அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் ஏற்பட்ட தீவிர புயலில் சிக்கிக் கொண்ட 4 மாத குழந்தை ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள அந்த குழந்தையின் பெற்றோர்கள், புயல் தங்கள் வீடு, மொபைல் என அனைத்தையும் அழித்து விட்டதாகவும் தங்கள் குழந்தையின் தொட்டில் புயலோடு சென்று விட்டதாகவும் கூறியுள்ளனர். ஆனால், கடவுள் புண்ணியத்தில் தங்கள் குழந்தை உயிர் பிழைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடுமையான புயல் காற்றில் இந்த குழந்தை தொட்டிலோடு சேர்த்து இழுத்து செல்லப்பட்டுள்ளது. பின்னர் வேரோடு சாய்ந்த மரம் ஒன்றில் தொட்டில் மாட்டி அந்த குழந்தை அதில் பத்திரமாக இருந்துள்ளது. அந்த சமயத்தில் கடுமையான மழையும் பெய்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த குழந்தையின் ஒரு வயதாகும் சகோதரன் மற்றும் பெற்றோர்கள் சிறு காயங்களோடு பத்திரமாக உள்ளனர்.
“ புயல் என் குழந்தையை தொட்டிலோடு அடித்துச் சென்றுவிட்டது, அந்த சமயத்தில் அவன் அதில் தூங்கி கொண்டிருந்தான்” என உள்ளூர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார் மூர்.
அந்த குழந்தையின் தந்தை தொட்டிலை பிடிக்க கடுமையான முயற்சி செய்த போதும் தீவிரமான புயல் அதை இழுத்து சென்றுவிட்டது.
இதுகுறித்து மூர் கூறுகையில், “குழந்தையின் தந்தை தொட்டிலை தன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தி இறுக பற்றிக்கொண்டிருந்தார். ஆனால், புயல் தீவிரமாக வீசியதில் அவர் கீழே சரிந்து தொட்டில் கையை விட்டு நழுவிவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.
அந்த சமயத்தில், தான் தனது ஒரு வயது மகனான ப்ரின்ஸ்டனை இறுக பிடித்து கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார் மூர்.
“ குழந்தையை காப்பாற்று என்று எனக்குள் ஒரு குரல் கேட்டு கொண்டே இருந்தது. நான் ஓடி சென்று அவனை சூழ்ந்து கொண்ட அடுத்த கணமே மேற்கூரை இடிந்து எங்கள் மீது விழுந்து விட்டது. அதற்குள் நாங்கள் புதைந்து விட்டோம். என்னால் மூச்சு கூட விட முடியவில்லை” என்று கூறியுள்ளார் மூர்.
புயல் கடந்த பிறகு இடிபாடுகளுக்குள் இருந்து ப்ரின்ஸ்டனை மீட்டுள்ளார் மூர். பின்னர் அவரும், குழந்தையின் தந்தையும் இணைந்து இளைய மகனை தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.
கடும் மழையில் அந்த குழந்தையை தேடி கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு மரத்தில் அந்த குழந்தையின் தொட்டில் தொங்கி கொண்டிருந்திருக்கிறது. அதில் குழந்தை உயிருடன் பத்திரமாக இருந்துள்ளது.
“என்னால் குழந்தையை உயிருடன் பார்க்க முடியாது, அவனை கண்டுபிடிக்கவே முடியாது என்றெல்லாம் நான் பயந்து விட்டேன், ஆனால் கடவுளின் கருணையில் அவனை உயிரோடு மீட்டு விட்டோம்” என்று கூறுகிறார் மூர்
புயலால் தங்களது கார் மற்றும் வீட்டை இழந்த மூரின் குடும்பத்திற்கு உதவ மூரின் சகோதரி கெய்ட்லின் கோஃபவுண்ட்மீ (GoFundMe) - ஐ தொடங்கியுள்ளார்.
மூரும் அவரின் குழந்தைகளும் சிறு காயங்களால் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், குழந்தையின் தந்தைக்கு கை மற்றும் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் கெய்ட்லின்.
கோஃபவுண்ட்மீ தகவல்படி, யாரோ மரத்தில் அமர வைத்தது போல இந்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஏதோ தேவதை வந்து அவனை மீட்டு அங்கு பத்திரமாக வைத்தது போல் உள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது.
குழந்தை மட்டும் இல்லாமல் போயிருந்தால் என் வாழ்வே மோசமாக போயிருக்கும், குழந்தையின் தந்தைக்கும் இதே நிலைதான் என்று கூறியுள்ளார் மூர்.