கர்ப்பமாக இருக்கும் போது மார்பிலிருந்து பால் சுரந்தால் குழந்தைக்கு ஆபத்தா..?
08 Sep,2023
கர்ப்ப காலத்தில், குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்தை தருவதற்காகவும் ,குழந்தை பிறந்த பிறகு அது ஆரோக்கியமாக இருப்பதற்காகவும் ஏராளமான மாற்றங்கள் தாயினுடைய உடலில், கரு உருவானதிலிருந்து துவங்கிவிடும். அதில் ஒரு முக்கியமான மாற்றம் மற்றும் வளர்ச்சி தாயினுடைய மார்பகத்தில் ஏற்படுவதாகும். அதிலும் முதல் குழந்தை எனில் அந்த மாற்றமும் வளர்ச்சியும் தெளிவாக தெரியும் . ஏனெனில் சிறிதாக இருக்கும் பால் சுரப்பிகள் நல்ல ரத்த ஓட்டத்தை பெற்று பெரியதாகும். இதனால் மார்பகத்தினுடைய அளவுகளும் சில இன்சுகள் அதிகரிக்கலாம்.
இந்த ரத்த ஓட்ட அதிகரிப்பு மற்றும் பால் சுரப்பிகள் வேண்டிய வளர்ச்சியால், ஒரு சிலருக்கு ஐந்தாவது மாதத்தில் இருந்து லேசாக நீர் போன்று சுரக்க துவங்கும் . குழந்தை பிரசவமான பிறகு முதலில் சுரக்கும் பால் நீர் போன்றிருக்கும். அதற்கு கொலஸ்ட்ரம் என்று பெயர் . அது போன்றதொரு லேசான சுரப்பு தான் கர்ப்பமாக இருக்கக்கூடிய காலத்தில் வரக்கூடியதும்.
லேசாக நீர் போன்ற சுரப்பு இருப்பின் அதற்கண்டு பயப்பட தேவையில்லை. அதில் ரத்தம் கலந்து இருந்தாலோ. அல்லது வலி இருந்தாலோ அல்லது பால் போன்று அதிகமாக ஏற்பட்டாலோ மருத்துவரிடம் சென்று பரிசோதித்து கொள்வது சரியாகும்.
லேசான சுரப்பு இருக்கக்கூடிய பெண்கள் பிரஸ்ட் பேட் ( breast pads) எனப்படும் மார்பக அணையாடைகளை அணிந்து கொள்ளலாம். அவை எல்லா மருந்தகங்களிலும் கிடைக்கும். அவற்றை அணிந்து கொள்ளும் பொழுது ஈர உணர்வு இருக்காது. சௌகரியமாக உணரலாம். ஒரு சிலருக்கு லேசான அரிப்பு ஏற்படலாம் அல்லது வித்தியாசமான ஒரு உணர்வும் ஏற்படலாம். அவ்வாறு இருப்பின் தேவைப்பட்டால் அரிப்பு குறைவதற்காக இருக்கக்கூடிய களிம்புகளை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பயன்படுத்தலாம்.
இன்னொரு முக்கியமான குறிப்பு, கர்ப்ப காலத்தில் சரியான அளவுள்ள உள்ளாடைகளை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். கர்ப்ப காலத்தில் முன்பே குறிப்பிட்டது போல மார்பகங்கள் சில இன்சுகள் வளர்ச்சி அதிகரிப்பதால் சரியான அளவுள்ள உள்ளாடைகளை பருத்தியாலான ஆன உள்ளாடைகளை தேர்ந்தெடுத்து அணிவது மிக மிக அவசியம்.