நீரிழிவு நோயாளிகளுக்கு ஒட்டகப் பால் பலனளிக்கிறதா?
23 Jul,2023
-
இன்றைய திகதியில் தெற்காசிய நாடுகளில் சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் இரண்டு மடங்கு வேகத்தில் அதிகரிப்பதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
அதே தருணத்தில் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் அவசியத்தை மருத்துவர்கள் தொடர்ச்சியாக மக்களிடத்தில் வலியுறுத்தி வருகிறார்கள்.
இது தொடர்பான முழுமையான விழிப்புணர்வு மக்களிடத்தில் சென்றடையவில்லை என்றும் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ஒட்டகப் பாலை அருந்தினால் சர்க்கரை நோய் குணமாகும் என்றொரு கருத்து மக்களிடத்தில் சமூக வலைதளங்கள் மூலமாக வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக மருத்துவ நிபுணர்களை சந்தித்து விளக்கம் கேட்டோம்.
அதற்கு மருத்துவ நிபுணர்கள் பதிலளிக்கையில், ''ஒட்டகப் பால் அருந்தினால் சர்க்கரையின் அளவு குறையும் மற்றும் சர்க்கரை நோய் குணமாகும் என்பது இதுவரை மருத்துவ அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால் அதே தருணத்தில் இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒட்டக பாலை வழங்கி ஆய்வு நிகழ்த்தினர். இதில் இன்சுலின் சுரக்காத டைப் 1 நோயாளிகளுக்கு ஒட்டகப்பால் ஓரளவு நிவாரணத்தை வழங்குகிறது என கண்டறிந்திருக்கிறார்கள்.
ஆனால் இது தொடர்பான ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதே தருணத்தில் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒட்டகப் பால் எந்தவித பலனையும் எதிர்பார்த்த அளவிற்கு வழங்கவில்லை என்றும் கண்டறியப்பட்டிருக்கிறது.
இதனால் டைப் 2 சர்க்கரை நோயாளிகள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்தியல் சிகிச்சை, உணவு முறை, உடற்பயிற்சி ஆகியவற்றை பின்பற்றி ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
டைப் 1 சர்க்கரை நோயாளிகள் உங்களது குடும்ப மருத்துவரின் ஆலோசனையை பெற்று, பரிட்சார்த்தமான முறையில் ஒட்டக பாலை அருந்தலாம். ஒவ்வாமை உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட்டால்.. ஒட்டகப் பால் அருந்துவதை தவிர்த்து விட்டு, வழக்கம் போல் ஊசி மூலம் இன்சுலினை செலுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் எம்முடைய நாட்டில் ஒட்டகப்பால் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. இதனால் இது தொடர்பான எண்ணத்தை கைவிட்டு, வைத்தியர்கள் பரிந்துரைக்கும் சிகிச்சை முறையை உறுதியாகப் பின்பற்றி, இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது தான் சரியான தீர்வாகும்.