‘குண்டு மழைக்கு மத்தியில் குழந்தையை எப்படிப் பெற்றெடுப்போம்?’ - காசா கர்ப்பிணிகளின் .
27 Oct,2023
காசா நகர்: "திரும்பிய பக்கமெல்லாம் கட்டிட இடிபாடுகள். எப்போது எங்கு குண்டு விழும் என்று தெரியாது. அவசரமாக எல்லோரும் எங்கேயாவது ஓடினாலும் கூட ஓட முடியாத நிலையில் இருக்கும் நாங்கள் குண்டு மழைக்கு மத்தியில் குழந்தையை எப்படிப் பெற்றெடுப்போம்" என வேதனையுடன் கேட்கிறார் காசாவில் உள்ள கர்ப்பிணிப் பெண்ணான அப் பார்பரி.
நிவீன் அல் பார்பரி என்ற அந்த 33 வயது கர்ப்பிணிப் பெண் கண்ணீர் மல்கக் கூறியது: “ஒவ்வொரு முறை குண்டு சத்தம் கேட்கும்போதும் எனது அடிவயிற்றில் வலி ஏற்படுகிறது. பயம் அதிகரிக்கிறது. எனக்கு கர்ப்பக் கால சர்க்கரை வியாதி உள்ளது. கடந்த அக்டோபர் 7-ஆம் தேதிக்கு முன்னர் நான் தொடர்ச்சியாக மருத்துவமனை சென்றுவந்தேன். ஆனால் இப்போது எனக்கு எந்த மருத்துவ உதவியும் இல்லை.
இங்கே குண்டு மழை பொழிவதை நிற்கவே இல்லை. அந்தக் குண்டுகள் கட்டிடம், மனிதர்கள், மரங்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை. ஒவ்வொரு நாளும் என் யோசனை ஒன்றே ஒன்றுதான். நான் எங்கே எப்படி குழந்தையைப் பெற்றெடுப்பேன் என்றே அந்த யோசனை நீள்கிறது. அதை நினைத்து அஞ்சி அஞ்சியே வாழ்கிறேன். அடுத்த நொடி யார் வீட்டின் மீது குண்டுகள் விழும். யார் யாரெல்லாம் உயிரோடு இருப்போம் என்று எனக்கு எதுவும் தெரியவில்லை. நானும் என் குழந்தையும் பாதுகாப்பாக இருக்கிறோம் என நம்புகிறேன்.
போரில் உயிரிழக்கும் காயமடையும் குழந்தைகளின் முகங்கள், காயங்களுடன் இருக்கும் குழந்தைகளைப் பார்க்கும்போது என் கர்ப்பத்தில் உள்ள குழந்தையின் எதிர்காலத்தை நினைத்து நான் அஞ்சுகிறேன். இந்த ஏவுகணைகளில் இருந்து குண்டுகளில் இருந்து எதிராகாலக் குழந்தைகளாவது தப்பிக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனையாக உள்ளது. இவ்வாறு அவ்வாறு கூறினார்.