சிறுவனை அடித்துக் கொன்ற பெண் காப்பாளருக்கு விளக்கமறியல்!
04 Dec,2023
கல்முனையில் சிறுவனை தும்புத்தடியால் அடித்துக் கொன்ற, பெண் காப்பாளருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான சிறுவர் நன்நடத்தைப் பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று இன்று தினம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் மரணமடைந்த சிறுவனின் தந்தை ஆஜராகி இருந்ததுடன் பொலிஸார் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணிகளின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு 28 வயதுடைய குறித்த பாடசாலையின் மேற்பார்வையாளரான பிறின்ஸி புலேந்திரன் என்பவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, கல்முனையில் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் 14 வயதான சிறுவன், விக்கெட் கம்புகள் மற்றும் தும்புத்தடியால் தாக்கி, படுகொலைச் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அந்த பாடசாலையின் பெண் காப்பாளருக்கு எவ்விதமான தொழில் தகுதியும் இல்லையென மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க, பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
அந்த சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனத் தெரிவித்த கீதா குமாரசிங்க, பெண் காப்பாளர், வீதியில் செல்லும் ஒருவரா? என தேடிப்பார்த்த போது, அவர் எந்தவொரு பரீட்சையிலும் சித்தியடையாதவர் என்றும் தொழில் தகுதி இல்லாதவர் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள சிறுவர் நன்னடத்தை பாடசாலைகளில் கடமையாற்றும் அதிகாரிகளுக்கு மிகவிரையில், பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.