அக்கா கணவரை ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்த மைத்துனர்..
04 Nov,2023
.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தேவர் காலணியைச் சேர்ந்தவர் ராஜேஷ்(40). இவருக்கு சாந்தி என்ற மனைவியும், தரணிஸ்ரீ, தாரணி என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜேஷ் சரிவர வேலைக்குச் செல்லாததால் தம்பதியருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவன், மனைவி இருவரும் பிரிந்து கடந்த 3 வருடங்களாக தனியே வாழ்ந்து வருகின்றனர்.
இதனிடையே மனைவியை பிரிந்த ராஜேஷ் வேறோரு பெண்ணுடன் திருமணத்தை தாண்டிய உறவு வைத்திருந்தாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த சாந்தியின் சித்தப்பா பாலசுப்பிரமணியம் என்பவரின் மகன் சிவமூர்த்தி (29) ராஜேஷை கண்டித்துள்ளார். தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வரும் சிவமூர்த்தி, தனது அக்கா சாந்தியுடன் வாழாமல் வேறோரு பெண்ணுடன் இருக்கும் தொடர்பை கைவிடுமாறு ராஜேஷிடம் கூறியுள்ளார்.
.
இதனை ஏற்க மறுத்த ராஜேஷ், சிவமூர்த்தியிடம் தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவமூர்த்தி இன்று காலை போடி சுப்பிரமணியர் கோயில் வடக்குத் தெருவில் உள்ள மார்க்கெட் அருகே சென்று கொண்டிருந்த ராஜேஷை இறைச்சி வெட்டும் கத்தியால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்துள்ளார்.
.
ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனிடையே கொலை செய்த சிவமூர்த்தி தாமகவே சென்று போடி நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். பின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
.
மேலும் இது தொடர்பாக ராஜேஷிடம் போடி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் முன் விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் போடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.