உறைய வைக்கும் பனிப்பொழிவு - விமான சேவைகளை ரத்து செய்தது ஜெர்மனி
05 Dec,2023
ஜெர்மனி நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், விமான ஓடுபாதைகளில் பனி படர்ந்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி மியுனிச் நகரில் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நிலவி வரும் இந்த பனிப்பொழிவு காரணமாக, ரயில் பாதைகளில் பனி படர்ந்துள்ளதால், அதிவேக ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கடும் பனிப்பொழிவு காரணமாக நாட்டின் 2வது மிகப்பெரிய விமான நிலையமான மியூனிச் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விமான பயணித்திற்காக, விமான நிலையம் வந்த பலரும் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போதையை சூழலில் ஓடுதளத்தில் படர்ந்துள்ள பனியை நீக்கி, விமான சேவையை துவங்குவதே முதல் நோக்கம் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மனி மட்டுமின்றி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளிலும் பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. இந்த நாடுகளில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், பனிச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சில நாட்களுக்கு பனிச்சறுக்கு மையங்களுக்கு செல்ல வேண்டாம் என அந்நாட்டு அரசுகள் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றன.