அமெரிக்காவில் பாலஸ்தீன மாணவர்கள் 3 பேர் மீது துப்பாக்கிச்சூடு
27 Nov,2023
வாஷிங்டன்: அமெரிக்காவில் 3 பாலஸ்தீன மாணவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். கடந்த அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த 4 நாட்களாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இருதரப்பிலும் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் வெர்மான்ட் நகரில் 3 பாலஸ்தீன மாணவர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த மாணவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இருவருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் தீயணைப்புத் துறையால் வெர்மான்ட் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், மூன்றாவது நபரும் அதே மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. கவலைக்கிடமாக உள்ள ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அமெரிக்க அதிகாரிகளுக்கு பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.