முன்பு நிலத்தில் வாழ்ந்த பெரிய விலங்குகளை டைனோசிபாலியர்கள்
14 Sep,2023
பூமியில் வாழ்ந்த பழைமையான உயிரினத்தில் முதன்மையாக இடம்பெறுவது டைனோசர் ஆகத்தான் இருக்கும். டைனோசரின் அழிவுக்கு பின்புதான் மனித இனம் தோற்றம் பெற்றது என்று நம்பப்படுகிறது. இந்நிலையில், டைனோசர்களுக்கும் முன்பாக ஒரு பெரிய உயிரினம் பூமியில் வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளது.
பாம்பஃபோனஸ் பிக்சை (Pampaphoneus biccai) என்று குறிப்பிடப்படும் உயிரினம் பூமியில் வாழ்ந்த மிகவும் பழமையான மற்றும் பெரிய அளவை கொண்டதாகக் கருதப்படுகிறது. இந்த உயிரினம் தென் அமெரிக்க நிலப்பகுதியில் வாழ்ந்ததற்கான சான்றுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
தென் அமெரிக்காவில் உள்ள பிரேசிலில் சுமார் 265 மில்லியன் வருடப் பழமையான பாம்பஃபோனஸ் பிக்சை உயிரினத்தின் புதைபடிமங்கள் மற்றும் மண்டை ஓடுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதைப் பற்றிய குறிப்பை லின்னியன் சொசைட்டியின் விலங்கியல் இதழில் வெளியிட்டுள்ளனர்.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி சுமார் 40 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்பு தென் அமெரிக்கப் பகுதிகளில் வாழ்ந்த மிகப் பெரிய மற்றும் ஆபத்தான விலங்காக பாம்பஃபோனஸ் பிக்சை கருதப்படுகிறது. இந்த மிருகத்தின் புதைபடிமங்களில் ஒரு மண்டையோடு மற்றும் கால், கை எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வரலாற்றின் படி பூமி ஒரு முறை கொடூரமான அழிவைக் கண்டுள்ளது. அப்போது சுமார் 80 சதவீத உயிரினங்கள் அழிந்துள்ளன. இந்த உயிரினமும் அந்த நிகழ்வில் வேரோடு அழிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அழிவிற்கு முன்பு நிலத்தில் வாழ்ந்த பெரிய விலங்குகளை டைனோசிபாலியர்கள் (dinocephalians) என்று குறிப்பிடுகின்றனர். அதில் தாவர உண்ணிகள் மாற்றும் மாமிச உண்ணிகள் இரண்டும் அடங்கும். இந்த பெரிய உயிரினங்கள் தென் அமெரிக்கா மற்றும் ரஷ்யா பகுதிகளில் வாழ்ந்துள்ளது. இதர பகுதிகளில் இந்த உயிரினங்கள் வாழ்ந்த சான்றுகள் அரிதாகவே இருக்கின்றன.
டைனோசிபாலியர்கள் வகையில் ஒரு இனம்தான் பாம்பஃபோனஸ் பிக்சை. இவை பிரேசில் பகுதியில் வாழ்ந்துள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடு, இதுவரை கண்டறிந்த புதைப்படிமங்களில் மிகப் பெரியதாகும். மேலும், இது இந்த வகையின் இரண்டாவது மண்டையோடு ஆகும். இதன் மூலம் இந்த குறிப்பிட்ட மிருகத்தைப் பற்றித் தெளிவான ஆய்வை மேற்கொள்ள முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றன.
பாம்பஃபோனஸ் பிக்சையின் உடலமைப்பு, அதனின் தன்மை மற்றும் உணவு முறை போன்றவற்றைக் கண்டறியமுடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.