலான ஆராய்ச்சியில் இஸ்ரோ மும்முரம் காட்டி வருகிறது. சுயமான விண்வெளி ஆய்வில் தனிநடை போட்டு வந்த இஸ்ரோ முதல் முறையாக எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய செயற்கைக்கோளை ஏவ இருக்கிறது.
எக்ஸ் தளம்(ட்விட்டர்) மட்டுமன்றி, டெஸ்லா மின் வாகனங்கள், விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் உட்பட பல்வேறு நிறுவனங்களின் அதிபராக எலான் மஸ்க் விளங்குகிறார். அமெரிக்காவின் செயற்கைக்கோள்களை எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமே ஏவி வருகிறது. அமெரிக்காவுக்கு அப்பால் வர்த்தக ரீதியிலும் இதர நாடுகளின் செயற்கைக்கோள்களும் ஸ்பேஸ் எக்ஸ் வாயிலாக ஏவப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் இஸ்ரோவுடன் எலானின் ஸ்பேஸ் எக்ஸ் தற்போது கைகோர்த்துள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கனரக செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதில் சிறப்பு பெற்றவை. இஸ்ரோவின் அதிகபட்ச சுமை 4 டன் என்றளவிலேயே உள்ளது. சுமார் 10 டன் எடையை சுமந்து செல்லும் வகையிலான புதிய தலைமுறை ராக்கெடுக்களை தற்போதுதான் இஸ்ரோ உருவாக்கி வருகிறது. அவை பயன்பாட்டுக்கு வர மேலும் சில வருடங்கள் ஆகலாம்.
இந்த சூழலில் சுமார் 4,700 கிகி எடையிலான ஜிசாட்-20 செயற்கைகோளினை ஏவுவதற்கு இஸ்ரோ தடுமாறியபோது, எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் உதவிக்கரம் நீட்டியுள்ளது. இதற்காக இஸ்ரோவின் வர்த்தக கிளையான ’என்எஸ்ஐஎல்’ நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன்படி ஜிசாட்-20 செயற்கைக்கோள், இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் அமெரிக்காவின் புளோரிடா விண்வெளி தளத்திலிருந்து விண்ணில் பாய உள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பிரபல ஃபால்கான் -9 என்ற கனரக ராக்கெட் இதற்கு உதவக் காத்திருக்கிறது.
இதற்கு முன்னதாகவும் இந்தியாவின் இஸ்ரோ, கனரக செயற்கைக்கோள்களை ஏவி உள்ளது. அப்போதெல்லாம் ஐரோப்பிய விண்வெளி முகமையின் ஏரியன் வரிசை ராக்கெட்டுகள் இந்தியாவின் கனரக செயற்கைக்கோள்களை சுமந்து கொண்டு விண்ணில் பாய்ந்திருக்கின்றன. மேற்படி ஏரியன்-5 ராக்கெட் அண்மையில் ஓய்வு பெற்றதோடு அதன் அடுத்த தலைமுறையான ஏரியன் -6 ராக்கெட் இன்னமும் பயன்பாட்டுக்கு வந்தபாடில்லை. எனவே இந்திய விண்வெளி ஆய்வில் முதல்முறையாக அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் உதவியுடன் இந்தியாவின் ஜிசாட்-20 செயற்கைக்கோள் விண்ணில் பாய இருக்கிறது.