நரம்பு மண்டல சிகிச்சை
13 Aug,2023
மூளையில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டோ அல்லது ரத்தக் கசிவாலோ நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, பக்கவாத பாதிப்பிற்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பக்கவாத பாதிப்பிற்கு ஆளாகுபவர்களில் பாதிப்பு ஏற்பட்ட தருணத்திலிருந்து எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்களுக்கு விரைவாக அழிந்து கொண்டிருக்கும் நரம்பு செல்களை பாதுகாத்து உடல் இயக்கத்தை மீட்க இயலும்.
இந்நிலையில் நியூரோ ரீஹாபிலிடேஷன் எனப்படும் நரம்பு மண்டல புத்தாக்க சிகிச்சையின் மூலம் பாதிக்கப்பட்ட நரம்பு மண்டலத்தின் பணிகளை ஓரளவிற்கு இயல்பு நிலை திரும்ப செயல்பட இயலும் என மருத்துவர் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
எம்முடைய நரம்பு மண்டலத்தில் உள்ள செல்கள் ஏதேனும் ஒரு காரணத்தினால் அழிய தொடங்கினாலோ அல்லது சேதப்படுத்தப்பட்டு சிதைந்தாலோ அவற்றினை மீண்டும் உருவாக்க இயலாது.
ஆனால் பாதிக்கப்பட்ட நரம்பு செல்களுக்கு அருகே இருக்கும் நரம்புகளை, நியூரோ ரீஹாபிலிடேஷன் எனும் சிகிச்சை மூலம் புதிதாக இணைப்புகளை ஏற்படுத்தினால் பாதிக்கப்படுவதற்கு முன் நரம்பு செல்கள் எம்மாதிரியான பணிகளை மேற்கொண்டதோ, அத்தகைய பணிகளை இத்தகைய புத்தாக்க சிகிச்சையின் மூலம் மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர இயலும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும் இந்த நியூரோ ரீஹாபிலிடேஷன் எனும் சிகிச்சை பக்கவாத பாதிப்பு ஏற்பட்ட ஆறு மாதங்களுக்குள் மேற்கொண்டால்தான் இதற்கான பலன்கள் முழுமையாக கிடைக்கும். அதன் பிறகு இத்தகைய சிகிச்சை மேற்கொண்டால் நிறைவான பலன்களை வழங்காது.
குறிப்பாக பக்கவாத பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இத்தகைய நியூரோ ரீஹாபிலிடேஷன் சிகிச்சை நல்ல பலனை வழங்கி வருவதாக நோயாளிகள் தெரிவிக்கிறார்கள். மூளையில் ஏற்படும் நரம்பியல் மண்டல பாதிப்புகளுக்கு இத்தகைய சிகிச்சை மேற்கொண்டால் நிவாரணம் கிடைக்கும்.