60 வருடங்கள்.. 21900-க்கும் மேற்பட்ட இரவுகள்.. தூங்காமல் வாழ்ந்து வரும் முதியவரின் கதை
04 Jul,2023
தூங்காமல் இருக்கும் மனிதர் தூங்காமல் இருக்கும் மனிதர்
சுமார் 60 ஆண்டுகளாக ஒருவர் தூங்காமல் இருக்கிறார் என்று கூறினால், உங்களால் நம்பமுடிகிறதா? ஆம், அப்படி ஒருவர் இருக்கிறார் அவரைப் பற்றி பார்ப்போம்.
நமக்கு ஒருநாள் தூங்கவில்லை என்றாலே பித்துபிடித்தது போல் ஆகிவிடுகிறது. ஆனால் ஒருவர் சுமார் 60 ஆண்டுகளாக தூங்காமல் இருக்கிறார். இப்படி இத்தனை வருடங்கள் தூங்காமல் இருக்க காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்ள பலர் ஆர்வமாக உள்ளனர். அவரின் கதைப் பற்றி தெரிந்துகொள்ளுவோம்.
அவரது பெயர் தாய் என்கோக் (Thai Ngoc). வியட்நாம் நாட்டைச் சேர்ந்த இவருக்கு 80 வயதாகிறது. இவர் 1962-ம் ஆண்டிலிருந்து, சுமார் அறுபது வருடங்களாக தூங்காமல் வாழ்ந்து வருகிறார். சிறுவயதில் இவருக்கு காய்ச்சல் வந்தபோது தூங்க முடியாமல் தவித்திருக்கிறார். அன்றிலிருந்து இத்தனை ஆண்டுகளாக தூங்காமலேயே தனது வாழ்க்கையை ஓட்டி வருகிறார். இதுகுறித்து என்கோக்கின் குடும்பத்தினர்கள், நண்பர்கள், வீட்டின் அருகே வசிப்பவர்கள் என பலரிடம் கேட்டாலும், அவர் தூங்கி நாங்கள் பார்த்ததேயில்லை என கூறுகிறார்கள்.
இது எப்படி சாத்தியம் என என்கோக்கின் உடலை பல மருத்துவர்கள் சோதித்துப் பார்த்துவிட்டார்கள். இவர் ஒருநாளாவது தூங்கி இருப்பார் என அவர்களாலும் நிரூபிக்க முடியவில்லை. இவர் நிரந்தரமாக தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் எனக் கூறி மருத்துவர்களும் சென்று விட்டார்கள். ஒருநாள் தூங்காமல் இருந்தாலே நமக்கெல்லாம் பல பிரச்சனைகள் உடலில் ஏற்படும். இத்தனை ஆண்டுகளில் ஜாக்கிற்கு உடல்நலக் கோளாறு வந்ததே இல்லையா என்ன? இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இதுவரை ஒருநாள் கூட மருத்துவ சிகிச்சை எடுக்கும் அளவிற்கு எந்தவித நோயும் அவருக்கு ஏற்படவில்லை.
சமீபத்தில் யூடியூபர் ட்ரூவ் பின்ஸ்கி வியட்நாம் சென்று தாய் என்கோக்கை சந்தித்தது குறித்து ஆன்லைனில் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் தெரிவித்ததாவது, போரினால் ஏற்பட்ட மன அதிர்ச்சி காரணமாக இருவருக்கு இப்படி ஆகியிருக்கலாம் என ஒருசிலர் கூறுகின்றனர். இவருக்கு இருப்பது அரிதான நோய் என மற்றவர்கள் நம்புகிறார்கள். எது எப்படியோ, அமெரிக்காவில் இருந்து வியட்நாமிற்கு வந்து அவரோடு ஒரு இரவு முழுவதும் தங்கிவிட்டேன். உண்மையிலேயே அவர் ஒரு நொடி கூட கண் இமையை மூடவில்லை. அதிகாலை 4 மணி வாக்கில் சற்று கண் மூட நினைத்தாலும் அவரால் தூங்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.
தாய் என்கோக் எல்லாரும் போல் தூங்க முயற்சிக்கிறார். ஆனால் அவரால் முடியவில்லை. தனது ஆற்றலுக்கும் சக்திக்கும் க்ரீன் டீயும் அரிசி வைனும் தான் காரணம் என்று அவர் கூறியுள்ளார். வியட்நாம் போரில் என்கோக்கின் கை காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.