இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர், விலை குறைவாக இருக்கிறதே என ஒரு பொருளை வாங்கப்போய், அதனால் பல மோசமான, பயங்கரமான அனுபவத்திற்கு ஆளாகியுள்ளார்.
ஷாப்பிங் செல்கையில் தள்ளுபடி விலையில் பல பொருட்கள் கிடைத்தால் நாம் வாங்காமல் விடுவோமா? குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக இதுவரை வாங்காத பொருட்களையெல்லாம் அன்றுதான் வாங்குவோம். இப்படிதான் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர், விலை குறைவாக இருக்கிறதே என ஒரு பொருளை வாங்கப்போய், அதனால் பல மோசமான, பயங்கரமான அனுபவத்திற்கு ஆளாகியுள்ளார்.
ஜோ எலியட் ப்ரவுன் என்பவர் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தபோது, பளிச்சென்ற சிவப்பு உடை அணிந்த சிறு பெண்ணின் உருவப்படம் ஒன்று அவரை வெகுவாக கவர்ந்துள்ளது. பார்ப்பதற்கு மர்மமான படம் போல் தெரிந்தாலும், குறைந்த விலையில் ( இந்திய மதிப்பில் ரூ,2000 ) கிடைத்ததால் அதை வாங்கிக் கொண்டார். ஆனால் கடையிலிருந்த பணியாளர் இதை வாங்கும் போது எச்சரித்துள்ளார். இந்த ஓவியத்தில் சாபம் இருப்பதாகவும், ஏதோவொரு மர்மமான சக்தி இதிலுள்ளதாக கூறி, ஏற்கனவே இரண்டு முறை எங்கள் கடைக்கு திரும்ப வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.ஆனால் தன் தாய் ஜேனேயின் வற்புறுத்தலைத் தொடர்ந்து, இந்த ஓவியத்தை வாங்கிக் கொண்டார் ஜோ.
“உண்மையில் அந்த ஓவியம் என் அம்மாவை வசியம் செய்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்” என்கிறார் ஜோ. அந்த உருவப்படத்தை வீட்டில் மாட்டிய அடுத்த நிமிஷமே, அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் பயங்கரமான அனுபவங்கள் ஒவ்வொன்றாக ஏற்படத் தொடங்கியுள்ளன. வீட்டிற்குள் கெட்ட ஆவி உலவியது போன்ற உணர்வை அந்த ஓவியத்தின் இருப்பு அவர்களுக்கு உண்டாக்கியுள்ளது.
முதலில் அவர்களின் நாய், இந்த ஓவியத்தை பார்த்து குரைக்கத் தொடங்கியுள்ளதோடு அதன் அருகிலேயே செல்ல மறுத்துள்ளது. அதற்கடுத்து ஜோவின் தாயாருக்கு ஒவ்வொரு உடல்நலக் கோளாறுகளும் வரிசைகட்டி வந்துள்ளன. இதனால் கோடை காலத்தில் கூட அவர் ஸ்வெட்டர் போட்டுக் கொண்டிருந்தார். ஆனாலும் ஜேனேய் இந்த உருவப்படத்தை தங்கள் குலதெய்வமாகவே கருதினார். சிறிது நாட்களிலேயே வித்தியாசமான செயல்களை செய்ய ஆரம்பித்துள்ளார். அந்த உருவ படத்தில் உள்ள சிறுமி கவலையாக இருப்பதாகவும், அவளை நான்தான் சந்தோஷப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். அடிக்கடி யாரோ கதவை தட்டுவது போன்ற பிரமையும் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், தன் தாயார் இப்படி நடந்து கொள்வதற்கு உருவப்படத்தில் உள்ள மர்மமான சக்திதான் காரணம் என நம்பத் தொடங்கினார் ஜோ. ஒருநாள் இரவு இடியும் மின்னலும் அதிகமாக இருந்த போது, தங்கள் வீட்டின் அருகே கருமையான நிறத்தில் ஒரு உருவம் நின்று கொண்டிருப்பது போல் ஜோவும் அவரது கணவரும் பார்த்துள்ளனர். இதில் பீதியடைந்த ஜோ, உடனடியாக அந்த ஓவியத்தை மீண்டும் கடையிலேயே ஒப்படைக்க முடிவு செய்தார்.
இந்த ஓவியத்தில் உள்ள சாபமே, தங்கள் குடும்பத்தை பிடித்துள்ளதாக கருதிய ஜோ, அதை கடைக்கு எடுத்துச் செல்கையில் அவரது கார் டயரில் ஆணி ஏறியுள்ளது. ஒரு வழியாக அந்த ஓவியத்தை கடையில் கொடுத்துவிட்டு வந்த பிறகு, மீண்டு அந்த ஓவியத்தை வாங்க அவருக்குள் உந்துதல் ஏற்பட்டுள்ளது. மறுபடியும் அதை வாங்கி வந்துவிட்டார். என்ன செய்தாலும் இந்த ஓவியத்தின் சாபம் நம்மைவிட்டு போகாது போல என நினைத்த ஜோ, மந்திரித்த கயிறுகளை வீடு முழுவதும் கட்டி வைத்தார். பூசாரிகளை அழைத்து வந்து பூஜைகள் செய்தார். அந்த ஓவியத்தை மூடி பெட்டிக்குள் அடைத்து வைத்து பார்த்தார். ஆனாலும் அவருக்கு இன்னும் திருப்தி வரவில்லை.
இந்த ஓவியத்தால் தங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட சாபத்தை போக்க வேறு யாராவது கிடைப்பார்களா என இப்போது தேடிக் கொண்டிருக்கிறார் ஜோ. இந்த மர்மமான ஓவியத்தை பற்றி சொல்லப்படும் பயங்கரமான விஷயங்கள் ஜோவின் குடும்பத்தை மட்டுமல்லாமல் இணையவாசிகளையும் வசியப்படுத்தியுள்ளது என்றுதான் கூற வேண்டும்.