பூனைக்கறி, உணவகம்மூடுவிழா உரிமையாளர் மனம் திருந்தியதில் மூடுவிழா
27 Dec,2023
பூனைக்கறியை விதவிதமான உணவு ரகங்களாக பரிமாறி வந்த வியட்நாம் தேசத்தின் பிரபல உணவகம் ஒன்று, அதன் உரிமையாளர் எடுத்த தார்மீக நிலைப்பாட்டை அடுத்து மூடுவிழா கண்டிருக்கிறது.
வியட்நாம் தேசத்தில் இதர அசைவ ரகங்களுக்கு இணையாக நாய் மற்றும் பூனைக்கறி ரகங்கள் வெகுபிரபலம். இதர நாடுகளில் அரிதானவை என்பதால், வியட்நாம் மக்கள் மட்டுமன்றி சுற்றுலாப்பயணிகள் மத்தியிலும் நாய் மற்றும் பூனைக்கறி பிரபலமாக இருந்தது
அதிலும் பூனை இறைச்சியை வழங்குவதில் பெயர் பெற்ற உணவகமான ஜியா பாவோ, மக்கள் மத்தியில் பெயர் பெற்றிருந்தது. பூனைக்கறியை புதுவிதமான ரகங்களில் சமைப்பதுடன் அவை தொடர்பான விளம்பரங்களை வெளியிடுவதிலும் ஜியா பாவோ உணவகத்தின் உரிமையாளர் பாம் குவோக் டோன் வரவேற்பு பெற்றிருந்தார்.
இந்நிலையில், நடப்பு டிசம்பர் மாதத்தோடு பூனைக்கறி உணவகத்தை மூடப்போவதாக பாம் குவோக் டோன் அறிவித்திருக்கிறார்.ஹ்யூமன் சொசைட்டி இன்டர்நேஷனல் என்ற சேவை அமைப்பு தலையிட்டதன் பெயரில் ஜியோ பாவோ உணவகம் மூடு விழா காண்கிறது.
இதன் மூலம் மாதாந்திரம் 300 பூனைகள் கொல்லப்படும் தனது உணவக நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் பாம் குவோக். கைசவமிருந்த 20 பூனைகளை வனவியல் பல்கலைக்கழகத்தில் அவர் ஒப்படைத்தார்.
இரண்டு குழந்தைகளின் தந்தையான ஃபாம் குவோக் டோன், வியட்நாமின் பிரபல உணவான பூனை இறைச்சியை விற்பதில் முன்னணி வகித்தார். முன்னதாக அவர் வைத்திருந்த சாதாரண உணவகம் போதிய வருமானத்தை ஈட்டாது போனதில், பூனைக்கறிக்கு தாவினார். அதற்கு வரவேற்பு கிடைக்கவே, உலகின் எந்த மூலையிலும் கிடைக்காத பூனைக்கறி ரகங்களை சமைத்து வாடிக்கையாளர்களை திணறடித்தார்.
அவரது இரு குழந்தைகளும் பூனைகளுடன் விரும்பி விளையாட ஆரம்பித்தபோது, பாம் குவோக் டோனுக்கு முதல் தயக்கம் எழுந்தது. அதன் பின்னரான மனமாற்றத்தை பூனைகளை காக்கும் சேவை அமைப்புகள் செயலாற்றின. வியட்நாமில் ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் பூனைகள் உணவுக்காக கொல்லப்படுகின்றன. இவை பெரும்பாலும் திருடப்பட்ட செல்லப்பிராணிகள் மற்றும் தெருவில் அலைபவை.
மென்மையான சுபாவம் கொண்ட பூனைகள் மற்றும் அதன் குட்டிகளை கொதிக்கும் நீரில் மூழ்கடித்து கொல்வார்கள். அந்த கொடூரத்திலிருந்து தற்போது விடுதலை கிடைத்திருப்பதாக பாம் குவோக் டோன் நிம்மதி பெருமூச்சு விடுகிறார். இதர பூனைக்கறி உணவகங்களும் தன்னைப் பார்த்து திருந்த வேண்டும் என்பதோடு, வியட்நாமில் பூனைக்கறிக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்திருக்கிறார். சேவை அமைப்புகள் உதவியோடு மளிகைக் கடை ஒன்றை வைத்து தனது பிழைப்பைத் தொடரவும் இருக்கிறார்.